Tuesday, June 12, 2007

வலைப்பதிவுலகின் விக்கிரமாதித்தன்!



ஹலோ யாரு அது?....

கோன் ஹை?...

மீரு எவரண்டி?...

who are you?...
...

...)))<--)))<--)))<---."வவ்வால்"-->(((-->(((-->((( ...

வவ்வாலா..ஆஆ....ஆஹ்... வந்துடான்யா .....வந்துட்டான்...

பேர கேட்டாலே ச்சும்மா அதிருதுல .... அதான் வவ்வால்...

(எந்த அதிர்வையும் நீங்கள் உணரவில்லை என்றால் உங்களுக்கு பக்கவாதம் , முடக்கு வாதம் அல்லது அல்ஸீமர் என நினைத்துக்கொள்ள வாய்ப்புண்டு)

போதும் அடங்கு ராசா...!

தலைமறைவா சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனதும் இல்லாமல் இப்போ வந்து ஓவரா பந்தா விட்டா தர்ம அடிதான் ஜாக்கிரதை!

இந்த வலைப்பதிவுகள் பக்கம் வந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டபடியால் மக்கள் அன்புடன் முதலாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை இணைய உலகின் சுற்று சுவர்களில் ஒட்டி வைத்து துக்கம் கொண்டாடி அல்லது தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விடுவார்கள் எனவே அப்படி பட்ட ஒரு துன்பியல் சம்பவம் நடக்காமல் தடுக்கும் வண்ணம் மீண்டும் எனது குளிர் மற்றும் கோடை கால உறக்கம் கலைத்து மலை மீது இருந்து இறங்கி வந்து விட்டேன்.

நான் வருகையிலே என்னை வரவேற்க எங்கும் வண்ண பூ மழை பொழியவில்லை ஒரே அனல் காற்று தான் அடித்தது சென்னை மாநகர வீதிகளிலும் வலைபதிவு நெடுஞ்சாலையிலும் எப்போதும் மக்கள் சூடும் சுரணையுமாகவே இருக்கிறார்கள் சந்தோஷம்!

வலைப்பதிவுகளின் உள்ளடக்கதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை இந்த இடைப்பட்டக் காலத்தில் ஆனால் பல புற தோற்ற மற்றும் எண்ணிக்கை அளவிலான முன்னேற்றம்/ மாற்றம் கண்கூடாக தெரிகிறது , நிறைய புது பதிவுகள், பல புதிய கூட்டணிகள், மாற்றம் ஒன்றே மாறாதது எனவே மாற்றங்களை வரவேற்போம்!

ஆயிரம் பதிவுகள் போட்ட அபூர்வ சிந்தாமணியாக ஒரு புதிய வலைப்பதிவைக் கண்டு உள்ளம் துணுக்குற்றது அது பொன்ஸ் மற்றும் குழுவினரின் கைங்கர்யம் என்பதை கண்டு கொண்டேன் ...கண்டு கொண்டேன்!

இப்படி சில பல மாற்றங்களுடன் தமிழ்வலைப்பதிவுலகம் தளராது பீடு நடைப்போட்டு வருவதை காணும் பொழுது என் நெஞ்சம் பெருமிதத்தால் விம்முகிறது!

ஊரை விட்டு ஓடிப்போய் திரும்பி வந்த" வெயில் பசுபதி" போல சொக்காய் எல்லாம் கிழித்துக்கொண்டு வந்துள்ளேன் எனவே பாசக்கார வலைப்பதிவு மக்கள் எல்லாம் வழக்கம் போல ஆதரவு தந்து என்னைப் போஷிக்க வேண்டுமாய் விண்ணப்பித்துக்கொள்கிறேன்!

அன்றாட வாழ்கையின் கோரப்பிடிகள் வேதாளம் போல் என்னை பிடித்து அழுத்திக்கொண்டு இருப்பினும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல மீண்டும் மீண்டும் வந்து எனது வலைப்பதிவு கடமையை செய்ய தலைப்பட்டுள்ளேன்! உஜ்ஜைனியில் உள்ள காளியிடம் சாகா வரம் பெற்றும் நாடாறு மாதம் காடாறு மாதம் என வாழ நிர்பந்திக்கப்பட்ட விக்கிரமாதித்தன் போல!.

இப்படிக்கு

என்றும் மனம் தளராத
உங்கள் அன்பன்
வவ்வால்.

விக்கிரமாதித்தன் பற்றிய ஒரு வரலாற்று பின் குறிப்பு:-

அம்புலி மாமா புகழ் விக்கிரமாத்தித்தனுக்கு வரலாற்று முகமும் உண்டு அதனையும் பார்ப்போம்.

விக்கிரமாதித்தன் சரித்திர புகழ் பெற்ற இரண்டாம் புலிகேசியின் பேரன் ஆவான்.உஜ்ஜைனியை தலை நகராகக்கொண்டு ஆட்சி பரிபாலணம் செய்தவன்!

விக்கிரமாதித்தன் தனது தாத்தா புலிகேசிக்கு பல்லவன் மகேந்திரன் மற்றும் அவனது மகன் நரசிம்மவர்மனால் ஏற்பட்ட அவமானத்தை துடைக்க தமிழகத்தின் மீது படை எடுத்து வந்துள்ளான். போரின் முதல் கட்டத்தில் மணிமங்கலம்(தாம்பரம் அருகேயுள்ளது) , மற்றும் சோலிங்கர் ( சோழசிங்கபுரம் என்பதே சோலிங்கர் என மறுவியது,ஆர்க்காடு அருகேயுள்ளது) அருகே பல்லவர்களை வென்று புறமுதுகிட வைத்தான். மேலும் முழு தமிழகத்தையும் வெல்லும் அவாவில் பாண்டியர்களையும் வெல்ல மதுரை வரை சென்றான்,அக்காலக்கட்டத்தில் சோழ பேரரசு கிடையாது.

அங்கு தான் விதி சிரித்தது விக்கிரமாதித்தனைப் பார்த்து .பாண்டிய மன்னன் கோச்சடை என்பவன(தாய்க்குலங்கள் போடும் இரட்டை ,ஒற்றை சடை அல்ல இது ஒரு பெயர்) நெல்வேலி என்னுமிடத்தில் தீரத்துடன் போரிட்டு விக்கிரமாதித்தனை வென்றான் ,அதனால் கோச்சடைக்கு ரணதீரன் என்ற பட்டம் கிடைத்தது.பின்னர் கோச்சடை ரணதீரன் என்றே அழைக்கப்பட்டான். விக்கிரமாதித்தனுக்கு ரணதீரன்,ரண ரஸிகா என்ற பட்டப்பெயர்கள் உண்டு.

மதுரையிலிருந்து உதைவாங்கி கொண்டு வந்தவனை நரசிம்மன் மீண்டும் பெரும் படை திரட்டிக்கொண்டு வழியில் எதிர்க்கொண்டான் இம்முறை பல்லவனுக்கே ஜெயம்.விக்கிரமாதித்தனை ஓட ஓட விரட்டிக்கொண்டு உஜ்ஜைனி வரை நரசிம்மன் சென்றதாக சரித்திரம் கூறுகிறது.இதனால் நரசிம்மவர்மனுக்கு ரணஜெயன் என்ற பட்டம் கிடைத்தது.