Thursday, May 31, 2012

பரோட்டா ரகசியம்!




ஒரு நாளுக்கு சிலப்பதிவர்கள், மற்றும் சிலப்பதிவுகள் என தெரிவு செய்துப்படிக்கும் என் புரோட்டோக்காலின் படி ஒரு பரோட்டாப்பதிவை இன்று
வீடு திரும்பல் மோகனின் பதிவில் படித்தேன். பரோட்டாவின் சூடும் ,சுவையும் எழுத்திலும் இருந்தது. சூடா சாப்பிட்டா தான் அது பரோட்டா ஆறிட்டா MRF Steel radial tyre விட வலுவா இருக்கும் :-))

பல்லு இருக்கவங்க பரோட்டா சாப்பிடுறாங்க! இல்லாதவங்களுக்கு இட்லி!

பதிவில் பரோட்டாவில் விஷத்தன்மை இருக்காமே கேரளாவில் தடை செய்துவிட்டார்களாம் என போகிறப்போக்கில் நாஞ்சில் மனோ திரிய கிள்ளிப்போட்டுப்போனார், இது ரொம்ப நாளுக்கு முன்னரே கேள்விப்பட்ட செய்தி என்றாலும், எதில் தான் விஷ தன்மை இல்லை கோலா பானத்தில் பூச்சி மருந்து இருக்குனு சொன்னப்பிறகும் புட்டி புட்டியாக குடிக்கலையா அது போல தான் என இப்பவும் நான் பரோட்டா சாப்பிட்டுக்கிட்டு தான் இருக்கேன்.அதுவும் விதம் விதமா கொத்து, வீச்சு, முட்டை லாப்பா, கைமா ,சில்லி பரோட்டா என பதம் பார்ப்பேன் :-))

அது மட்டும் இல்லாமல் டாஸ்மாக் மருந்து சாப்பிட்ட பிறகு எந்த ஒரு விஷத்தையும் தாங்கும் வலிமை நம்ம உடலுக்கு உருவாகிடுச்சு,ஆனால் எல்லாரும் நம்மை போல பாதுகாப்பு வளையத்தில இருப்பதில்லை என்பதால் ,பூஞ்சையான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத அப்பிராணிகளை காப்பாற்ற பரோட்டாவின் ரகசியத்தை வெளியிடலாம்னு இப்பதிவு!

மைதா:

பரோட்டா தயாரிக்கப்பயன்ப்படும் மாவுக்கு பெயர் மைதா ஆகும். இந்தப்பெயர் அரபியிலிருந்து வந்திருக்க வேண்டும், ஏன் எனில் பரோட்டா என்ற உணவே அரபு தேச உணவாகும் , முகலாயர்கள் இந்தியாவுக்கு வந்த போது ஒட்டகம்,குதிரை இத்தியாதிகளோடு ,கையோடு பரோட்டாவும் எடுத்து வந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

குரானிலும் அல் மைதாஹ் என ஒரு சுரா இருக்கிறது அதன் பொருள் "The Table" or "The Table Spread with Food" எனவே உணவாக பயன்ப்படும் பொருள் என மைதா மாவுக்கும் பெயர் வைத்திருக்கலாம்.

கிரேக்க மொழியில் மைதா என்றால் உயர்ந்த கோபுரம் என்று பெயர்.

மேலும் கனடா-அமெரிக்கா இடையே எல்லையில் நுழைவு வாயிலாக இருக்கும் ஊருக்கு பெயரும் மைதா தானாம்!

பெயர்க்காரணம் பார்த்தாச்சு அடுத்து மைதா எப்படி தயாரிக்கிறார்கள் எனப்பார்ப்போம்.

கோதுமையில் இருந்தே மைதா பெரும்பாலும் தயாரிக்கப்படுகிறது. இது சுத்திகரிக்கப்பட்ட ஸ்டார்ச் அவ்வளவே எனவே எந்த மூலத்திலிருந்தும் மைதா தயாரிக்கலாம். மாற்று மூலமாக ஆரோ ரூட் கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு பயன்ப்படுகிறது. இந்தியாவில் ,குறிப்பாக தமிழ் நாட்டில் மரவள்ளிக்கிழங்கிலிருந்தே பெரும்பாலும் மைதா தயாரிக்கப்படுகிறது.சேலம் பகுதிகளில் நிறைய sago ஆலைகள் உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் அனைத்துப்பயன்பாடு மாவு என்ற பெயரில் விற்கப்படுகிறது.

இந்தியாவில் அரிசி பஞ்ச காலத்தில் அரிசிக்கு மாற்றாக மைதாவினை அரசே ஊக்கப்படுத்தியதன் விளைவே ஊருக்கு ஊரு பரோட்டாக்கடைகள் பரவ ஒரு காரணம்.

சிலர் கோதுமை மைதா, மரவள்ளிக்கிழங்கு மைதா என கலந்து தயாரித்தும் விற்கிறார்கள், தயாரிப்பாளரை பொறுத்து அவை.

இப்போது கோதுமையிலிருந்து மைதா தயாரிப்பதை காணலாம்,

கோதுமையில் வெள்ளையாக மென்மையாக உள்ள டியுரம்(durum) வகை கோதுமையே மைதா தயாரிக்க ஏற்றது. மேல் தோல்(husk) ,பின்னர் உள் உள்ள தோல் (bran) இரண்டும் எந்திரம் மூலம் நீக்கப்படும், பின்னர் அதனை ரப்பர் உருளைகள் மூலம் நசுக்கி எண்டோ ஸ்பெர்ம்(endosperm) எனப்படும் ஸ்டார்ச் பகுதியை மட்டும் பிரிப்பார்கள், எம்பிரியோ எனப்படும் கருவினை தனியாக பிரித்துவிடுவார்கள், அதில் தான் புரோட்டின், கொழுப்பு, இன்னும் சில ஊட்டச்சத்துக்கள் இருக்கும்.

மைதா தயாரிக்க ஸ்டார்ச் மட்டும் போதும்,அப்போது தான் மென்மையான மாவு கிடைக்கும்.

கோதுமை மாவுக்கும், மைதாவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் கோதுமையை முழுவதுமாக அரைத்து பின்னர் தவிடு நீக்கப்படும், இதனால் புரோட்டின், கொழுப்பு, அமினோ அமிலம், விட்டமின் என அனைத்தும் மாவில் இருக்கும், மேலும் பிரானில் உள்ள நார்ச்சத்தும் கிடைக்கும்.

ஆனால் மைதாவில் 100% சதம் ஸ்டார்ச் மட்டுமே பயன்ப்படுத்துவதால் சர்க்கரை சத்து மட்டும் இருக்கும், நார்ச்சத்து, விட்டமின் ,புரோட்டின் போன்ற எதுவும் இருக்காது. முழுவதும் ஸ்டார்ச் என்பதால் டெக்ஸ்டைல்ஸ் தொழிலில் நூல்களுக்கு முறுக்கேற்ற sizing agent ஆகவும் மைதா மாவு பயன்ப்படுகிறது.

பிரித்தெடுக்கப்பட்ட எண்டோஸ்பெர்ம் வழக்கம் போல அரவை எந்திரத்தில் மாவாக அரைக்கப்பட்டு ,சலித்து எடுக்கப்படும். இப்படி கிடைக்கும் மாவு மழுப்பு நிறமாக இருக்கும், நல்ல தும்பைப்பூ போல வெண்மையாக ஆக்கவே பல ரசயானங்கள் பயன்படுகின்றன.

அவற்றில் முக்கியமானது பென்சைல் பெராக்சைடு ஆகும், அடுத்தது பிளீச்சிங்க் பவுடர், இதில் இருந்து வரும் பிறவி நிலை குளோரின் மாவை வெளுப்பாக்கும்.இப்படி ஏன் வெளுப்பாக்கி சாப்பிட வேண்டும் ,அப்படியே பழுப்பு நிற மாவில் பரோட்டா சுடலாமே, பரோட்டா சுட்டப்பிறகு பழுப்பா தானே ஆகும்? எனக்கேள்விக்கேட்டால் வெள்ளையா இருந்தால் தான் நல்ல மாவுன்னு மக்கள் வாங்குறாங்கனு பதில் வரும் :-))

மல்லிகைப்பூ, பச்சை பட்டாணியை எல்லாம் பச்சை சாயத்தில் நனைத்துக்கொடுத்தால் தானே மக்கள்"பிரஷ்"னு வாங்குது!

நாம எப்பவுமே கலருக்கு தானே மரியாதை கொடுப்போம், சேப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்னு நம்புறவங்களாச்சே :-))

வெளுப்பாக்க பயன்படும் வேதிப்பொருள்களான பென்சைல் பெராக்சைடு, குளோரின் ஆகியவற்றின் சிறிதளவு எச்சங்களும் மாவில் தங்கிவிடும், எனவே தொடர்ந்து மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருளை உண்டு வந்தால் சில பக்க விளைவுகள் வர வாய்ப்புண்டு.

இவ்வேதிப்பொருள்களின் பக்க விளைவுகள் என சொல்லப்படுவது,

#பான்கிரியாஸ் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளை பாதிக்கும், இதனால் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்பட்டு நீரிழிவு நோய் வரலாம்.

# சிறுநீரக கல், மாரடைப்பு வரலாம்,

#குளோரினால் வயிற்றில் அல்சர் வரும் வாய்ப்புண்டு.ஆனால் நம்ம அரசாங்கமே குளோரின் கலந்து தான் தண்ணீரை சுத்திக்கரிப்பு செய்து கொடுக்கிறது, அதுவும் தீங்கானதே.

அக்குவா கார்ட் போன்ற நீர் சுத்திகரிப்பு கருவியில் குளோரின் நீக்கும் என்று சொல்லி விற்கிறார்கள்.

#நார் சத்து குறைவாக உள்ளதால் செரிமான கோளாறுகள் வரலாம்.

இதோடு அல்லாமல் இன்னொரு ரசாயனமும் இதில் இருக்கு.

வீட்டில் கோதுமை மாவு, ரவா என டப்பாவில் போட்டு பத்திரமாக வைத்திருந்தாலும் சில நாட்களில் கருப்பாக ஒரு சிறிய வண்டு போல பூச்சி பிடித்துவிடுவதைப்பார்த்திருப்பீர்கள், இதனை சேமிப்பில் வரும் பூச்சி(storage pest) தாக்குதல் என்பார்கள்.

மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்திருக்கும் மைதா மாவில் பூச்சி பிடிக்காமல் இருக்க மெதில் புரோமைடு என்ற ரசாயன புகை மூட்டத்தினை(fumigation) கிடங்கில் போட்டு ,பின்னரே மைதா மாவினை சேமிப்பார்கள்,மாவில் ஊடுருவி இந்த ரசாயனம் இருப்பதால் பூச்சிப்பிடிக்காமல் இருக்கும். அதனை தான் நாம் பரோட்டா தயாரிக்கப்பயன்ப்படுத்துகிறோம். இதனாலும் பாதிப்புகள் உண்டு.

மைதாவில் உள்ள ஆப்புகள் போதாது என்று பரோட்டா தயாரிக்கும் போது பரோட்டா மாஸ்டர்களும் அவங்க பங்குக்கு ஆப்பு சேர்க்கிறாங்க, மென்மையாக வர சமையல் சோடா, மலிவாக சுட பருத்தி எண்ணை(lin seed oil) எனப்பயன்ப்படுத்தி நம்மை பயப்படுத்துறாங்க!

இதுக்குல்லாம் பயப்படுறவனா தமிழன் ,எப்பவும் போல பரோட்டா சாப்பிடுவாங்க, ஹி..ஹி நானும் சாப்பிடுவேன் ...ஏன்னா நான் தமிழன்டா !

சில எச்சிலூறும் குறிப்புகள்:

#கடலூர் பேருந்து நிலையத்திற்கு எதிரில் லாரன்ஸ் ரோட்டில் பல்லவா என ஒரு பரோட்டாக்கடை இருக்கு, பரோட்டாவுக்கு புகழ் பெற்றது. அங்கே நெய் பரோட்டானு முழுசா பரோட்டாவ முறுகலா பொறிச்சு கொடுப்பாங்க, ஆனால் நெய் இல்லை டால்டா தான் சுவை அபாரமா இருக்கும்.நாம எல்லாம் ஒரு டசனுக்கு கம்மியா சாப்பிட்டதில்லை, ஒரு பரோட்டா 6 ரூபா தான் கொஞ்சம் பெருசா தட்டின வடை சைசில் தான் இருக்கும். (ஒரு டசன் பார்சல் தனி)

# அதே போன்ற நெய் பரோட்டா ஆனால் எண்ணைப்பரோட்டா என்றப்பெயரில் சென்னையில் ஜி.என் செட்டி சாலையில் உள்ள விருதுநகர் பரோட்டாக்கடையில் கிடைக்கிறது.

ஹி..ஹி பல ஊரு ,பல சுவைனு பல உணவுகளை பதம்பார்த்தாச்சு ஆனால் அதை எல்லாம் பெருமையாக சொல்லிக்கொள்ள என் தன்னடக்கம் தடுப்பதால் சொல்வதில்லை!


பின்குறிப்பு:

தகவல்,படங்கள் உதவி,

கூகிள், விக்கி, தளங்கள்,நன்றி!

*****

Wednesday, May 30, 2012

பவர் ஸ்டார் நல்லவரா ,கெட்டவரா? ஒரு சூடான அலசல்!



விஜய் தொ.காவின் நீயா,நானா நிகழ்ச்சி நங்கூரம் கோபிநாத் , தனது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆற்றல் விண்மீன்(பவர் ஸ்டார்) என்ற திரைபிரபலத்தை அழைத்து உரிய முறையில் நடத்தாமல், தேவையில்லாத கேள்விகள் கேட்டு அவமரியாதை செய்து விட்டதை வைத்து பலரும் பதிவுகள் போட்டுத்தாளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நானும் வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு வழக்கம் போல மொக்கையாக அறிவியல் ,பொருளாதாரம்னு ஜல்லி அடிக்கலாம், நமக்கு எதுக்கு இதெல்லாம் என வாளாவிருந்தேன்,அது நேற்று இரவு குமுதம் ரிப்போர்ட்டரை படிக்கும் வரையே, அதில் ஆற்றல் விண்மீன் பற்றி ஒரு செய்தி போட்டிருக்கிறார்கள்.

அதில் சொல்லப்பட்டிருப்பது என்னவெனில்,

#ஆற்றல் விண்மீன் மருத்துவப்படிப்பே படிக்கவில்லை, அவர் கல்வி தகுதிக்குறித்து நீண்ட நாட்களாக சர்ச்சை உள்ளது,

#பலப்பேரிடம் கடன் வாங்கி தருகிறேன் எனச்சொல்லி கையாளும் கட்டணமாக கமிஷன் வாங்கிக்கொண்டு ஏமாற்றியுள்ளார்.

தற்போது கும்மிடிப்பூண்டியை சேர்ந்த டெக்ஸ்டைல் தொழிலதிபர் சுரேந்திரகுப்தா என்பவரிடம் 6 கோடிக்கடன் வாங்கி தருவதாக சொல்லி கமிஷனாக 26 லட்சம் பெற்றுள்ளார், அப்போது 2.75 கோடிக்கு டி.டி காட்டியுளார் ,அதை பின்னர் தருவதாக சொல்லியுள்ளார்,வங்கியில் விசாரித்த போது அது போலியானது என சொல்லியுள்ளார்கள்.எனவே கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார், பல அலைச்சலுக்கு பின்னர் 17 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு ,மிரட்டியுள்ளார்,எனவே இப்போது சுரேந்திர குப்தா மாநகர ஆணையர் அலுவலகத்தில், ஆ.வி மேல் மோசடிப்புகார் கொடுத்துள்ளார்.

இதுவே கு.ரிப்போர்ட்டர் செய்தி, அப்படி எனில் இது போல பலரிடம் மோசடி செய்த பணத்தில் தான் படம் எடுத்து விளம்பரம் செய்துக்கொண்டுள்ளாரா ஆற்றல் விண்மீன் ?

பவர் ஸ்டார் நல்லவரா ,கெட்டவரா?

இப்போ கோயான் கோபிநாத்துக்கு வருவோம்,



ஒரு நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்/விருந்தினர் என்றால்,அவரது கருத்தை சொல்லத்தான் அழைக்கப்பட்டுள்ளார், அது ஒன்றும் அவரது நேர்காணல் அல்ல, அவரைப்பற்றி விமர்சிக்க,கேள்விக்கேட்க.எனவே எந்த நிகழ்ச்சியை எப்படி வடிமைக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டு பின்னர் நிகழ்ச்சி செய்ய வரவும்.

பவர் ஸ்டாரை இப்படி எல்லாம் கேள்விக்கேட்க வேண்டும் என ஆசை இருந்தால் ஒரு நேருக்கு நேர் நிகழ்ச்சியை வைத்து அதில் கேட்டுக்கொள்ளுங்கள்.

நிகழ்ச்சி நங்கூரம்னா கோட்டு சூட்டுப்போட்டுக்க வேண்டும்னு விதி இருக்கா? ஆனானப்பட்ட கரண் தாப்பர் கூட கோட் போடாமல் நிகழ்ச்சி நடத்துனார்ப்பா, அப்படியிருக்க தமிழில் நடத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு கோட்டு தேவையா?

அதை விட கொடுமை கோட் ரொம்ப சின்னதா உடம்புக்கு பொருந்தாம , உடம்பே பிதுங்கிக்கிட்டு இருக்கும் ,வாடகைக்கு கோட் எடுக்கும் போதே கொஞ்சம் பெருசா எடுக்கப்படாதா :-))

-------

பின்குறிப்பு:

தகவல்,படங்கள் உதவி,

குமுதம் ரிப்போர்ட்டர், கூகிள்,நன்றி.

*****

Tuesday, May 29, 2012

மாற்று எரிபொருள்-பயோ டீசல்(bio diesel)

(பட உதவி "தி இந்து",நன்றி)


ஏற்கனவே பெட்ரோல் விலையை வெற்றிகரமாக ஏற்றி மக்களுக்கு "பேரின்ப அதிர்ச்சி" கொடுத்த மத்திய அரசு இப்போ அடுத்து டீசல் விலையையும் ஏற்றலாமா என தீவிர சதியாலோசனையில் ஈடுப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

வழக்கமாக கச்சா எண்ணை சர்வதேச சந்தையில் விலை ஏறியதால் உள்நாட்டில் விலையேற்றம் என சொல்லும் அரசு இம்முறை அன்னிய செலவாணி பரிமாற்ற விகிதத்தில் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிந்து விட்டது ,எனவே டாலர் வாங்க கூடுதல் பணம் செலவாகிறது எனவே நட்டம் அதை தவிர்க்கவே விலையேற்றம் என ஒரு காரணத்தினை சொல்லியுள்ளது.

ரூபாய் மதிப்பு சரிவும் ,அதன் விளைவாக பெட்ரோல்,தங்கம் விலை ஏறும் என பெட்ரோல் விலையேற்றத்திற்கு முன்னரே ஒரு பதிவாக போட்டுள்ளேன்,அதனை இங்கு காணலாம்.


அப்பதிவில் சொன்னது தான்,மீண்டும் ஒரு முறை இங்கே,

ஒரு பொருளை இறக்குமதி செய்ய அதிக அன்னிய செலவாணிக்கு தேவை இருக்கும் நிலையில் ,அன்னிய செல்வாணிக்கு எதிராக ரூபாய் சரியும் போது, அதிகம் விலைக்கொடுக்க வேண்டும், எனவே அன்னிய செலவாணியின் அளவை குறைக்க அது கொண்டு வாங்கும் பொருளின் அளவை குறைக்க வேண்டும், நேரடியாக இறக்குமதி அளவைக்குறைக்காமல் மக்களின் நுகர்வை குறைக்க செய்ய ஒரு எளிய வழி விலையேற்றம் அல்லது இறக்குமதியின் மீது அதிக வரி விதிப்பது ஆகும்.

சந்தையில் ஒரு பொருளின் டிமாண்ட் & சப்ளை நெகிழ்வுடன் (எலாஸ்டிக்) இருக்கும் எனில் விலை உயர்ந்தால் மக்கள் தாங்களாக நுகர்வை குறைப்பார்கள், எனவே இறக்குமதி குறையும், அதனால் டாலர் தேவை குறையும். இதனை மார்ஷல்-லென்னர் தியரி அடிப்படையில் செய்கிறார்கள்.

ஆனால் இந்தியாவைப்பொறுத்த வரையில் என்ன தான் விலை ஏறினாலும் நாம் பெட்ரோல் பயன்ப்பாட்டினை குறைப்பதில்லை, தங்கம் வாங்குவதையும் நிறுத்துவதில்லை, எனவே சப்ளை& டிமாண்ட் நெகிழ்வற்றது( இன் எலாஸ்டிக்).எனவே மார்ஷல்-லென்னர் தியரி அடிப்பட்டு விடும்.

ஆனாலும் மத்திய அரசு விலை ஏற்றினால் தேவை குறையும் ,மேலும் நட்டம் குறையும் என பிடிவாதமாக ஏற்றியது.அப்படியும் தேவை குறைவது போல தெரியவில்லை,எனவே எண்ணை நிறுவனங்களே சப்ளையை குறைக்க முடிவு செய்து விட்டது ,எனவே தான் தற்போது பெட்ரோல்/டீசல் இல்லை என பங்குகள் மூடப்பட்டு கிடக்கின்றன.பெரும்பாலான இடங்களில் தட்டுப்பாடாகவும் இருக்கிறது.

உண்மையில் அரசுக்கோ எண்ணை நிறுவனங்களுக்கோ அன்னிய செலவாணி பணப்பரிமாற்று விகிதத்தில் பெரிய நட்டம் வருவதில்லை என்பதே உண்மை,ஆனால் அப்படி சொல்லி விலையேற்ற வழிக்காண்கிறார்கள் எனலாம், எப்படி எனில்,

டாலரின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு எதிராக உயர்ந்தது போல ,உலக அளவிலும் உயர்ந்தே வருகிறது,எனவே எண்ணை உற்பத்தி நாடுகளின் நாணயத்திற்கு எதிராகவும் உயரும்,இதனால் முன்னர் ஒரு பேரல் கச்சா எண்ணை 100 டாலருக்கு விற்றது எனில், டாலர் உயர்வுக்கு ஏற்ப குறைந்து 90 டாலர்கள் என்பது போல குறைவான விலையிலே விற்பனை ஆகும்.

அதாவது வழக்கமாகவே டாலரின் மதிப்பு சரிந்தால் கச்சா எண்ணையின் விலை ஏறும், டாலர் உயர்ந்தால் கச்சா விலை குறையும்.

எனவே தற்போது நாம் வாங்கும் கச்சாவுக்கு கொடுக்கும் டாலரின் அளவுகுறைந்து விடுவதால், கூடுதலாக உயர்ந்த டாலரின் மதிப்பு சரி செய்யப்பட்டு விடும். எனவே பெரும்பாலும் எண்ணை நிறுவனத்திற்கு நட்டம் வராது, அல்லது மிகச்சிறிய அளவில் இருக்கலாம். அதனை விலையேற்றாமல்லே சமாளிக்க முடியும்.ஆனால் எப்போது விலை ஏற்றலாம் என ஏங்கிக்கொண்டு இருக்கும் எண்ணை நிறுவனங்கள் கிடைத்த வாய்ப்பை வீணாக்க விரும்பாமல் விலை ஏற்றி மக்களோடு விளையாட ஆரம்பித்து விட்டன.

பெட்ரோல் விலை உயர்வுக்கான உண்மைக்காரணம் முன்னர் 2011 டிசம்பரில் போட்டப்பதிவில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது,


விரைவில் டீசல் விலையும் ஏறும் என்ற நிலையில் , அப்படி விலை ஏற்றினால் நமக்கு நாமே ஒரு மாற்று எரிப்பொருளை உருவாக்கிக்கொள்ள முடிந்தால் கவலை இல்லை அல்லவா, எனவே வீட்டிலேயே ஒரு வாகன எரிபொருள் இருப்பதையும் அதைப்பயன்ப்படுத்துவது எப்படி என்பதையும் சொல்லவே இப்பதிவு.

ஹி..ஹி இதைப்படிச்சுட்டு எல்லாம் வீட்டுக்கு வீடு
மூலிகைப்பெட்ரோல் விஞ்ஞானினு கிளம்பிடாதிங்க, இதெல்லாம் உலகம் அறிஞ்ச ரகசியம் :-))

வாகனங்களுக்கு பயன்படுத்தும் எரிப்பொருளை கனிம எண்ணை(mineral oil) என்பார்கள், சமையலுக்கு பயன்ப்படுத்தும் எண்ணை தாவர எண்ணை (veg oil)ஆகும். கனிம எண்ணையை சமைக்க பயன்ப்படுத்த முடியாது.ஆனால் தாவர எண்ணையை வாகனத்திற்கு பயன்ப்படுத்த முடியும்.

சுத்தமான தாவர எண்ணை;

எந்த ஒரு சுத்தமான தாவர எண்ணையையும் எவ்வித மாற்றமும் செய்யாமல் நேரடியாக டீசல் வாகனங்களில் பயன்ப்படுத்த முடியும்,அல்லது டீசலுடன் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தும் பயன்ப்படுத்த முடியும், அதனை பயோ டீசல் என்பார்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் பி-80 என்றப்பெயரில் விற்பது 20% தாவர எண்ணை கலந்த டீசல் ஆகும், அதே போல எத்தனால் கலந்தும் விற்கிறார்கள் சதவீதத்திற்கு ஏற்ப ஈ-85 என்பது போல விற்கிறார்கள்.

100% எத்தனால் அல்லது மெத்தனால் கொண்டும் வாகனங்களை இயக்க முடியும்.நாம் நாட்டில் குடிக்கமட்டுமே பயன்ப்படுகிறது, பிரேசில் போன்ற நாடுகளில் எத்தனால் பெருமளவில் வாகன எரிபொருளாக பயன்ப்படுகிறது.



அதிக சர்க்கரை ஆலைகள் கொண்ட நம் நாட்டில் மொலாசஸ் அதிகம் கிடைக்கும் இதனை எத்தனாலாகவோ மெத்தனாலாகவோ மாற்றினால் நிறைய அன்னிய செலவாணி மிச்சம் செய்யலாம்.ஆனால் அரசு அதனை செய்யாமல் இறக்குமதி, விலை ஏற்றம் என்ற பழைய பஞ்சாங்கமே பாடிக்கொண்டிருப்பதன் ரகசியம் என்னவோ?


இந்தியாவில் பயோ டீசல் திட்டம் தோல்வியடைந்து விட்டது என சொல்லி அரசே ஊத்தி மூடிவிட்டது.

சுத்தமான தாவர எண்ணையை எதனுடனும் கலக்காமல் வாகனத்தில் பயன்ப்படுத்த முடியும், ஆனால் ஸ்டார்ட்டிங்க் பிரச்சினை, நாசில் அடைத்துக்கொள்வது, குளிர்காலத்தில் எண்ணை கெட்டியாகிவிடுவது போன்ற பிறச்சினை வரும்.

இதனையும் தவிர்க்க வாகனத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும், தாவர எண்ணைக்கு ஏற்ப நாசில், எண்ணை பில்டர், கூடுதல் திறன் உள்ள இக்னிஷன் காயில் ஆகியவை பொறுத்த வேண்டும்.கொஞ்சம் செலவு பிடிக்கும் வேலை.

இதனை தவிர்க்க இரட்டை டேங்க் முறைப்பயன்ப்படுகிறது.இம்முறையில் ஒரு டேங்கில் டீசலும்,இன்னொரு டேங்கில் தாவர எண்ணையும் நிரப்பிக்கொள்ள வேண்டும். முதலில் சிறிது நேரம் டீசலில் ஓட்டி எஞ்சின் சிலிண்டரை சூடாக்க வேண்டும், அதே நேரம் தாவர எண்ணையும் சைலண்சரின் வெப்பத்தின் மூலம் சூடாகும் படியாக தாவர எண்ணை டேங்க் அமைக்கப்பட்டிருக்கும்.

இப்பொழுது டீசல் டேங்கில் இருந்து எரிப்பொருள் செல்வதை அடைத்துவிட்டு தாவர எண்ணை டேங்கில் இருந்து வருமாறு மாற்றிவிட வேண்டும். மேலும் எஞ்சினை நிறுத்தும் முன்னர் சிறிது நேரம் டீசலில் ஓட விட்டு பின்னர் நிறுத்த வேண்டும்,அப்போது தான் மீண்டும் வாகனம் எளிதில் கிளம்பும்.

இன்னொரு முறையில் தாவர எண்னையை மட்டுமே பயன்ப்படுத்தலாம், டீசல் தேவையே இல்லை. ஆனால் அதற்கு தாவர எண்ணையை டிரான்ஸ் எஸ்ட்ரிபிகேஷன் (transestrification)செய்ய வேண்டும். கொஞ்சம் கவனமாக செய்தால் அனைவரும் அவர்கள் கார் ஷெட்டிலேயே எரிப்பொருளை தயாரிக்க முடியும். வெளிநாடுகளில் பலரும் இப்படி செய்கிறார்கள்.

இம்முறைக்கு சுத்தமான தாவர எண்ணை pure veg oil)அல்லது ஏற்கனவே சமைக்கப்பட்ட எண்ணை (waste veg oil)என எதை வேண்டுமானாலும் பயன்ப்படுத்தலாம்.

சமைக்கப்பட்ட எண்ணை எனில், செலவு மிச்சம் ஆகும் சில உணவங்களை அணுகி சமைக்கப்பயன்ப்பட்ட எண்ணையை இலவசமாக கேட்டுப்பெறலாம்.வெளிநாடுகளில் பல முறை ஒரே எண்ணையில் சமைக்க தடை எல்லாம் இருப்பதால் கொடுப்பார்கள், நம்ம ஊரில் எண்ணை சட்டி வறண்டு போகும் வரை விடாமல் சமைக்கப்பயன்ப்படுத்துவார்களே :-))

ஆனால் நட்சத்திர உணவகம்,சில தரமான உணவங்களில் மீண்டும் எண்ணைப்பயன்ப்படுத்தாமல் கழிவாக வீணாக்கலாம்,அவர்களிடம் கேட்டுப்பெறலாம் என நினைக்கிறேன்.

அப்படி சமைத்து முடிக்கப்பட்ட எண்ணையை ஒரு கலனில் ஊற்றி சில நாட்கள் அப்படியே வைத்தால் வண்டல் எல்லாம் அடியில் படிந்துவிடும் ,பின்னர் மேலாக உள்ள எண்ணையை மட்டும் எடுத்து நன்கு வடிக்கட்ட வேண்டும், அப்போது தான் உணவுத்துணுக்குகள் நீக்க முடியும்.

இப்போது அடிப்படையான எண்ணை கிடைத்து விட்டது ,

மேலும் தேவையான பொருட்கள்,

சோடியம் ஹைட்ராக்ஸைடு, (Naoh)
சிங்க்,வாஷ் பேசின் அடைத்துக்கொண்டால் நீக்கப்பயன்படும் ரசாயனமே சோடியம் ஹைட்ராக்சைடு அதனைக்கடையில் வாங்கிப்பயன்ப்படுத்திக்கொள்ளலாம்.



மெதனால் எனப்படும் மீதைல் ஆல்ஹகால்.(methanol-ch3oh)


தேவையான அளவில் சில கண்ணாடிகுவளைகள், வடிக்கட்டி, கலன்கள்,டிரம்,

கலக்கி விட சமையலுக்கு பயன்ப்படும் பீட்டர் ,அல்லது கையால் விடாமல் கலக்க முடியும் எனில் மரத்தால் ஆன ஒரு கலக்கி.

செய்முறை:

முதலில் எண்ணையை 120 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு சூடாக்க வேண்டும். நம் நாட்டில் ந்ல்ல வெயில் அடிப்பதால் வெயிலில் வைத்து சில மணி நேரங்கள் வைத்து கலக்கிவிட்டாலும் போதும்.

இது எதற்கு எனில் சமைக்கப்பயன்ப்பட்ட எண்ணையில் நீர் அல்லது ஈரப்பதம் இருக்கும் அதனை நீக்கவே.ஈரப்பதமான எண்ணையை டிரான்ஸ் எஸ்ட்ரிபிகேஷன் செய்தால் எரிப்பொருளுக்கு பதில் சோப் கிடைத்துவிடும்.இதற்கு சோப்பானிபிகேஷன்(saponification) என்று பெயர்.

செய்முறை மாதிரிக்கு இப்போது ஒரு லிட்டர் எண்ணை என வைத்துக்கொள்வோம்.

ஒரு லிட்டர் எண்ணைக்கு 200 மி.லி மெத்தனால், 6.5 அவுன்ஸ் சோடியம் ஹைட்ராக்சைடு தேவை.

முதலில் 200 மி.லி மெத்தானாலை ஒரு கண்ணாடி குவளையில் எடுத்துக்கொண்டு அதில் சிறிது சிறிதாக சோடியம் ஹைட்ராக்சைடு பவுடரை கொட்டி கலக்க வேண்டும்.இவ்வேதி வினை ஒரு வெப்ப உமிழ்வு (exothermic)வினையாகும் எனவே சிறிய அளவிலேயே கலக்க வேண்டும். முடிவில் மெத்தாக்சைடு (methoxide)கிடைக்கும்.

இப்படிக்கலக்கும் போது உடலில் பட்டு விடாமல் கவனம் தேவை மேலும் வெளிவரும் புகையினை சுவாசிக்காமல் இருக்க முகத்தில் முகமூடி போல கட்டிக்கொள்ளவும் வேண்டும்.

இப்போது மீத்தாக்சைடை ஒரு லிட்டர் எண்ணை உள்ள குவளையில் கொட்டி நன்கு கலக்க வேண்டும், இப்படி சுமார் 30 நிமிடம் செய்ய வேண்டும், எனவே தான் பீட்டர் பயன்ப்படும் என்றேன்.

எண்ணையில் ஃப்ரி பேட்டி ஆசிட்(free fatty acid) உள்ளது அவை டிரான்ஸ் எஸ்ட்ரிபிகேஷன் மூலம் esters of fatty acid ஆகவும், கிளைசெரால் (glycerol)என்ற உப பொருளாகவும் மாறும்.



கலக்கி முடித்து வினை முழுமை அடைந்ததும் குவலையை சில மணிநேரங்கள் அப்படியே வைத்திருந்தால் போதும் கிளைசெரால் அடியில் படிந்துவிடும், பின்னர் மேல்மட்டத்தில் உள்ள பயோ டீசலை உறிஞ்சு குழல் (syphon)முறையில் தனியாக பிரித்து எடுத்தால் வாகனத்திற்கு பயோ டீசல் தயார்.

இதே முறையை சுத்தமான தாவர எண்ணைக்கும் பயன்ப்படுத்தலாம், அதில் வடிக்கட்டுவது,சூடாக்கி ஈரப்பதம் நீக்குவது எல்லாம் செய்யாமல் நேரடியாக தயாரிக்கலாம் என்பது கூடுதல் வசதி.

வீட்டில் பயோ டீசல் தயாரிக்கும் அமைப்பின் படம்:

விலை அதிகமான சுத்தமான தாவர எண்ணையைப்பயன்ப்படுத்த தேவையில்லை, ஆமணக்கு, கடுகு எண்ணை என மலிவான எண்ணைகளே பெரும்பாலும் பயன்ப்படுத்தப்படுகிறது.

இந்த பயோடீசலை நேரடியாகவும் வாகனத்தில் பயன்ப்படுத்தலாம் அல்லது டீசலுடன் கலந்தும் பயன்ப்படுத்தலாம்.

இம்முறையில் உள்ள ஒரு சிக்கல் என்ன வெனில் 10 நாட்கள் வரைக்கும் பயோ டீசல் முழுத்திறனுடன் இருக்கும், பின்னர் படிப்படியாக திறன் குறைந்து 60 நாட்களுக்கு பின் எரிப்பொருள் திறனை இழந்துவிடும். எனவே பெரிய அளவில் தயாரித்து சேமிப்பது சிரமம்.

ஆனால் வீட்டில் வார இறுதியில் தயாரித்து தினசரிப்பயன்படுத்திக்கொள்ளலாம்.வெளிநாடுகளில் மிகவும் வெற்றிகரமாக பலர் வீடுகளிலே இவ்வாறு செய்கிறார்கள் அவர்களுக்கு இதெல்லாம் சிரமமே இல்லை ஏன் எனில் பலரும் அவர்கள் வாகனத்தினை அவர்களே பழுதுப்பார்க்கும் அளவுக்கு தேர்ச்சியுடன் இருக்கிறார்கள்,நம்ம ஊரில் தான் கார் டயர் மாட்டக்கூட மெக்கானிக் தேடுவோம்.

----------
பின்குறிப்பு:

தகவல்,படங்கள் உதவி,

கூகிள்,விக்கி, இணைய தளங்கள், நன்றி!


*****

Friday, May 25, 2012

கடல் மீன்கள்!



மனிதர்களாக நாம் அறிவிற் சிறந்த விலங்குகளே, அப்படியிருப்பினும் பயணம் செய்ய நமக்கு பலவகையான வழிக்காட்டிகள் தேவைப்படுகிறது ,ஏதோ ஒரு ஊர் நோக்கி செல்லும் சாலை என தெரிந்தால் மட்டுமே அதில் பயணம் செய்து அவ்வூரை அடைவோம், வழியில் நான்கு முனை சந்திப்பு வந்தால் கைக்காட்டியில் குறிப்பிட்ட ஊர்ப்படி பயணம் செய்வோம்.

இப்போ ஒரு புதிர்(ரொம்ப பழசு தான்)

மெட்ராஸ் ல இருந்து அறிமுகமில்லாத சட்ராஸ்னு ஒரு ஊருக்கு தீயாய் நானோ மகிழுந்துவில் போறிங்க, போற வழில மாமல்லபுரம் அருகே ஒரு நான்கு முனை சந்திப்பு வருது எந்தப்பக்கம் போறதுனு தெரியலை கைக்காட்டியப்பார்க்கலாம்னு பார்த்தால் அது மணல் சுமையுந்து மோதி கீழ விழுந்து கிடக்கு ,உங்க கிட்டே உலகவழிக்காட்டியும் (ஜி.பி.எஸ்) இல்லை,அருகிலும் யாரும் இல்லை, இப்போ எப்படி சட்ராஸுக்கு சரியான வழிய கண்டுப்பிடிப்பிங்க?

ஹி..ஹி இது எனது பள்ளிப்படிக்கும் காலத்திய புதிர், சும்மா இப்போ ஒரு இடைச்செறுகலா போட்டுவிடுகிறேன், இதை யோசிச்சுக்கிட்டே அடுத்த பத்திக்கு வாங்க... பதிலைப்பின்னூட்டத்தில சொல்லுங்க!

நவீனக்காலத்திய வரவான கூகிள் வரைப்படம், உலகவழிக்காட்டி எல்லாம் பயன்ப்படுத்தி அதிக முக்கல் முனகல் இல்லாம தெரியாத ஊருக்கு கூட இப்போ பயணம் செய்ய முடியும்.

தரையில் பயணம் செய்ய இது போதும் ,அலையடிக்கும் கடலில் வழி தெரிய என்ன செய்வாங்க , மனிதர்கள் அதுக்கும் வழக்கம் போல உலக்கவழிக்காட்டி,திசைக்காட்டி(காம்பஸ்), அல்லது வானியல் படி பகலில் சூரியன் நிலை, இரவில், சந்திரன், நட்சத்திரம்,கலங்கரை விளக்கம்னு பயன்ப்படுத்தி வழிக்கண்டுப்பிடிப்பாங்க.

கடலுக்கு மேல இது வேலை செய்யும், கடலுக்கு அடியில் அதுவும் மீன்கள் எப்படி திசை அறிந்து பயணிக்கும்?

கடலில் நீந்தும் மீன்கள் திசை அறியுமா? பின்ன மனம் போனப்போக்கிலா கடலில் உலாவும். மீன்களும் திசையைக்கணித்து கடலில் பயணிக்கின்றன.

மீன்கள் கடல் வாழ் சூழலில் தடைகளையும், தடத்தையும் எப்படி கணிக்கின்றன எனப்பார்ப்போம்.

மீன்களின் உடலில் பக்கவாட்டில் அழுத்தம் உணரும் குழாய்கள் உள்ளன, அவற்றிள் நீர் நிரம்பியிருக்கும், அதோடு துடுப்புகளில் உள்ள குஞ்சம் போன்றவைகளுக்கும் தொடர்புண்டு. மீன்களின் உடலில் இருக்கும் குஞ்சம் போன்றவை உணர்வு கருவிகள் ஆகும்.



ஒரு கப்பலோ,அல்லது ஒரு மீனோ அருகில் சென்றால் எழும் அலைகள் அழுத்தக்குழாய்களில் மோதியதும் ,அழுத்த வேறுப்பாட்டிற்கு ஏற்ப அப்பொருள் எவ்வளவு பெரிது என மீன் கணித்துவிடும்.மேலும் மீன்களுக்கு சுவை,வாசனை உணரும் சக்தியும் உண்டு அதனை வைத்து இரையா அல்லது திடப்பொருளா என்றெல்லாம் கண்டுப்பிடிக்கும்.

எண்ணைக்கப்பல்கள்,இரசாயன கழிவுகள் கொண்ட கப்பல்கள் விபத்தில் சிக்கி கடலை அசுத்தப்படுத்தும் சமயங்களில் மீன்கள் இறப்பதோடு கடலின் வாசனை மாறுவதால் மீன்களும் வழி மாறி சென்றுவிடுகின்றன சில ஆய்வுகள் சொல்கின்றன.



கடல் மாசுபடுவதைக்கண்டறிய மீன்களைப்போன்றே புலன் உணர்வுக்கொண்ட செயற்கை மீன்களை உருவாக்கி ஸ்பெயினில் கடலில் விட்டு ஆய்வும் செய்துள்ளார்கள் இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள்.ஆனால் மீனின் விலை தான் கொஞ்சம் அதிகம் 20,000 பவுண்டுகள் ஒரு மீனுக்கு மட்டும்!

அழுத்தக்குழாய்களின் மூலம் கடல் நீரோட்டங்களை உணரும்,மேலும் என்ன ஆழம் என்பதையும் உணர முடியும்.கடல் நீர் எல்லா இடங்களிலும் ஒரே வாசனையோடு இருக்காது,எனவே நீரின் வாசனையை வைத்தும், நீரோட்டத்தினை வைத்தும் தங்கள் பயணம் செய்யும் திசையை அறிந்து பயணிக்கும்.

சில நாடுகளில் சட்ட விரோதமாக வெடிப்பொருளை கடலில் வெடிக்க செய்து மீன் பிடிக்கும் பழக்கம் உண்டு, வெடிப்பொருள் கடலில் வெடிக்கும் போது மீன்களின் புலன் உணர்வுகள் பாதிக்கப்படுவதால் மயங்கிவிடும் அல்லது அதிர்ச்சியில் இறந்து விடும்.சில சமயம் வெடிமருந்தும் மீன் உடலில் ஊடுருவி விடக்கூடும்.

இந்தியா,இலங்கைப்போன்ற நாடுகளில் இப்படி வெடிப்போட்டு மீன் பிடிக்கும் பழக்கம் உண்டு, நாம் உண்ணும் கடல் மீன்களிலும் இப்படி வெடி மருந்து கலந்து இருக்க வாய்ப்புண்டு.எல்லாத்திலயும் கலப்படம்,அபாயம், காரணம் அறிவாளி மிருகமான மனிதனின் பேராசையே.

கடல் நீரில் ஒளி ஊடுருவம் தன்மையும் ,பார்வையும் குறைவாக இருக்கும்,அதற்கேற்ப சில மீன்களுக்கு தொலைநோக்கு பார்வை சக்தியும் இருக்கிறது.

மீன்களால் ஒலியை எழுப்பவும்,கேட்கவும் முடியும், அதன் மூலம் மற்ற மீன்களோடு தொடர்பும் கொள்கின்றன. சிறிய மீன்கள் மிக குறைந்த அதிர் வெண் ஆன 100 ஹெர்ட்ஸ் வரையிலும் கேட்க வல்லவை.

டால்பின்கள், திமிங்கிலங்கள் செவியுணர் ஒலி , மீ ஒலி இரண்டையும் உணரக்கூடியவை.இவை 2000 ஹெர்ட்ஸ் வரைக்கும் கேட்க கூடியவை.

வவ்வால்களை போல எதிரொலிக்கொண்டு கடலில் உள்ள தடை,இரை,மற்ற பொருட்களை கண்டறிய வல்லவை. இதற்கு எக்கோலோகேஷன் எனப்பெயர்.


சாலமோன் போன்ற மீன்கள் பிறப்பில் நன்னீர் மீன்களாக இருந்து வளர்ப்பருவத்தில் கடல் நீர் மீன்களாக மாறுபவை, அவை கடல் நீர், ஆற்று நீர் ஆகியவற்றில் உள்ள உப்பின் அளவையும் அறியவல்லவை, அதற்கேற்ப உடலில் உள்ள நீரின் அளவை மாற்றியமைத்துக்கொள்ளும்.

கடலில் இருக்கும் மீன்களின் உடலில் உப்பின் அளவு கடல் நீரை விட குறைவாக இருக்கும், எனவே வெளியில் இருக்கும் உப்பின் அடர்த்திக்கு ஏற்ப மீனின் உடலில் இருந்து தண்ணீர் எதிர் சவ்வூடு பரவல் (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்)மூலம் வெளியேறிக்கொண்டே இருக்கும் ,அதனை சமப்படுத்த தொடர்ந்து கடல் நீரைக்குடித்து அதில் உள்ள மிகை உப்பை வெளியேற்றிக்கொண்டே இருக்கும். அவற்றை நன்னீரில் விட்டால் உயிர் வாழாது ஏன் எனில் உப்பின் அளவுக்கு ஏற்ப நன்னீரில் சவ்வூடுபரவல்(ஆஸ்மாசிஸ்) ஏற்பட்டு அதிக நீர் திசுக்களில் சேரும் ,இபடி சேரும் நீரினை வெளியேற்றவில்லை எனில் கடல் மீன்கள் நன்னீரில் இறந்து விடும்.

இதற்கு எதிர்மாறாக நன்னீர் மீன்களின் உடலில் உப்பு அதிகமாக இருக்கும், அவ்வை வாழும் ஆற்றில் உப்பு இருக்காது, எனவே இப்போது சவ்வூடு பரவல் மூலம் உடலில் நீர் சேரும், அவற்றை தொடர்ந்து வெளியேற்றிக்கொண்டே இருக்கும் நன்னீர் மீன்கள். எனவெ நன்னீர் மீன்களை கடலில் விட்டால் உப்பை பிரிக்கும் ஆற்றல் இல்லாததால் இறந்து விடும்.

அதாவது கடல் மீன்களுக்கு மிகை உப்பை பிரிக்கும் ஆற்றலும், நன்னீர் மீன்களுக்கு மிகை நீரைப்பிரிக்கும் ஆற்றலும் மட்டுமே உண்டு.

ஆனால் சாலமோன் போன்ற மீன் வகைகள் இரண்டையும் செய்யும் ஆற்றல் பெற்றவை.

சாலமோன் போன்ற மீன்கள் இனப்பெருக்க காலத்தின் போது முட்டையிடுவதற்காக பல ஆயிரம் கிலோ மீட்டர் கடலில் பயணித்து ஆற்றை அடையும்.அப்படி பயணிக்க நுகர்வு சக்தியையும், நீரோட்டத்தினையுமே பயன்ப்படுத்துகின்றன.



ஆற்றின் முகத்துவாரத்தினை அடைந்ததும் உப்பின் அளவை ஒப்பிட்டு பார்த்து அதற்கு உடலில் உள்ள நீரை சமப்படுத்த நிறைய நீரைக்குடித்து , பின்னர் அதில் இருந்து உடல் உப்பின் அளவை அதிகப்படுத்திக்கொள்ளும், இதற்கு இடை நிலையான உப்பின் அளவுள்ள முகத்துவாரங்கள் உதவுகின்றன.ஒவ்வொரு சாலமோன் மீன் கூட்டத்திற்கும் அவை எந்த நதியின் வாசனை நினைவிலேயே இருக்கும், எனவே அதே நதிக்கே திரும்ப செல்லும்.

பின்னர் முட்டையிடும் இடத்தினை தேடி ஆற்றிலும் பல கிலோமீட்டர் பயணிக்கும். ஏன் அவைக்கடலில் முட்டையிடவில்லை எனில் குட்டி மீன்களுக்கு பிறந்தவுடன் கடலின் உப்பு சூழலை தாங்கும் சக்தி இருக்காது, ஓரளவு வளர்ந்தால் மட்டுமே சாத்தியமாகும். குட்டி சாலமோன்கள் ஓரளவு வளர்ந்த நிலையில் அவற்றுக்கு சுமோல்ட் என்றுபெயர். கடலுக்கு திரும்புவதை சுமோல்டிபிகேஷன்(smoltification). என்பார்கள்.

மேலும் சாலோமோன் மீன்கள் முட்டையிடும் வரை உணவே உண்ணாமல் இருக்கும், காரணம் பெரிய மீன்களால் கடல் உணவை மட்டுமே உண்ண முடியும், எனவே தான் வளர்ந்ததும் மீண்டும் கடலுக்கு திரும்புகின்றன.

முட்டையிடும் வரை உண்ணாமல் இருப்பதால் முட்டையிட்டதும் சாலமோன்கள் இறந்து விடும்.முட்டைப்பொறித்து வெளிவரும் மீன் குஞ்சுகள் சிறிது காலம் ஆற்றில் உண்டு வாழவல்லவை சிறிது வளர்ந்ததும் தானாகவே கடலை நோக்கிப்பயணித்து விடும், துருவப்பறவைகள் வலசைப்போதலை இயல்பாக செய்வது போல செய்ய வல்லவை சாலமோன் மீன்கள்.

---------
பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி ,

கூகிள்,விக்கி, தி மெயில், இணைய தளங்கள் நன்றி!

*****

Thursday, May 24, 2012

பங்கு சந்தையால் பயனடைவது யார்?




பங்கு சந்தைகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் தேவை என பொதுவான கருத்துண்டு,ஆனால் அதில் நடப்பது என்னமோ யூகங்களின் அடிப்படையிலான சூதாட்டமே, மேலும் பல்லாயிரங்கோடிகள் பங்கு வர்த்தகத்தில் புழங்கினாலும் அதன் பலன் யாருக்கு போய் சேருகிறது,சாமனிய மனிதனுக்கு அதனால் பலன் உண்டா என்பதையெல்லாம் அலசும் நோக்கில் இப்பதிவை எழுதுகிறேன்.அனைத்தும் வாசிப்பின் அடிப்படையில் உருவான எனது சொந்த பார்வையே,பிழை இருக்கலாம்,இல்லாமலும் போகலாம் ,மாற்றுக்கருத்து இருப்பின் கூறலாம்.

பங்கு சந்தையின் பலாபலன்களை புரிந்து கொள்ள ஒரு பணக்கார தொழிலதிபர், ஒரு சிறு தொழில் செய்பவர் ஆகிய இருவரை உதாரணமாக எடுத்துக்கொண்டு பார்ப்போம்.

முதலில் குப்பன் எனும் சிறு தொழில் செய்பவரைப் பார்ப்போம்,

குப்பன் ஒரு தேநீர்க்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்கிறார்,அவரது வாழ் நாள் லட்சியம் சொந்தமாக தேநீர் கடை ஆரம்பிப்பதே.உழைப்பில் கொஞ்சம் சேமிப்பு இருக்கு அதனுடன் இன்னும் கொஞ்சம் பணம் கிடைத்தால் போதும் கடை போட்டுவிடலாம் என்ற நிலை.

மேற்கொண்டு நிதிக்காக அனைத்து வங்கிகளுக்கும் படை எடுத்து பார்க்கிறார்,கஜானா திறப்பேனா என அடம் பிடிக்கிறது. வேறு வழி இல்லாமல் கந்து வட்டி கந்தனிடம் 50 ஆயிரம் வட்டிக்கு வாங்கி, கையில் உள்ளப்பணம் ,மனைவி நகை எல்லாம் அடகுவைத்து நிதி திரட்டிவிடுகிறார்.

கடைக்கு இடம் தேடியலைந்து ஒருவழியாக பிடித்து ,அங்கு கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் வரவில்லை என ,வண்டியில் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்து ,பல முறை கார்ப்பரேஷன் அலுவலத்துக்கு அலைந்து,கடைசியில் லஞ்சம் கொடுத்து கடைக்கு அனுமதி வாங்கி ஒருவழியாக தேநீர்க்கடையை ஆரம்பித்து விடுகிறார்.

வரும் வருமானம் எல்லாம் வட்டிக்கும், குடும்ப செலவுக்குமே சரியாக போய்விடுகிறது.மேற்கொண்டு கடையை விரிவுப்படுத்த நிதி இல்லை என்று ரொம்ப டைட்டாக ஓடுது வியாபாரம்.

இப்போது பணக்கார தொழிலதிபர் ஜூனியர் கும்பானி என்பவரைப் பார்ப்போம், பணக்கார குடும்பத்தில் தங்க ஸ்பூனோட பொறந்தவர்,ஆனாலும் சொந்தமாக ஒரு வியாபாரம் செய்யணும் என சுமார் ஒரு கோடி முதலீட்டில் ஒரு தேயிலைத்தூள் நிறுவனம் ஆரம்பிக்க நினைக்கிறார்.

இவர் இடம் எல்லாம் தேடவில்லை, ஆரம்பிக்க அனுமதி கேட்டதும் அரசே தொழிற்பேட்டையில் 5 ஏக்கர் நிலத்தை அடிமாட்டு விலைக்கு கொடுத்து விடுகிறது,மேலும் தடையில்லா மின்சாரம், குடிநீர் எல்லாம் கொடுக்கிறோம், கூடவே 7 ஆண்டுக்கு 100 சதவீத வரிவிலக்கு எல்லாம் சொல்லி தொழிலை துவங்க ஊக்குவிக்கிறது அரசு.

கும்பானியும் தொழிற்சாலை ஆரம்பித்து ஊட்டியில் பச்சை தேயிலையை கிலோ 20 ரூக்கு வாங்கி வந்து அரைத்து பொடியாக ஒரு கிலோ 300 என சல்லீசாக கொளை லாபத்தில் விற்கிறார், அந்த தேயிலைக்கு ஃப்ரீரோசஸ்னு அழகா பேரும் வச்சுக்கிறார்(ரோசாவுக்கும் டீக்கும் என்னையா சம்பந்தம்?)

பேரு மட்டும் வச்சாப்போதுமா ,அதை விளம்பரப்படுத்த ,ஃபிரிஷா என்ற கோலிவுட்/பாலிவுட் நடிகையை வச்சு விளம்பரம் எடுத்து விடுறார், அந்தம்மணியும் வாங்குன காசுக்கு வஞ்சணையில்லாம தம்மாத்துண்டு துணிய உடுத்திக்கிட்டு வந்து என் மேனி எழிலுக்கு காரணம் ஃப்ரிரோசஸ் டீ தான் ??!! சொல்லுது.

மேலும் உங்களுக்கு ஏன் ஃபிரிரோசஸ் புடிக்கும்னு இந்த நம்பருக்கு கால் செய்து சொல்லுங்கன்னு கொஞ்சலா சொன்னதும் ,ஒரு நிமிடத்துக்கு 10 ரூபா புடுங்கிடுவான்னு தெரியாம பல ரசிகக்கண்மணிகள் கால் செய்து ரெக்கார்டட் வாய்ஸ் கேட்டு பூரிப்பது தனிக்கதை ;-))

பிரிஷா குடிச்ச டீயத்தான் !!?? குடிப்பேன்னு மக்களும் போட்டிப்போட்டு ஃபிரிரோசஸ் டீத்தூளை வாங்கி குடிக்கவே கும்பானிக்கும் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டுது ,நல்ல லாபமும் வருது ,வராதா பின்ன 20 ரூ டீத்தூளை 300 ரூனு வித்தா ?

நம்ம டீக்கடை குப்பன் கூட பிரிரோசஸ் டீத்தூளை தான் வாங்குறார்னா பார்த்துக்கோங்க.

இப்படியே ஒரு மூன்று ஆண்டுகள் ஓடுது, கும்பானி அவரோட ஃபிரீரோசஸ் டீக்கம்பெனிய பங்கு சந்தையில் இறக்குறார், ஒரு கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தை நிதி தணிக்கை மற்றும், மதிப்பீடு நிறுவனங்கள் 100 கோடினு மதிப்பீடு செய்கிறது.அது எப்படின்னு எல்லாம் கேட்கக்கூடாது அதான் சந்தை மதிப்பு செய்வது என்ற பொருளாதார நிபுணத்துவம் :-))

ஒரு பங்கு பத்து ரூ என்பதை புக் பில்டிங் முறையில 120 ரூ என மதிப்பிடப்பட்டு ஐபிஓ வெளியிடப்படுகிறது,இதற்கென "lead run book managers" என book building process செய்ய தனி அமைப்புகள் இருக்கு, கமிஷன் வாங்கிக்கிட்டு ,வேலைய கச்சிதமா முடிச்சுக்கொடுப்பாங்க. மக்களும் போட்டிப்போட்டு வாங்குறாங்க. இப்போ போட்டக்காசை விட பல மடங்கு கும்பானிக்கு திரும்ப கிடைச்டுச்சு, இனிமேல் டீத்தூளை விற்கவில்லை என்றாலும் கவலையே இல்லை.

இங்கே குப்பனின் நிலை என்னாச்சுனு பார்த்தா அவரோ இன்னமும் மூன்று ஆண்டுக்கு முன்னர் வாங்கிய 50 ஆயிரம் கடனையே அடைக்க முடியாமல், கந்து வட்டி கந்தனை பார்த்தாலே தலையில் முக்காடுப்போட்டுக்கொண்டு ஓடிவிடுகிற நிலையில் இருக்கார்.

கும்பானிக்கு வியாபாரம் நல்லா போகுது, நிறைய சம்பாதிக்கிறார் ,அப்போ அரசுக்கும் நிறைய வருமான வரிக்கட்டுவார்னு நினைப்பீங்க தானே அதுவும் இல்லை, அப்போ வரியைக்கட்டாமல் ஏய்க்கிறாரா என்றால் அப்படியும் சொல்ல முடியாது ஆனால் அரசாங்கமே சலுகை கொடுக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கும்பானியோட சம்பளம்னு எதுவும் காட்டிக்க மாட்டார்,அப்படியே காட்டினாலும் அது சொற்ப தொகையா இருக்கும். அவருக்கு வரும் வருமானம் அவரது நிறுவனத்தில் அவருக்கு இருக்கும் பங்குகளின் மூலம் வரும் டிவிடென்ட் வருமானம் எனக்காட்டுவார்,அப்படிக்காட்டினால் கேப்பிட்டல் கெயின் டாக்ஸ் அடிப்படையில் வரிப்போடுவாங்க,

வழக்கமான வருமான வரி விகிதம் ஆனது,

2 லட்சம் வரை - வரி இல்லை,

2-5 லட்சம்-10%

5-8லட்சம் வரை-20%

8 லட்சத்திற்கு மேல் 30% வரி ஆகும்.

ஆனால் தொழிலதிபர்கள் ,பங்கு சந்தை முதலீட்டாளர்கள் ஆகியோர் லாங்க் டெர்ம் கேபிட்டல் கெயின் டாக்ஸ் என்ற வகையில் ஒரே விகிதமாக 20% வரிக்கட்டினாலே போதும், அந்தப்பணத்தையும் ,நிறுவனத்தின் பொது வருமானத்தில் இருந்து கட்டிடுவாங்க,அப்படித்தான் கேப்பிட்டல் கெயின் டாக்ஸ் விதி இருக்கு.

இப்போ டீக்கடை குப்பனுக்கே வியாபாரம் நல்லா சூடுப்பிடிச்சு நல்ல லாபம் வருதுனு வச்சுக்கோங்க, அவருக்கு ஆண்டு வருமானம் 10 லட்சத்தினை தாண்டிவிட்டால் போதும் 30% வரிக்கட்ட சொல்லுவாங்க.ஏன் எனில் அவர் பங்கு சந்தையில் இல்லை என்பதாலே அப்படி.

குப்பனுக்கு மட்டுமில்லை நாம் அனைவருக்குமே அப்படியான வருமான வரி விகிதம் தான்.

இதனை எப்படி சொல்கிறார்கள் என்றால் உழைப்பின் மூலம் வரும் வருமானத்திற்கு அதிக வரியும் ,மூல தனத்தின் மூலம் வரும் வருமானத்திற்கு குறைவான வரியாம்.

இப்படிலாம் நடக்குதா என நீங்கள் நினைக்கலாம், கடந்த ஆண்டு இந்தியாவில் அதிக வருமான வரிக்கட்டியது உலகின் முன்னணி இந்திய பணக்காரர் ஆன அம்பானிகள் அல்ல ,ஒடிஷாவை சேர்ந்த ஒரு இரும்பு தாது சுரங்க அதிபரே ஆவார், 95 கோடி ரூ வருமான வரிக்கட்டி சாதனைப்படைத்துள்ளார். மேலும் முதல் மூன்று இடங்களும் ஒடிசா இரும்பு தாது அதிபர்களுக்கே போய்விட்டது.

செய்திக்கான சுட்டி:


இதை ஏதோ நான் பங்கு சந்தை, மற்றும் பெரும் பணக்காரர்கள் மீது ஏதோ கடுப்பில் சொல்கிறேன் என நினைக்கலாம் சிலர், ஆனால் இதை எல்லாம் சொன்னது பங்கு சந்தையின் குரு என சொல்லப்படும் வாரென் பஃபெட் ஆவார், நான் இந்தியாவுக்கு ஏற்றாப்போல ஒரு உதாரணக்கதைய மட்டுமே சொன்னேன் :-))

வாரன் பஃபெட் கட்டுரை:


மேலும் அவர் பெரும்பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும், என்னிடமும் வசூலித்துக்கொள்ளுங்கள் என வெளிப்படையாக எழுதியுள்ளார். சுட்டியில் சென்று முழுவதும் படிக்கவும்.

ஆனால் இந்தியாவிலோ இப்படி பேசக்கூட ஒருவரும் தயாரில்லை, எப்படி எல்லாம் வரிக்கட்டாமல் தவிர்க்கலாம் என பல திட்டங்கள் போடுகிறார்கள், அதற்கு மன்னு மோகன் அரசும் பலமாக ஒத்துழைக்கிறது.

அப்படி தொழிலதிபர்களுக்கு சாதகமாக போட்ட திட்டம் தான் சிறப்பு பொருளாதார மண்டலம், அவற்றில் ஏகப்பட்ட சலுகைகள்,

#முதலீட்டுக்கு 100% வருமான வரி விலக்கு.

#உற்பத்தி பொருளுக்கு, லாபத்திற்கு, முதல் 7 ஆண்டுகளுக்கு 100% வரிவிலக்கு பின்னர் ,25%,அப்புறம் 50% என ,மொத்தம் 15 ஆண்டுகளுக்கு வரிச்சலுகை.

#பத்திரப்பதிவு, முத்திரை தாள் கட்டணம் இல்லை.

# மறு விற்பனையில் கிடைக்கும் லாபத்திற்கும் வரி இல்லை.

உ.ம்: சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2 ஏக்கர் இடம் இருக்கு,ஆரம்பத்தில் குறைவான விலைக்கு வாங்கிய இடத்தை சில ஆண்டுகளுக்கு பின்னர் அதில் ஒரு ஏக்கரை அதிக விலைக்கு விற்றால் அதற்கு வரி கிடையாது.

சாதாரண குடிமக்கள் அப்படி தங்கள் இடத்தினை விற்று லாபம் சம்பாதித்தால் கேபிட்டல் கெயின் டாக்ஸ் எனக்கட்ட வேண்டும்.

# வெளியில் இருக்கும் துணை நிறுவனங்களில் இருந்து பொருட்கள் வாங்கினாலும் அதற்கும் விற்பனை வரி,சேவை வரி இல்லை.

#500 மில்லியன் டாலர் வரை வெளிநாட்டு நிதியமைப்புகளிடம் கடன் பெற அனுமதி பெற வேண்டியது இல்லை.

இப்படிப்பல சலுகைகள் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் வேலை வாய்ப்பையும்,உற்பத்தியை பெருக்க தானே அரசு செய்கிறது எனலாம், ஆனால் அப்படி நடப்பது இல்லை என்பதற்கு அமெரிக்காவே உதாரணம்.ஏன் எனில் இந்த திட்டத்தையே அமெரிக்காவைப்பார்த்து தான் மன்னு மோகன் காப்பி அடித்துள்ளார்.

அமெரிக்காவில் 60-70 களிலேயே இத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுவிட்டது.நிறைய உற்பத்தி ஆனது என்னமோ உண்மை தான் ஆனால் இப்போது என்ன ஆனது என்றால் குமிழி உடைந்து விட்டது என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.

ஏன் எனில் 1000 பேர் செய்ய வேண்டிய வேலையை நவீன எந்திரங்கள்,கணினி என வைத்து 100 பேரைக்கொண்டே இத்தகைய சிறப்பு தொழிற்சாலைகளில் முடித்து விடுவதால் ஆரம்பத்தில் சில வேலைவாய்ப்புகள் உருவானாலும் நீண்டக்கால நோக்கில் வேலை வாய்ப்பின்மையே உருவாக்குகிறது.

பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறார், ஏழை மேலும் பரம ஏழை ஆகிறான்!இதுவே நவீன பொருளாதார சித்தாந்தத்தின் பலன்!

பின்குறிப்பு:

தகவல்,படங்கள் உதவி,

நியுயார்க் டைம்ஸ்,டைம்ஸ் ஆப் இன்டியா,கூகிள், ரெடிப் இணைய தளங்கள்,நன்றி!




Tuesday, May 22, 2012

தீப்பிடிக்க ...தீப்பிடிக்க நானோ காருடா ...!




வந்த புதிதில் ஒரு லட்சம் ரூபாய் கார் என்ற பட்டத்துடன் இந்திய கார் சந்தையில் புகுந்து நடுத்தர மக்களின் மனதில் தீப்பிடிக்க வைத்த நானோ கார் இப்போதெல்லாம் அதுவே தீப்பிடித்து செய்தியாகிக்கொண்டிருக்கிறது.

ஒரு உண்மை சம்பவம்:

நானோ எரிவதுப்பற்றி சில செய்திகள் படித்திருந்தாலும் ஒரு பதிவு போடலாமா வேண்டாமா என தயக்கம் இருந்துக்கொண்டே இருந்தது, சமீபத்தில் கேபிள் சங்கரின் பதிவில் ,வெங்கி என்கிற இம்சை என அறியப்படும் மூத்தப்பதிவரின் நானோ எரிந்து விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டிருப்பதையும்,வெங்கி மயிரிழையில் தப்பியதையும் பகிர்ந்துக்கொண்டார், அதனைப்பார்த்த பின்னரே பதிவு போட்டால் தப்பில்லை,நாலு பேருக்கு விழிப்புணர்வு ஏற்படும் எனப்போட்டாச்சு.

மேலும் விபத்திற்காக இழப்பீடு கேட்டு டாடா மோட்டாரிடம் விண்ணப்பித்தும் கிடப்பில் இருக்கிறது ,என்றும் "கேட்டால் கிடைக்கும்" என்ற அவர்களின் அமைப்பின் மூலம் அனைவரும் டாடா மோட்டார் முகநூலில் கேட்கவும் சொல்லி இருக்கிறார்.

செய்தியுடன் கூடியப்புகைப்படம்:


வெங்கியின் முகநூல் பக்கம்:


கேட்டால் கிடைக்கும் விவரங்களுக்கு:

நானோ கார் தீப்பிடிக்க என்ன காரணம் , கட்டமைப்பில் உள்ள கோளாறு, அதன் குறை நிறைகளையும் ,கொடுக்கும் காசுக்கேற்ற தரமான காரா என அலசுவதே இப்பதிவின் நோக்கம்.

நிறைகள்:

*விலை மலிவானது என சொல்லப்படுகிறது ஆனால் அப்படியல்ல கொஞ்சம் வசதிகளுடன் வாங்க வேண்டும் என்றால் 2.60 லட்சம் ஆகிவிடும்.

*குறைவான முன் தொகை, மாதத்தவணை என அப்படியும் நடுத்தட்டு மக்களின் காராகவே கருதப்படுகிறது ஒரு கூடுதல் தகுதியே.

*திருப்பும் ஆரம் சுமார் 4 மீட்டர் எனவே குறுகலான,ஜனசந்தடி மிக்கப்பகுதிகளில் பயன்படும்.

* மைலேஜ் நன்றாக உள்ளது.

* டாடா என்ற நம்பகமான பிராண்ட்(இப்போ அந்த நம்பகத்துக்கு வேட்டு வைப்பதும் நானோவே)

என்னால் இந்த அளவுக்கு தான் நானோவின் பலமாக சொல்லமுடியும், அவர்கள் இன்னும் பல பலன்கள் சொல்லக்கூடும் அதெல்லாம் உண்மையில் காகித வாக்குறுதிகளே.

இப்போது குறைகளை காணலாம்.,

வடிவமைப்பு குறை-1

* அதிக இடவசதி எனச்சொல்லிக்கொள்வது ஒரு சுய தம்பட்டமே ,காரின் ,நீளம்,அகலம் மிக குறைவே பின்னர் எப்படி அதிக இடவசதி, உயரத்தினை அதிகரித்து , கன அளவை அதிகரித்து உள்ளே இட வசதி என்கிறார்கள்.

உயரமானவர்களுக்கு தலை இடிக்காது என்கிறார்கள் ஆனால் உட்காரும் போது கால் நீளுமே அதற்கு இடம் எங்கே? கொஞ்சம் பருமனானவர்கள் என்றாலும் கஷ்டமே.

மேலும் நீளம்,அகலம் விகிதத்திற்கு ஏற்ப காரின் உயரம் இருக்க வேண்டும், இல்லை எனில் வளைவுகளில் உருளும் அபாயம் உண்டு, ஏன் எனில் உயரம் கூடும் போது மைய ஈர்ப்பு புள்ளி (cg-Centre of gravity)உயரத்தில் அமையும், திடமாக தரையில் இருக்க மைய ஈர்ப்பு விசை புள்ளி உயரம் குறைவாக இருக்க வேண்டும்.

இரட்டை அடுக்கு பேருந்துகளில் இந்நிலை ஏற்படும். இதனை தவிர்க்க கீழ் தளத்தில் அதிக எடையும், மேல் தளத்தில் குறைவாகவும் இருக்குமாறு செய்வார்கள்.

படம்-1 புவியீர்ப்பு மையம் தாழ்வாக உள்ளப்போது,நிலைப்பு தன்மை அதிகம் எனக்காட்டுகிறது.


படம்-2 , புவியீர்ப்பு மையம் உயரத்தில் இருக்கும் போது நிலைப்பு தன்மை இழப்பதைக்காட்டுகிறது.


வழக்கமான கார்களிலும் வளைவில் திரும்பும் போது சாய்வது போன்ற பிரமை ஏற்படும், நாமும் வளைவின் வெளிப்பக்கம் நோக்கி தள்ளப்படுவோம். ஆனால் கார் சாய்ந்து விடாது நிலையாகவே இருக்கும்.

மேற்சொன்னது எல்லாம் நடக்க காரணம் மைய ஈர்ப்பு விசை சரியான புள்ளியில் இருக்குமாறு கார் வடிவமைக்கப்பட்டுள்ளதே காரணம் ஆகும்.

மேலும் கூடுதல் பாதுகாப்பிற்கு "ஆண்டி ரோல் பார்" (Anti roll bar)என்ற ஒரு இருப்பு கம்பி அமைப்பு காரின் முன் ,பின் அச்சுகளில் பொறுத்தப்பட்டிருக்கும், தரமான கார்களில் இரண்டு அச்சிலும், கொஞ்சம் விலைக்குறைவான கார்களில் முன் அச்சில் மட்டும் பொறுத்தப்பட்டிருக்கும்.

ஆனால் டாடா நானோ காரில் முன்,பின் என இரண்டு அச்சிலும் ஆண்டி ரோல் பார் இல்லை.இதனை நாம் விரும்பினால் பொறுத்திக்கொள்ள முடியும்,ஆனால் அதற்கான அமைப்பு காரில் கொடுக்கப்பட்டிருக்கிறதா என தெரியவில்லை.

எனவே நானோ வேகமாக செல்லும் போது வளைவில் உருண்டு விடும் அபாயம் உள்ளது.

ஆண்டி ரோல் பார் செயல்படும் விதம்:

காரினை இடப்பக்கமாக திருப்புகிறோம் எனில் ,இடப்பக்க சக்கரம் கீழ் அழுந்தும், அதே சம்யம் வலப்பக்க சக்கரத்தின் மீது அழுத்தம் குறைந்து மேலே தூக்கும் , அப்படி தூக்கும் போது 30 டிகிரிக்கு மேல் வாகனம் சாயுமெனில் உருண்டு விடும். இந்த கணக்கு வாகன வடிவமைப்பு, அதில் உள்ள நிறைப்பொறுத்து மாறும், 30 டிகிரி என்பது பொதுவான அளவு.

ஆண்டி ரோல் பார் பொறுத்தப்பட்ட கார் எனில் வலப்பக்க சக்கரம் மேலே தூக்காமல் கீழே அழுத்தி சாலையில் பிடிப்பை ஏற்ப்படுத்தும். ஒருப்பக்கம் கீழே சென்றால் அதற்கு ஏற்ப அடுத்தப்பக்கதில் கவுண்டர் பேலன்ஸ் செய்யும் வகையில் ஆண்டி ரோல்ப்பார் வடிவமைக்கப்பட்டு வாகன அச்சில் பொறுத்தப்பட்டு ,,இடம்,வலம் என இரண்டு சக்கரங்களையும் இணைத்து இருக்கும்.

anti roll bar image:


உதாரணமாக, மாநகரப்பேருந்தின் படிக்கட்டுப்பகுதியில் நிறையப்பேர் தொங்கிக்கொண்டு இருப்பார்கள் இதனால் பேருந்து சாய்ந்து விடுமோ எனப்பயப்படும் அளவில் ஒருப்பக்கமாக சாய்ந்துக்கொண்டு போவதைப்பார்த்திருப்பீர்கள், வாகனத்தின் கூடு தான் சாய்வாக இருக்கும் ஆனால் இரண்டு அச்சின் சக்கரங்கள் இடம்,வலம் என இரண்டுப்பக்கமும் சமமாக சாலையில் இருக்கும். இதற்கு ஒரு காரணம் ஆண்டி ரோல் பார் ,மற்றது வாகனத்தின் மைய ஈர்ப்பு விசைப்புள்ளி குறைவான உயரத்தில் இருப்பது.

டாடா நானோவில் ஆண்டி ரோல் பாரும் இல்லை, மைய ஈர்ப்பு விசையும் உயரமாக வருவது போல வடிவமைப்பு, என எதிர்மறையாக உள்ளது.

வடிவமைப்பு குறை-2

இந்தியாவில் உபயோகத்தில் உள்ள கார்களிலேயே பின் புற எஞ்சின்(rear engine and rear wheel drive)கொண்ட கார் நானோ மட்டுமே(like auto,share auto) வெளிநாடுகளில் போர்ஷ், வோல்க்ஸ் வாகன் பீட்டில் போன்றவை பின் எஞ்சின் வாகனங்களே ஆனால் அவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டு ,பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை எனவே அவற்றுடன் எல்லாம் நானோவை ஒப்பிட இயலாது.

பின் புறம் எஞ்சின் உள்ளதால் வாகன நிறை சரியான விகிதத்தில் முன்,பின் அச்சுகளிடையே சமமாக நிறவப்பட வேண்டும், (weight balance or mass centralization)ஆனால் நானோவில் அப்படியில்லாமல் பின் அச்சின் மீது 60% எடையும், முன் அச்சில் 40% வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பின் அச்சில் எடைக்கூடினால் என்ன ஆகும்?

வாகனம் வளைவில் சீராக திரும்ப டிபரன்ஷியல் கியர் (differential gear)என்ற அமைப்பு பயன்ப்படுகிறது. அதுப்பற்றி முன்னரே ஒரு பதிவிட்டுளேன். அவற்றை இங்கு காணவும்



வாகனத்தின் எடை சமச்சீராக உள்ள கார்களுக்கே டிபரன்ஷியல் கியர் மட்டுமே சீரான திரும்புதலுக்கு உயர் வேகத்தில் உதவாது என்பதால் "ஆண்டி பிரேக் லாக் சிஸ்டம்"(ABS_ Anti brake lock system) எலக்ட்ரானிக் பேலன்ஸ் கண்ட்ரோல்" (EBC-electronic balance control) and EPS -eletronic assited power steering ஆகியவை பயன்ப்படுத்தப்படுகின்றன.

இது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இந்தியாவில் விற்கப்படும் நானோக்களில் பொறுத்தப்படவில்லை,சாதாரணமாக காணப்படும் பவர் ஸ்டியரிங்க்கூட இல்லை..மேலும் பின் புற எஞ்சினால் எடையும் சமச்சீராக இல்லை, இந்நிலையில் வளைவில் திருப்பும் போது என்ன ஆகும் எனில்

"குறைவான திருப்புதல் விளைவு "(Under steering effect)ஏற்படும். அப்படியெனில் என்ன,


ஒரு கார் நேர்க்கோட்டில் பயணிக்கிறது எனில் அதன் மீது நேர்க்கோட்டு உந்தம் ஏற்படும் இது தொடர்ந்து நேராக செல்லும் நிலையில் இருக்கும், அப்படி இருப்பது நிலைமம் (inertia)என்பார்கள்.நியூட்டனின் விதியை நினைவில் கொள்க.

இப்போது வலப்புறமாக வாகனத்தினை திருப்ப முயன்றால் என்ன ஆகும் எனில் முன் சக்கரம் மட்டுமே திரும்பும் ஆனால் வாகனத்தின் உடல் மீது செயல்படும் ,உந்தம் ,நிலைமம் காரணமாக நேராக செல்ல எத்தனிக்கும், இதனால் வாகனத்தின் மீது ஒரு திருப்பு விசை செயல்ப்படும், இப்போது இரண்டு அச்சுகளில் பின் அச்சில் எடை அதிகம் இருந்தால் அதற்கு அதிக உந்தம் கிடைத்து பக்கவாட்டில் முன்னால் வரப்பார்க்கும் ,கிட்டத்தட்ட சுழலப்பார்க்கும்(spin), பின்பகுதியானது சாலையைவிட்டு சறுக்கிக்கொண்டு போவது போல போகும், இதனை டிரிப்ட் (drift)என்பார்கள்.

பந்தய மைதானங்களில் கார்கள் இப்படி டிரிப்ட் ஆகிக்கொண்டு செல்வதைப்பார்த்து இருக்கலாம்.டிரிப்ட் ரேஸ் என தனியாகவும் ஒரு பந்தயம் உண்டு. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கார்கள் தான் டிரிப்ட் ஆனாலும் புரளாமல் இருக்கும், நானோ போன்றவை பக்கவாட்டில் பல்டி தான் அடிக்கும்.

இதே விளைவு சாலையின் இடப்பக்கமாக செல்லும் போது இடப்பக்கம் திருப்ப கடினமாக இருக்கும் ,அப்போது அழுத்தம் கொடுத்தால் அதிகம் திரும்பி விடும் இதை அதிக திருப்புதல் விளைவு (over steering effect)என்பார்கள். இது போன்று நிகழ்ந்தால் பக்கத்தில் வரும் வாகனத்தின் மீதோ அல்லது எதிர் திசையில் வரும் வாகனத்தின் மீதோ உரசிவிடும்/மோதிவிடும் அபாயமும் உள்ளது.


எனவே மற்றக்கார்களை போல வளைவில் வேகமாக நானோவை ஓட்டக்கூடாது.

நானோவில் குறை/அதிக திருப்புதல் விளைவை தடுக்க ஒரு முயற்சி செய்துள்ளார்கள் ஆனால் அதுவே ஒரு பயன்பாட்டுக்குறைப்பாடு ஆகிவிட்டது எனலாம், அது என்னவெனில்,

நானோவில் பின் சக்கரங்கள் முன் சக்கரங்களை விட பெரியவை, 155 மி.மி ஆரம் கொண்டவை முன் சக்கரங்கள் 135 மி.மி ஆரம் கொண்டவை சிறியவை. இப்படி பின் சக்கரங்களை பெரிதாக்குவதன் மூலம் பின் அச்சுக்கு அதிக சாலைப்பிடிப்பு (road grip)ஏற்படும் இதனால் குறை திருப்பல், மிகை திருப்பல் விளைவு சிற்றிது கட்டுப்படுத்தப்பட்டு "டிரிப்ட்" ஆவது ஓரளவுக்கு குறையும், ஆனால் இம்முறை ஓரளவுக்கு மட்டுமே கைக்கொடுக்கும்.

இப்படி இரண்டு அச்சுக்கும் வேறு அளவில் டயர்கள் இருப்பதால் ,ஒரே ஸ்டெப்னி டயரைப்பயன்ப்படுத்த முடியாது. நானோ வாங்கும் போது கொடுக்கும் ஸ்டெப்னி டயர் முன் சக்கரத்துக்கானது,எனவே முன் சக்கரம் பங்சர் ஆனால் மட்டுமே உதவும்,பின்னால் பங்சர் ஆனால் கழட்டி எடுத்து சரி செய்து மாட்டிக்கொள்ள வேண்டும். ட்யூப்லெஸ் டயர் என்பதால் பங்சர் ஆனாலும் சுமார் 50 கி.மீ ஓட்டி செல்ல முடியும் என்பதை வைத்தே சமாளிக்கவேண்டும்.

நானோவில் பின் புற ஹேட்ஜ் டோரையும் திறக்க முடியாது.பாதியில் ரேடியேட்டர் அணுக மட்டுமே ஒரு திறப்பு உண்டு. பொருட்களை எல்லாம் உட்புறமாக மட்டுமே வைக்க ,எடுக்க முடியும் என்பதும் ஒரு வடிவமைப்பு குறையாகும்.

இது போல இன்னும் சில பல வடிவமைப்பு குறைகள் இருக்கு மிகவும் ஆபத்தான சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுளேன், இப்போது ஏன் தீப்பிடிக்கிறது என்பதைப்பார்க்கலாம்.

நானோ தீப்பிடிக்கவும் பின் புற எஞ்சின் வடிவமைப்பே காரணமாக இருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு, ஏன் எனில் டாடாவே சில தீப்பிடிப்பு சம்பவங்களை ஆராய்ந்து சொல்லியுள்ளது என்னவெனில் ,பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய்கள் வெடித்தது(rupture in fuel tube), அல்லது சைலண்சரில் ஏதோ ஒரு பொருள் சிக்கி அடைப்பு ஏற்பட்டது ஆகியவையே காரணம் என சொல்லியுள்ளது.

இதன் காரணமாக பல நானோக்களில் பெட்ரோல் செல்லும் குழாய்களை மாற்றியும் கொடுத்துள்ளது.

பெட்ரோல் குழாய்கள் வெடிப்பதற்கும்,பின் புற எஞ்சினுக்கும் என்ன தொடர்பு?

டாடா நானோவில் பெட்ரோல் டேங்க் முன்புற டிரைவர் சீட்டுக்கு அடியில் உள்ளது, பேட்டரி அதற்கு பக்கத்து சீட்டுக்கு அடியில் உள்ளது. பெட்ரோல் டேங்க் உள்ளே இருப்பதும் அல்லாமல் மின்கலத்துக்கும் அருகில் இருப்பதால் மின்சுற்றுக்கோளாறால் தீப்பிடித்தால் ஓட்டுநரே முதல் பலியாவார் என்பது மிகவும் ஆபத்தான வடிவமைப்பு குறையாகும்.

எஞ்சின் பின்புற இருக்கைக்கு பின்னர் அடியில் உள்ளது. அதன் மீது மூடிப்போட்டு மூடி லக்கேஜ் வைக்கும் பகுதியாக்கிவிட்டார்கள்,பின்பக்க பம்பர் அருகில் ரேடியேட்டர் மையமாக உள்ளது.



இப்படிப்பட்ட வடிவமைப்பில் எஞ்சினுக்கு இயற்கையான காற்றோட்டம்,மற்றும் குளிர்ச்சி கிடைக்காது, ரேடியேட்டர் மட்டுமே குளிரூட்டும் அமைப்பு.வழக்கமாக எல்லாக்கார்களிலும் முன்பக்கம் ரேடியேட்டர் இருக்கும் அப்போது தான் அதிக காற்று உள்வாங்கி நன்றாக குளிர்விக்கும்,ஆனால் நானோவிலே பின்னால் இருக்கிறது எனவே இயற்கையாக காற்று கிடைக்காது ,பேன் மூலம் வரும் காற்றே, அது சிறப்பாக குளிர்விக்க போதுமானதாக இருக்காது.

எனவே எஞ்சின் இருக்கும் பகுதியில் அதிக வெப்பம் நிலவ வாய்ப்புள்ளது.ரேடியேட்டர்களின் அமைவிடம் ஏன் முக்கியம் எனில், ஃபார்முலா ஒன் பந்தயக்கார்களிலும் எஞ்சின் பின் பக்கமே இருக்கிறது,அதிலும் அதிவேகத்தில் ஓட்டப்படுவதால் எஞ்சின் பயங்கரமாக சூடாகிவிடும் ஆனால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு பொறுத்தப்பட்ட ரேடியேட்டர்கள் நன்றாக எஞ்சினை குளிர்விப்பதால் பிரச்சினை ஆவதில்லை.

ஃபார்முலா-1 கார்களின் இரண்டுபக்கமும் ஒரு சாய்வான கோணத்தில் ரேடியேட்டர்கள் பொறுத்தப்பட்டு ,நேரடியாக காற்றுப்படும் படியே வடிவமைத்திருப்பார்கள்.அப்போது தான் விரைவாக எஞ்சினை குளிரிவிக்க முடியும்.இந்த பந்தயக்காரின் படத்தினைப்பார்த்தால் எளிதில் புரியும்.



டாடா நானோவில் முன் புறம் உள்ள பெட்ரோல் டேங்கில் இருந்து பெட்ரோல் ,பின் புறம் உள்ள எஞ்சினுக்கு செல்கிறது, நானோவில் மல்டி பாயிண்ட் பியுல் இஞ்செக்‌ஷன் (MPFI-multi point fuel injection)அமைப்பு உள்ளது. இது எஞ்சினுக்கு மேல உள்ளதும் ,எஞ்சின் மீதாக பெட்ரோல் குழாய் செல்வதையும் இப்படத்தில் காணலாம்.




சரியாக குளிரிவிக்கப்படாத எஞ்சின் அதிக வெப்பமாகிவிடுவதால் , பெட்ரோல் எஞ்சின் சிலிண்டர் உள்ளே சென்றதுமே ,ஸ்பார்க் பிளக் செயல்ப்படும் முன்னரே பற்றிக்கொண்டு வெடிக்கும் இதனை நாக்கிங் (Knocking or detonation or pingking)என்பார்கள், இது போல பல நடக்கும் போது எஞ்சின் பிஸ்டன்(piston)cylinder head, கேஸ்கெட்(gasket) எல்லாம் சிதைந்து வெளியிலும் தீப்பிழம்பு வரலாம்.



கடினமான காஸ்ட் அயர்ன் எஞ்சின் பிளாக் (cast iron block)எனில் ஓரளவு தாங்கும், ஆனால் இப்பொழுதெல்லாம் அலுமினியம்-மெக்னீசியம் கலவையிலான எடைக்குறைவான எஞ்சின் பிளாக்குகளே பயன்ப்படுகின்றன. அதிலும் நானோ எஞ்சின் மிக இலகுவான வடிவமைப்பு அதிக வெப்பம் தாங்குவது கடினமே.அதிக வெப்பத்தில் இரும்பை விட அலுமினியம் 3 மடங்கு அதிகம் விரிவடையும் என்பது கவனிக்க தக்கது.அதிக மைலேஜ் கிடைக்கவே அலுமினியம் அல்லாய் எஞ்ஜின்கள் பயன்ப்படுத்தப்படுகின்றன.

இது போன்ற எஞ்சின் சிலிண்டரில் ஏற்படும் நாக்கிங் மட்டும் இல்லாமல் இன்னொரு வகையிலும் தீப்பிடிக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன்.

எஞ்சின் பிளாக் வெகு அருகில் பெட்ரோல் கொண்டு வரும் குழாய் உள்ளது, அப்பகுதியில் வெப்பம் அதிகமாக இருப்பதால், குழாயில் உள்ள பெட்ரோல் எளிதில் ஆவியாகி விடக்கூடும் இதனால் ஏற்படும் அழுத்தம் தாங்காமல் குழாய் வெடித்தால் ,சூடான எஞ்சின் உள்ள நிலையில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.

nano fire video:



இதனை டாடா நிறுவனம் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாமல் புதிதாக நன்கு இன்சுலேட் செய்யப்பட்ட அதிக அழுத்தம் தாங்கும் பெட்ரோல் குழாய்களை மாற்றி பொருத்தியதிலிருந்தே ,தீப்பிடித்தலுக்கு வடிவமைப்பு ரீதியாகவே ஒரு காரணம் இருப்பது தெளிவாகிறது.

டாடா நிறுவனமே சைலண்சரில் அடைப்பு ஏற்பட்டதால் தீப்பிடித்தது என்றும் சொல்லி இருக்கிறது. அது எப்படி எனப்பார்ப்போம்.

சைலண்சர் எப்படி வேலை செய்கிறது என்பதை எனது பழையப்பதிவான
உங்கள் வாகனம் சத்தம் போடாமல் ஓடுவது எப்படியில் காணலாம்.

எஞ்சினில் இருந்து வரும் புகையானது அதிக வெப்பமாக இருக்கும், சைலைண்சரில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் சரியாக புகை வெளியேறாது, இதனால் ஒரு பின்னோக்கிய அழுத்தம் (back pressure)ஏற்பட்டு மீண்டும் சூடான புகை எஞ்சினுக்குள் சென்று விடும் ,இதனால் எஞ்சின் குளிராமல் அதிக வெப்பமாகும் முன்னர் சொன்னப்படியே "நாக்கிங்" விளைவால் எஞ்சின் சிதைந்து தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.

இது வரைப்பார்த்ததில் இருந்து நானோவில் பிரச்சினைகள் ஏற்படக்காரணம் ,பின்னால் உள்ள எஞ்சினும், சரியாக எஞ்சின் குளிர்விக்கப்படாததும் என்பது புரிந்திருக்கும்.

இது ஒரு வடிவமைப்பு குறைப்பாடு இதனை சரி செய்து நல்ல தரமான ,பாதுகாப்பான காரினை டாடா வெளியிடலாம், ஆனால் விலை ஏறிவிடும்.வெளிநாட்டில் எல்லாம் இப்படி குறைபாடு இருப்பது தெரிந்தால் உற்பத்தியை உடனே நிறுத்திவிடுவார்கள், ஆனால் இங்கோ நிலைமையே வேறு.

முன்னர் டேவூ மோட்டார்ஸ் என்ற கொரிய கம்பெனியின் சியல்லோ வகை கார்களில் இது போல தீப்பிடிக்கும் பிரச்சினை வந்து ,விற்பனைப்பாதிக்கப்பட்டு , பின்னர் வேறு சிலக்காரணங்களால் நஷ்டமும் ஏற்படவே நிறுவனமே மூடப்பட்டுவிட்டது.

தற்போதைய நிலையில் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டால் நானோ வாங்குவது சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வது எனலாம் :-))

பின் குறிப்பு:

தகவல்கள்,படங்கள் உதவி,
google, team bhp,shell, youtube ,இணைய தளங்கள்,நன்றி!