Tuesday, August 28, 2007

என்ன வளம் இல்லை இந்நாட்டில்!

நம் நாட்டில் படித்து விட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு போவோர் எண்ணிக்கை அதிகம் இதனை பிரெயின் டிரெயின்(brain drain) என்பார்கள்.எனினும் சமீப காலமாக பல ஐ.ஐ.எம் மாணவர்கள் அப்படி கிடைத்த வெளி நாட்டு வேலைவாய்ப்புகளை உதறி தள்ளிவிட்டு இந்தியாவில் கிடைத்த வேலையை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். காரணம் தற்போது அயல்நாடுகளுக்கு இணையான அல்லது மிக நல்ல சம்பளங்கள் இந்திய நிறுவனங்களில் தரப்படுகிறது. இது ஒரு நல்ல மாற்றம் தான்.

இந்த எண்ணிக்கை குறைவென்றாலும் ஒரு நல்ல முன்னுதாரணம் ஆக அமைந்துள்ளது.

பெரும்பாலும் அயல்நாட்டிற்கு வேலைக்கு சென்றாலும் அனைவரின் மனதும் இந்தியாவில் தான் இருக்கும் , வெகு சொற்பமானவர்களே "Dirty country" என்பது போல இந்தியாவை மட்டமாக நினைக்க கூடும். பெரும்பாலோர் ஆத்மார்த்தமாக இந்தியாவின் வளர்ச்சியை விரும்புகிறார்கள்.வருங்காலத்தில் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நம் அறிவுத்திறன் குறைந்து அனைவரும் இந்தியாவில் இருந்து செயல்படும் சூழல் வரும் , அந்நாள் வெகு தொலைவில் இல்லை.

ஒவ்வொரு மாணவனும் படிக்க என அரசு குறிப்பிட்ட தொகை ஒதுக்குகிறது அப்பணம் பல இந்தியர்களின் உழைப்பில் வந்தது. வரி கட்டுபவர்கள் பணம் மட்டும் அல்ல, சாதாரணமாக ஒரு உப்பு பொதி வாங்கினால் அதில் விற்பனை வரி என எல்லா சராசரி இந்தியனும் அரசுக்கு வருமானம் தருகிறான் , எனவே வரிக்கட்டுவோர் மட்டும் கவலைப்பட வேண்டியது அல்ல, அனைவருக்கும் உண்டு பொறுப்பு!

என்ன தான் வெளிநாட்டில் நிறைய சம்பளம் கொடுத்தாலும் அதனை இந்திய பணத்துடன் ஒப்பிடும் போது தான் அதிகமாத்தெரியும், அன்னாட்டு வாழ்கை முறைக்கு அது சாதாரணமான சம்பாத்தியம் தான். இந்தியாவில் மாதம் 20,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் கூட வீட்டு வேலைக்கு , கார் டிரைவர் என வேலைக்கு ஆட்களை வைத்துக்கொள்ள முடியும் , அயல் நாட்டில் அப்படி வைத்துக்கொள்வது எத்தனை பேருக்கு சாத்தியமாகும்.எவ்வளவு சம்பாதித்தாலும் அவர்களே கார் ஓட்டி , வீடு கழுவி,பெருக்கி , துணி துவைத்து என கஷ்டப்படவேண்டும், வாங்கும் பணத்தை அனுபவிக்க முடியாது. இந்தியாவில் மிதமான சம்பளம் அதற்கு ஏற்ப வாழ்வை அனுபவிக்கலாம்!

இந்த அயல்நாடுகளுக்கு வேலைக்கு செல்வதை பற்றி சினிமா நடிகர் விஜய் வேறு தத்துவ முத்துக்களை உதிர்த்துள்ளார், இது குறித்து சிவபாலன் ஒரு பதிவும் போட்டுள்ளார்,

சொந்த நாட்டில் வேலை செய்யுங்கள்"- நடிகர் டாக்டர் விஜய் அறிவுரை.

யார் சொன்னது எனப்பார்க்காமல் சொன்னதை பார்த்தால் சரி எனத்தான் தோன்றுகிறது , ஆனால் அவரே தெலுங்கில் வெற்றிப்பெற்ற படங்களின் கதையை தான் விரும்பி வாங்கி நடிக்கிறார் , தமிழில் நல்ல கதைகளே இல்லையா, முதலில் அதை யாராவது அவருக்கு எடுத்து சொல்லுங்கண்ணா!

மக்களே உங்களுக்கும் இது குறித்து மாற்றுக்கருத்துகள் இருக்கும் இருந்தால் சொல்லலாமே!