Tuesday, June 26, 2012

vishwaroopam in barco auro- 11.1 3d audio.



லோகநாயகர் கமலஹாசர் விசுவரூபம் என்ற திரைக்காவியத்தை செதுக்கி எடுத்து வருகிறார், தமிழ் சினிமாவை உலக சினிமாவாக ஆக்க அவர் ரொம்ப முயற்சிக்கிறார் என லோக நாயகரின் விசுவாசிகள் வழக்கம் போல முரசொலிக்கிறார்கள்.

ஏற்கனவே சிங்கப்பூரில் நடந்த "IIFA film festival" இல் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக சினிமாவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அப்படத்தின் ஒலி அமையமைப்பினை 11.1 டிராக்கில் அமைக்க அமெரிக்கா செல்கிறார் என செய்திகள் வெளியாகின. அப்படியானால் சிங்கப்பூரில் ஒலியில்லாமல் படம் திரையிடப்பட்டதா? இல்லை மீண்டும் புதிதாக ஒலிச்சேர்க்கை செய்வாரா என ஒரு சந்தேகம்.

11.1 டிராக் ஒலியமைப்பு என்கிறார்களே அது என்ன என இணையத்தில் துழாவியதில் கிடைத்தவைகளை இங்கே பகிர்கிறேன்.


Barco audio என்ற அமெரிக்க ஒலிப்பொறியியல் வடிவமைப்பு நிறுவனம் தற்சமயம் barco Auro11.1 3d sound என்ற திரையரங்க ஒலி அமைப்புக்கு வடிவமைத்துள்ளது. இம்முறையில் ஒலியமைக்கப்பட்ட முதல் ஹாலிவுட் படம் ஜார்ஜ் லுகாஸ் தயாரிப்பில் வெளிவந்த "ரெட் டெயில்ஸ்" என்ற இரண்டாம் உலகப்போர் அடிப்படையிலான படமாகும் ,இப்படம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது.



வழக்கமான திரையரங்க ஒலியமைப்பில் டிடிஎஸ் -5.1 , டால்பி டிஜிட்டல் புரோலாஜிக் -7.1 என இரண்டு அமைப்புகளே பெரிதும் பயன்ப்படுத்தப்படுகின்றன.


இரண்டும் தனித்தனி போட்டி நிறுவனம் ஆனால் ஒரே படத்தில் இரண்டு அமைப்பிலும் ஒலிச்சேர்க்கை செய்து இருப்பார்கள், இதன் மூலம், திரையரங்கில் இருக்கும் ஒலியமைப்புக்கேற்ப ஒலிக்கப்படும்.

(திரைப்பட சுருளில் உள்ள ஒலிக்குறிப்புகள், இதில் குறைவான அளவில் பயன்ப்படும் சோனி SDDS ஒலியும் உள்ளது)

மேலும் இவ்வொலியமைப்பின் ஒலிக்குறிப்புகள் மட்டும் இல்லாமல் வழக்கமான ஸ்டீரியோ மற்றும் மோனோ ஒலியும் திரைப்பட சுருளில் இருக்கும், ஏன் எனில் சமயங்களில் டால்பி,டிடிஎஸ் ஒலியமைப்புகள் செயல்படாமல் போனால் இவை அவசரத்துக்கு உதவும். பழைய திரையரங்குகளில் திரையிடவும் உதவும்.

5.1 அல்லது 7.1 என குறிப்பது 5 (அ) 7 சேனல்கள் ஒலிக்கும் ஒரு சேனல் சப்-ஊஃபருக்கும். எனவே 5.1 என்றால் 6 சேனலில் ஒலியும் 7.1 என்றால் 8 சேனலில் ஒலியும் வரும். இவற்றில் 5.1 இல் ஒலிப்பெருக்கிகள் முன்பக்கம் ,வலப்பக்கம், இடப்பக்கம், பின்பக்கம் என்ற அமைப்பில் அனைத்து ஒலிப்பெருக்கியும் கிடைமட்ட தளத்தில் இருக்கும்.

எனவே திரையில் தோன்றும் காட்சியில் ஒலியின் உயர வித்தியாசம் அறிய முடியாது என டால்பி 7.1 இல் இரண்டு ஒலிப்பெருக்கிகளை கூறை உயரத்தில் பொருத்தி செங்குத்து அச்சிலும் ஒலியை உருவாக்கி முப்பரிமான ஒலி என்றார்கள்.

இதன் அடுத்தக்கட்டமாக உயரத்தில் அமைக்கப்படும் ஒலிப்பெருக்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வேறுப்பட்ட உயரத்தில் ஒலிப்பெருக்கிகளை அமைத்து ,மேலும் ஒலி செல்லும் சேனல்களின் எண்ணிக்கையை 11.1 என 12 சேனல்களில் கொடுப்பது தான் barco Auro11.1 3d sound அமைப்பாகும்.


இவ்வமைப்பில் கூறையில் உள்ள ஒலிப்பெருக்கிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் விமானம் பறப்பது போன்ற காட்சிகளில் ,"தத்ரூபமான ஒலி சூழல்" திரையரங்கில் உருவாகும், எனவே தான் "ரெட் டெயில்ஸ்" என்ற படத்தில் பயன்ப்படுத்தினார்கள், அப்படம் இரண்டாம் உலகப்போரில் ஈடுப்பட்ட விமானப்படைப்பிரிவின் சாகசத்தினை விவரிக்கும் படம். ரெட் டெயில் என்பது அமெரிக்க விமானப்படையில் ஒரு பிரிவின் சங்கேதப்பெயர் ஆகும்.

அப்படம் வெளியான காலத்தில் மொத்தமே நான்கு திரையரங்கில் தான் 11.1 ஒலியமைப்பு அமெரிக்காவில் இருந்தது.எனவே அவ்வொலியமைப்பின் சிறப்பினை பலரும் உணர வாய்ப்பேயில்லை. தற்போது வரைக்கும் உலகம் முழுவதும் 125 திரையரங்கில் தான் 11.1 ஒலியமைப்பு வசதியுள்ளது.

ஆரோ11.1 ஒலியமைப்பின் விளக்கப்படம்

சுட்டி:



இந்தியாவில் இது வரையில் ஒரு திரையரங்கிலும் அவ்வசதியில்லை. பின் எதற்கு லோகநாயகர் 11.1 இல் ஒலியமைப்பு செய்யபோவதாக சொல்கிறார் எனப்பார்க்கிறீர்களா எல்லாம் ஒரு "மார்க்கெட்டிங்" உத்திதான்.மேலும் இதில் சின்னதாக ஒரு சூட்சமமும் இருக்கு,அது என்னவெனில் 11.1 இல் ஒலியமைப்பு செய்யாமல் ஏற்கனவே இருக்கும் ஒலியமைப்பினை 11.1 ஆக கன்வெர்ஷன் செய்யும் வசதியை பயன்ப்படுத்திக்கொள்வது தான்.

திரைப்பட ஒலியமைப்பில் சில முதல்கள்:

ஹாலிவுட்டில்,

முதல் டால்பி டிஜிட்டல் திரைப்படம்-பேட்மன் ரிடர்ன்ஸ்.

முதல் டிடிஎஸ் திரைப்படம்- ஜுராசிக் பார்க்-1

தமிழில்.

முதல் டால்பி- குருதிப்புனல்.

முதல் டிடிஎஸ்- கருப்பு ரோஜா.


ஆரோ 11.1 ஒலியமைப்பு கருவி என்பது ஒரு கணினி போன்றது தான், இதில் ஒலியை ஒலிக்க செய்ய ஒரு கோடெக், ஒரு பிராசசர், அப்மிக்ஸ் பிராசசர் என மூன்று பகுதிகள் இருக்கிறது.

இந்த டிடிஎஸ்5.1,டால்பி 7.1,ஆரோ11.1 என்பதெல்லாம் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒலியை கம்பிரஷன் செய்யும் முறையே அதாவது எம்பி-3,வேவ்,மிடி போன்ற கம்பிரஷன் ஃபார்மெட்கள்.

இசையமைப்பாளர்கள் ஒலியமைப்பு,இசையமைப்பு செய்து பதிவு செய்யும் போது 16 டிராக், 32 டிராக் எல்லாம் பயன்ப்படுத்துவதுண்டு, எனவே ஒலிகோப்பின் அளவு பல ஜிகா பைட்டுகள் இருக்கும்,அதனை திரையரங்கில் அப்படியே ஒலிக்க செய்ய இயலாது என்பதால் ஒலிக்கோப்பின் அளவை அழுத்தி சுருக்கவே டிடிஎஸ்,டால்பி,ஆரோ என விதவிதமான கம்பிரஷன் முறைகளை பயன்ப்படுத்துகிறார்கள்.

எம்முறையில் அதிக சேதம் இன்றி துல்லியமாக செய்ய முடியுமோ அதனை தேர்வு செய்வார்கள், சேனல்களின் எண்ணிக்கை கூடும் போது இன்னும் கொஞ்சம் துல்லியமாக இருக்கும்.

டிடிஎஸ் மிக்சிங்க் என்பது 32/16 டிராக்கில் இருக்கும் ஒலிப்பதி செய்யப்பட்ட ஒலியை 6 டிராக்கில் தேவைக்கு ஏற்ப மாற்றி சுருக்குவது,அது போலவே டால்பி 7.1 மற்றும் ,ஆரோ 11.1 ஆகும்.

எந்த முறையில் ஒலிக்கலவை செய்த ஒலியையும் ஆரோ 11.1 அமைப்பில் தியேட்டரிலே11.1 ஆக ஒலிக்க செய்யும், ஆனால் 11.1 இல் ஒலிக்கலவை செய்த துல்லியம் இருக்காது.ஏற்கனவே சிங்கப்பூரில் திரையிடப்பட்ட நிலையில் டிடிஎஸ்,டால்பி என ஒலிக்கலவை செய்து இருப்பார் லோகநாயகர், இப்போது அதனை அப்படியே ஆரோ11.1 ஃபார்மெட் ஆக மாற்ற மட்டுமே செய்வார் என நினைக்கிறேன், இது செலவில்லாத எளிய வழி ,ஆனால் முழுக்க ஆரோ 11.1 இல் ஒலிக்கலவை செய்தது போன்ற தோற்றத்தினை உருவாக்கிவிடுவார், எல்லாம் ஒரு வியாபார தந்திரம் தான்.மேலும் 11.1 டிராக்கில் செய்த வித்தியாசத்தினையும் யாரும் உணர முடியாது, ஏன் எனில் அப்படியான ஒலியமைப்பு வசதிக்கொண்ட திரையரங்குகள் இந்தியாவில் , குறிப்பாக தமிழகத்தில் இல்லை.

மேலும் இந்த barco Auro11.1 3d sound ஒலியமைப்பே பழமையான ஒன்றாகிவிட்டது ,இனிமேல் உலக அளவில் , இம்முறையை பெருமளவு பயன்ப்படுத்த மாட்டார்கள் என நினைக்கிறேன் காரணம் ஒலியமைப்பு பொறியியலில் ஜாம்பவான் ஆன டால்பி நிறுவனம் ஒரே தாவலாக 128 சேனல் கொண்ட டால்பி அட்மோஸ் 3டி சர்ரவுண்ட் என்ற ஒலியமைப்பினை உருவாக்கி போட்டியாளர்கள் அனைவரையும் பின் தள்ளிவிட்டது. டால்பி அட்மோஸ் ஒலியமைப்பில் பிக்சார் தயாரிப்பில், டிஸ்னி விநியோகத்தில் பிரேவ் என்றப்படம் இம்மாதம் வெளியாகியுள்ளது.




டால்பி அட்மோஸ் ஒலியமைப்பு அமெரிக்காவில் 14 திரையரங்கிலும் , ஸ்பெயினில் பார்சிலோனவில் ஒன்றும், லண்டனில் ஒன்றும் என இது வரை மொத்தம் 16 அரங்குகளில் மட்டுமே அவ்வசதியுள்ளது.

டால்பி அட்மோஸ் ஒலியமைப்புள்ள அரங்கம்.

டால்பி நிறுவனம் உலகெங்கும் பரவலாக நிறுவ முனைப்பு காட்டிவருகிறது ஏற்கனவே பல திரையரங்குகளில் டால்பி 7.1 உள்ளதால் ,அவர்கள் அனைவரும் அதிக திறனுள்ள டால்பி அட்மோஸ் நிறுவவே முயல்வார்கள்.இவ்வமைப்பில் 128 சேனல்/டிராக்கில் ஒரு காட்சியில் உள்ள 128 வகையான ஒலிக்கூறுகளை தனித்தனி டிராக்கில் தேவைக்கு ஏற்ப ஒலிப்பெருக்கிகளுக்கு வழங்க முடியும்.இதனால் காட்சியின் வீச்சு இன்னும் அதிகம் ஆகும்.இதில் மொத்தம் 64 ஒலிப்பெருக்கிகள் கிடைமட்டத்திலும், கூறையிலும், பல உயர அளவில் அமைக்கப்பட்டு முழுமையான முப்பரிமாண ஒலியை தரும். எனவே இனி டிடிஎஸ், barco Auro11.1 3d sound போன்றவர்கள் அவர்கள் ஒலியமைப்பினை மேம்ப்படுத்தினால் மட்டுமே சந்தையில் நிற்க முடியும்.

கொசுறு:



விஷ்வரூபம் கதை சுருக்கம் என இணையத்தில் போட்டிருக்கிறார்கள், அதில் லோகநாயகர் ,அமெரிக்காவில் கதக் நடனப்பள்ளி நடத்திவருபவர்,அவரை அணு விஞ்ஞானத்தில் ஆய்வு செய்யும் "மாணவியான "ஆன்ட்ரியா காதலித்து மணமுடிக்கிறார். பின்னர் அவரது ஆய்வு படிப்பு முடிந்ததும் விவாகரத்து செய்ய விரும்பும் ஆன்ட்ரியா, ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியுடன் போலியான குற்றச்சாட்டு மற்றும் ஆதாரங்களை லோகநாயகரின் மீது சுமத்துகிறார், அதன் பின்னர் லோகநாயகர் உண்மையில் யார் என காட்ட விஷ்வரூபம் எடுக்கிறாராம்.


மேலும் பல புகைப்படங்களில் கையில் வித விதமான துப்பாக்கிகளுடன் "போஸ்" கொடுக்கிறார். எனக்கென்னமோ "mr&mrs smith"ஐ உல்டா அடிச்சிருப்பாங்களோனு தோன்றுது. படம் வந்தா "போஸ் மார்ட்டம்' செய்ய ஒரு கூட்டமே இருக்கு ,உண்மை தெரியாமலா போயிடப்போகுது :-))


இந்தப்படத்தில நடிக்கிற எந்த நடிகையரையும் பார்க்க சகிக்கலை, அடிமாட்டு சம்பளத்துக்கு புடிச்சு போட்டு இருப்பாங்க போல, தீபீகா இப்படத்தில் நடிக்க மறுத்ததாக உலாவும் செய்திக்கும் , இங்கே படம் போட்டதுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, சும்மா ஒரு அழகியல் நோக்கிலேயே தீபு படம் போட்டு இருக்கேன் :-))
---------

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி, டால்பி,டிடிஎஸ், பார்கோ,பிபிசி, விக்கி,கூகிள்,IMDB இணைய தளங்கள்,நன்றி!

*****

Saturday, June 23, 2012

குப்பைக்கு குட்பை- மாற்று எரிபொருள் பயோமாஸ் எத்தனால்( cellulose ethanol)

(ஹி..ஹி படிக்க போர் அடிச்சா படத்தைப் பாருங்க!)


புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும்னு அரசு மிரட்டுவது வழக்கம், ஒரு சுண்டு விரல் அளவு சிகரெட்டுக்கு அம்மாம் அளப்பரை செய்யும் அரசு 16 ஏக்கர் பரப்பளவில் பெரிய புகைப்பானை உருவாக்கி நகர மக்கள் அனைவரையும் புகைக்க வைத்தால் என்ன நோய் வரும்னு மாண்புமிகு நகரத்தந்தையைதான் கேட்கணும் :-))

பள்ளிக்கரணை திடக்கழிவு மேலாண்மை திறந்த வெளிக்கிடங்கின் பரப்பளவு தான் 16 ஏக்கர் அங்கு நாள் ஒன்றுக்கு 120 டன் நகர திடக்கழிவுகள் கொட்டப்படுகிறது. பேரு வச்சாப்போல மேலாண்மை செய்றாங்களா எனக்கேட்டால் வரும் பதில் தான் தீவிபத்து அல்லது திட்டமிட்டு பற்றவைத்து திடக்கழிவு என்ற குப்பையின் அளவுக்குறைக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

அப்படி சில நாட்களுக்கு முன் பள்ளிக்கரணை திடக்கழிவு கிடங்கு பற்றிக்கொண்டது (அ)பற்ற வைத்ததன் மூலம் பள்ளிக்கரணையை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் புகை மூட்டம் பரவி அனைவரையும் புகைப்பிடிக்க வைத்தது.

சாதாரண சிகரெட்டிலாவது புகையிலை புகை மட்டுமே அதுவும் சிறிய அளவில் ,பள்ளிக்கரணை புகை அரசு செலவில் உருவான சிறப்பு புகைப்பான் இல்லையா எனவே ஸ்பெஷலாக டையாக்சின், கரியமிலவாயு, மீத்தேன், கார்பன் மோனாக்ஸைட், நைட்ரஜன் மோனாக்சைடு, டையாக்சைடு, கந்தக வாயுக்கள் இன்னமும் பல, பல அறிய நச்சு வாயுக்கள் என புஃபே முறையில் கதம்பமாக அவ்வழியே பயணித்தோரின் நுரையீரலை நிறைத்தது, மேலும் அப்பகுதி மக்களுக்கும் விண்டோவ் டெலிவரியாக இலவசமாக புகை வழங்கப்பட்டது.


இனிமேல் அம்மக்களுக்கு சிகரெட் பிடித்தாலும் புற்று நோய் வராது ஏன் எனில் அதை விட நச்சுத்தன்மையுள்ள, அதிகமான புகையை அவர்கள் சுவாசித்துவிட்டார்களே அப்புறம் எப்படி புற்று நோய் வரும் அதை விட பெரிய நோய் வேண்டுமானால் வரலாம் :-))

இக்குப்பை கிடங்குகளின் வழியே சென்றால் எப்பொழுதும் காணலாம், மணிரத்தினம் படத்தில் காட்டப்படும் ஊட்டி லோகேஷன் போல புகைமண்டலமாகவே காணப்படும், பெரும்பாலும் சொல்லப்படும் காரணம் குப்பையில் இருந்து பிளாஸ்டிக்,இரும்பு என பொறுக்குபவர்கள் நெருப்பு வைத்து விடுகிறார்கள் என்று, ஆனால் மாநகராட்சி ஊழியர்களே குப்பையின் அளவை குறைக்க ஆங்காங்கே நெருப்பு வைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதை மறுத்து மாநகர தந்தை சொன்ன விளக்கம் இன்னொரு குபீர் ரக காமெடி ஆகும், குப்பையில் தானாக உருவாகும் மீத்தேன் வாயு பற்றிக்கொள்வதே தீப்பிடிக்க காரணம் என்பதே. தீப்பிடிப்பதற்கு மீத்தேன் தான் காரணம் எனில் , அது தெரிந்தும் இத்தனை நாளாக திறந்த வெளியில் குப்பைக்கொட்டி வைத்து பெருமளவில் மீத்தேன் உருவாக்கியுள்ளதை அவரே ஒப்புக்கொள்கிறார்.மாநகராட்சி சுற்று சூழலை பாதிக்க செயல்ப்படுகிறது என சொல்லும் ஒப்புதல் வாக்குமூலமாக இருக்கிறது.

மீத்தேன் என்பது மிகப்பெரிய பசுமை இல்ல வாயு , வளிமண்டல ஓசோனில் ஓட்டை போடுகிறது.அப்படி இருக்க மீத்தேனால் தீ விபத்து ஏற்படுகிறது என்பதை மிக சாதாரணமாக சொல்கிறார். எனவே தீவிபத்து ஏற்படவில்லை என்றாலும் மாநகர குப்பைக்கிடங்குகள் சுற்று சூழலுக்கு மிகப்பெரும் தீங்கு விளைவிக்கிறது, ஆனால் அது குறித்து விழிப்புணர்வே இல்லாமல் திறந்த வெளிக்குப்பைகிடங்குகளை செயல் படுத்தி வரும் அரசு நிர்வாகம் , மக்களுக்கு மட்டும் சுற்று சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது மிகப்பெரிய வேடிக்கை. முதலில் சுற்று சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது நமது அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தான் என நினைக்கிறேன்.

நமது நாட்டில் திடக்கழிவு மேலாண்மை (municipal solid waste management)என்பது பெயரளவிலே கடைப்பிடிக்கப்படுகிறது , அவர்கள் செய்வதெல்லாம் குப்பையை சேகரித்து ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டிவிட்டு மற்றதை இயற்கை பார்த்துக்கொள்ளும் என விட்டு விடுவதே. முறையான தொழில்நுட்பங்களைப் பயன்ப்படுத்துவதே இல்லை.சுமார் 6.5 மில்லியன் மக்கள் தொகைக்கொண்ட சென்னையில் இது வரையில் ஒரு "லேண்ட் ஃபில்" அல்லது மட்க வைக்க என கட்டமைப்பு வசதிகள் எதுவும் ஏற்ப்படுத்தப்படவே இல்லை.

சென்னை குப்பை உற்பத்தி மற்றும் கையாளும் வசதிகள்:

மொத்த மக்கள் தொகை:6.5 மில்லியன்.

தனிநபர் குப்பை உற்பத்தி: 500 கிராம்/நாள்.

மொத்த குப்பை அளவு: 3200 மெ.டன், மேலும் 500 டன் கட்டிட இடிப்பாடுகள்.

இவற்றை சேகரித்து வைக்க சென்னையில் கொடுங்கையூர் , பெருங்குடி ஆகிய இரண்டு இடங்களில் மாநகராட்சியின் மிகப்பெரிய குப்பை கிடங்குகள் உள்ளன.

கொடுங்கையூர்:


பரப்பளவு:350 ஏக்கர்,

செயல்பட்டு வரும் காலம்- 25 ஆண்டுகள்.

எதிர்காலம்- 2015 வரையில் செயல்படும்

தினசரி சேகரிக்கும் குப்பை அளவு:1400-1500 மெட்ரிக் டன்கள்.

பெருங்குடி:

பரப்பளவு: 200 ஏக்கர்.

செயல்பாட்டு காலம் : 20 ஆண்டுகள்.

எதிர்காலம்: 2015 வரையில் செயல்படும்.

தினசரி சேகரமாக்கும் குப்பை அளவு: 1500- 1800 மெட்ரிக் டன்கள்.

இவை இரண்டு அல்லாமல் பள்ளிக்கரணையில் 16 ஏக்கர் பரப்பளவில் தினசரி 120 டன்கள் குப்பை சேகரமாகிறது.

எனவே சென்னை மாநகர எல்லையில் மட்டும் சுமார் 4000 மெ.டன்கள் குப்பைகள் ஒரு நாளுக்கு உற்பத்தி ஆகிறது. இது அல்லாமல் அம்பத்தூர் , பூந்தமல்லி, தாம்பரம் போன்ற புறநகர் குப்பைகள் வேறு இருக்கிற்து. அவை இக்கணக்கில் இல்லை.

மாநகர குப்பைகளின் இயல்பு:

Food waste 8.00 %
Green waste 32.25 %
Timber(wood) 6.99 %
Consumable plastic 5.86 %
Industrial Plastic 1.18 %
Steel & Material 0.03 %
Rags & Textiles 3.14 %
Paper 6.45 %
Rubber & Leather 1.45 %
Inerts 34.65 %

இவ்வளவு குப்பைகளையும் சேகரித்து அறிவியல் முறைப்படி சுத்திகரிக்கவோ, மட்கவோ செய்யாமல் திறந்த வெளியில் கொட்டி சுற்று சூழலை மாசுப்படுத்துவதையே அதிகாரப்பூர்வமாக மாநகராட்சி செய்து வருகிறது.

இவ்வாறு திறந்த வெளியில் கொட்டுவதால் எரியும் போது முன் சொன்ன பல நச்சுவாயுக்களும், மேலும் காற்றில்மிதக்கும் தூசுக்கள், கார்பன் துகள்களும் காற்றில் அதிகம் உருவாகிறது.பள்ளிக்கரணையில் கார்பன் துகள் ஒரு கனமீட்டர் காற்றில் 144g /m³ ,பெருங்குடியில் 216 g /m³ ,உள்ளது.வழக்கமான பாதுகாப்பான அளவு 100கி/மீ3 ஆகும். மேலும் Carbon dioxide (CO2) அளவும் காற்றில் 515- 399 ppm (parts per million) ஆக உள்ளது.எல்லாமே பாதுகாப்பான அளவு என வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளது.

இது நேரடியாக அப்பகுதி மக்களுக்கு சுவாசக்கோளாறு நோய்களை உருவாக்கும். மேலும் மழை நீர் குப்பைகளில் இறங்கி நிலத்தில் ஊடுருவும் போது குப்பைகளின் நச்சும் கலந்து நிலத்தடி நீரை மாசுப்படுத்துகிறது.

ஆனால் மாநகராட்சியோ பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை ,குப்பை அள்ளுவதே பெரிய சேவை இதில் பாதுகாப்பாக மட்க செய்யணுமா என நினைக்கிறார்கள் போல.பெயருக்கு நாங்களும் கொஞ்சம் தொழு உரம் தயாரிக்கிறோம் என கணக்கு காட்டுகிறார்கள். உண்மையில் அப்படி செய்திருந்தால் ஒரு நாளைக்கு நான்காயிரம் டன் என ஒரு மாதத்திற்கு 12 லட்சம் டன் குப்பையினை அப்படி தொழு உரம் ஆக்கினால் தமிழ்நாடு முழுக்க இரசாயன உரம் இல்லாமல் இயற்கை விவசாயம் செய்யலாம்.

மாநகர திடக்கழிவுகளை கையாள என்ன தீர்வு உள்ளது?

இப்போது தான் மாநகராட்சி எப்படி கையாளுவது என்று அறியவும், அதற்கான அமைப்பினை உருவாக்கவும் டெண்டர் விட்டுள்ளதாம். அவர்கள் சொல்லும் தீர்வும் அதிகப்பட்சம் லேண்ட் ஃபில்கள் அமைப்பதாகவே இருக்கும். ஆனால் அதனை விட ஒரு நல்ல தீர்வு உள்ளது. அது தான் குப்பைகளில் இருந்து எத்தனால் தயாரித்து மாற்று எரிப்பொருளாக பயன்ப்படுத்துவது.

குப்பையில் இருந்து எத்தனால் தயாரிக்க முடியுமா ? முடியும் எல்லா கழிவிலும் மட்க கூடிய கரிமப்பொருள்கள் உள்ளது அவற்றின் அடிப்படை மூலகம் செல்லூலோஸ் ஆகும். இவ்வாறு செல்லுலோஸ் இல் இருந்து எத்தனால் தயாரிப்பதற்கு "செல்லுலோஸ் எத்தனால் அல்லது மர எத்தனால்" எனப்பெயர்.

வழக்கமாக எத்தனால் ஆனது கோதுமை, மக்கா சோளம், சோளம் ,சர்க்கரை கிழங்கு ஆகியவற்றில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து உருவாக்கப்படும் சர்க்கரையின் மூலமும், கரும்பின் மொலாஸஸில் உள்ள சர்க்கரை மூலமும் தயாரிக்கப்படுகிறது.

சர்க்கரை எனப்ப்டும் சுக்ரோஸ் ஒரு இரட்டை சர்க்கரை ஆகும் இதனை நீராற்பகுப்பு மூலம் குளுக்கோஸ், ஃபிரக்டோஸ் ஆகிய ஒற்றை சர்க்கரையாக மாற்றி பின்னர், சாக்ரோமைசெஸ் செர்விசே (Saccharomyces cerevisiae) எனப்படும் என்சைம் நுண்ணுயிர் மூலம் நொதிக்க செய்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது.

இப்படி தயாரிக்கப்படும் எத்தனால் மலிவானது ஒரு லிட்டர் தயாரிக்க சுமார் 25 ரூ செலவு ஆகும், ஆனால் மூலப்பொருட்களான தானியங்கள்,கரும்பு போன்றவை பயிரிட வேண்டும்,அவற்றுக்கு செலவாகும் ஆற்றல், மனித உழைப்பினையும் கணக்கில் கொள்ள வேண்டும் அப்படிப்பார்த்தால் பெட்ரோலிய தயாரிப்புக்கு பக்கத்தில் வருகிறது.

உணவுப்பொருட்களாக பயன்படும் தானியங்களும் , சர்க்கரையும் எத்தனால் தயாரிப்புக்கு அதிகம் பயன்ப்படுத்தினால் ,மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்படும் பக்க விளைவும் உண்டு.

இதற்கு மாற்று தான் மூலப்பொருள் உற்பத்தி தேவையில்லாத "தாவர,நகரக்கழிவில்" (farm waste and municipal solid waste)இருந்து தயாரிக்கப்படும் பயோ மாஸ் எத்தனால் தயாரிப்பு முறை ஆகும்.

இதில் இரண்டு வகையான பயோ மாஸ் உள்ளது.

#நகர திடக்கழிவுகளில் இருந்து பிரிக்கப்படும் பயோ மாஸ்.

# தாவர கழிவுகள் மற்றும் பயிரிடப்பட்ட தாவரங்கள் மூலம் கிடைக்கும் பயோ மாஸ்.

கிடைக்கும் வழிகள்:


# கோதுமை , நெல், சோளம், மக்கா சோள அறுவடைக்கு பின் கிடைக்கும், வைகோல், தண்டுகள், தக்கைகள்.

# கரும்பு அறுவடைக்கு பின் கிடைக்கும் தோகைகள், கரும்பு ஆலையில் மிஞ்சும் சக்கை,பகசி(bagasse) போன்றவை.

#மரம் அறுக்கும் இடங்களில் சேகரமாகும் மரத்தூள், கழிவு மரத்துண்டுகள்.

#வனங்களில் இருந்து பெறப்படும் இலை, கிளைகள்.

# கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்களில் ,சுத்திகரிக்க வளர்க்கபடும் விட்ச் கிராஸ்(witch grass)

#அரிசி ஆலை இன்ன பிற தானிய அரவை நிலையங்களில் உப பொருளாக கிடைக்கும் தவிடு, எண்ணை வித்துக்களில் உடைத்து நீக்கப்பட்ட மேல் தோல்.

#தரிசு நிலங்களில் எளிதில் வளரும் மரங்களை வளர்த்தும் அறுவடை செய்து பயன்ப்படுத்தலாம்.

எ.கா: வேலிக்காத்தான் எனப்படும் புரோசோபிஸ் ஜுலிபுளோரா(prosopis juliflora) மரம்.

#மேலும் தமிழ் நாட்டில் வாய்க்கால் போன்ற நீர் நிலைகளில் தானாக ஆக்ரமித்து வளரும் நெய்வேலி காட்டாமணி, ஆகாயத்தாமரைகளை அகற்றி பயோ மாஸ் ஆகவும் பயன்ப்படுத்திக்கொள்ளலாம். இதனால் நீர் நிலைகளும் சுத்தமாகும்.

#மேலும் அனைத்து வகையான விவசாய,தாவரக்கழிவுகளும் பயன்ப்படுத்தலாம்.

#அனைத்து வகை தொழில் துறை மூலம் கிடைக்கும் மட்கும் கரிம கழிவுகள்.

நகரக்கழிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கரிம பொருட்கள், மற்றும் விவசாய தாவரக்கழிவு என இரண்டு வகையான பயோமாசிலும் எத்தனால் தயாரிக்க பொதுவான ஒரே செல்லுலோஸ் எத்தனால் தயாரிப்பு முறையே பயன்படுகிறது.

செல்லுலோஸ் எத்தனால் தயரிப்பு முறைகள்:

# நீராற்பகுப்பு & நொதித்தல் முறை,(hydrolysis&Fermentation)

#ஆவியாக்கி திரவமாக்கல் முறை(Gasification).

# வெப்ப முறை எனப்படும் பைராலிசிஸ்.(pyrolysis. )

ஆகிய முறைகள் பெருமளவு பயன்ப்படுகிறது.இங்கு உதாரணமாக நகர திடக்கழிவில் இருந்து நொதித்தல் முறையில் செல்லுலோஸ் எத்தனால் தயாரிப்பதைக்காணலாம்.

இதே முறையில் தாவர கழிவு பயோ மாசில் இருந்தும் எத்தனால் தயாரிக்கலாம்.இந்தியா மிகப்பெரிய விவசாய நாடு என்பதால் நிறைய பண்ணை தாவர கழிவுகள் உள்ளதால் ,அதிக அளவில் எத்தனால் மூலப்பொருள் செலவின்றி உற்பத்தி செய்ய முடியும்.

திடக்கழிவு செல்லுலோஸ் எத்தனால்:

எல்லா வகையான நகர திடக்கழிவிலும் சுமார் 60 சதவீதம் மட்கும் கரிமப்பொருட்களே உள்ளன.இவற்றை பிரித்து எடுத்தாலே தொடர்ந்து மூலப்பொருள் உற்பத்தி செலவு மற்றும் தட்டுப்பாடு இல்லாமல் எத்தனால் தயாரிக்க கிடைக்கும்.

நீராற்பகுப்பு மற்றும் நொதித்தல் முறை:

தாவர மற்றும் திடக்கழிவில் உள்ள கரிம மூலங்கள் செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ்,ஸ்டார்ச், மற்றும் சர்க்கரை ஆகும். இவை எளிதில் நொதித்தல் வினைக்கு உட்படாது எனவே,

முதலில் திடக்கழிவுகளை நன்கு சிறு துண்டுகளாக பல்வரைசர் மூலம் அரைத்துக்கொள்வார்கள்.இதனுடன் நீர் சேர்த்து செல்லுலோஸ் கூழ் உருவாக்கப்படும்.

இப்படி கிடைக்கும் தாவரக்கூழினை நீராற்பகுப்பு(hydrolysis) செய்து எளிய சர்க்கரையான குளுக்கோஸ் ,பிரக்டோஸ் ஆக மாற்ற வேண்டும். நீராற்பகுப்பு செய்ய நீர்த்த கந்தக அமிலம், மற்றும் வினையூக்கிகள் பயன்ப்படுத்தப்படும்.

நீராற்பகுப்பினால் எளிய சர்க்கரைக்கலவையாக சுக்ரோஸ், ஸைலோஸ்,ஆர்பினோஸ் ஆகியவை கிடைக்கும் ,உப பொருளாக "லிக்னைன்"எனப்படும் புரதமும் கிடைக்கும். சோடியம் ஹைட்ராக்சைடு ,கால்சியம் ஹைட்ராக்ஸைடு போன்றவற்றைப்பயன்ப்படுத்தி லிக்னைன் திட நிலையில் படிய வைத்து தனியே பிரிக்கப்பட்டு விடும்.

பின்னர் சர்க்கரை கரைசலில் உள்ள கந்தக அமிலமும் பிரித்தெடுக்கப்பட்டு மறு சுழற்சிக்கு பயன்ப்படுத்தப்படும்.

இந்த நீராற்பகுப்பு முழுவதும் டைஜெஸ்டர்(digestion chamber) எனப்படும் கலத்தினுள் நிகழும்.

பின்னர் எஞ்சிய சர்க்கரை கரைசல் நொதிக்கும் தொட்டிக்கு(fermentation chamber) மாற்றப்படும், அங்கு சாக்ரோமைசஸ் செர்விசியே(Saccharomyces cerevisiae) என்சைம் கலவையுடன் சேர்க்கப்பட்டு நொதிக்கவைக்கப்படும். இதன் மூலம் எத்தனாலும், கரியமிலவாயும் கிடைக்கும்.பின்னர் எத்தனால் வாலைவடித்தல்(Distillation) மூலம் பிரிக்கப்பட்டு 100 சதவீதம் தூய எத்தனால்(unhydrous ethanol) ஆக மாற்றப்படும்.

உபபொருளாக கிடைக்கும் லிக்னைன்(lignin) ஐ மீண்டும் பைரோலிஸ் செய்து எத்தனால் ஆக்கவும் முடியும் அல்லது boiler fuel ஆகவும் பயன்ப்படுத்தலாம் or சுத்திகரித்து தொழு உரமாகவோ அல்லது கால்நடை தீவனமாகவோ பயன்ப்படுத்தலாம்.

ஒரு டன் நகர திடக்கழிவில் இருந்து சுமார் 185 லிட்டர் (50 கேலன்) நீரற்ற 100 சதவீத எத்தனால் தயாரிக்க முடியும்.அதே சமயம் தாவரக்கழிவு பயோமாஸ் முறையில் ஒரு டன்னுக்கு 250-270 லிட்டர் எத்தனால் தயாரிக்க முடியும். கரிம மூலப்பொருட்களின் அடர்த்தி விகிதத்தை பொறுத்து எத்தனால் உற்பத்தி கிடைக்கும்.

பயோ மாஸ் எத்தனால் பயன்கள்:

#மிக அதிக அளவு திடக்கழிவு உற்பத்தியாகும் இடங்களில் அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது பெரும் சவாலான பணி , இப்படி எத்தனால் ஆக மாற்றுவதன் மூலம் கழிவும் அகற்றப்படும் , மேலும் வாகன எரிபொருளாகவும் எத்தனாலைப் பயன்ப்படுத்திக்கொள்ளலாம். பெட்ரோலிய எரிபொருள் இறக்குமதிக்கு செலவிடப்படும் அன்னிய செலவாணி மிச்சமாகும்.

# எத்தனால் சுற்று சூழலை மாசுப்படுத்தாத எரிபொருள்,எத்தனாலை வாகன எரிப்பொருளாக பயன்ப்படுத்துவதால் 85% காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவு குறைகிறது. மேலும் பெட்ரோலிய எரிபொருள் வெளியிடும் கார்பனை விட எத்தனால் வெளியிடும் கார்பனே தாவரங்களால் எளிதில் கிரகிக்கப்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை இயற்கையாக கரியமில வாயு சிறைப்பிடித்தல்( Carbon sequestration ) என்கிறார்கள்.

#எத்தனாலின் ஆக்டேன் எண் பெட்ரோலை விட அதிகம் என்பதால் ,வாகன எஞ்சின் அதிக ஆற்றலுடன் இயங்கும். பந்தயக்கார்களில் 100% எத்தனால்/மெத்தனால் பயன்ப்படுத்தப்படுகிறது. பெட்ரோலுடன் கலந்து பயன்ப்படுத்தும் போது பெட்ரோலின் ஆக்டேன் மதிப்பும் உயரும்.


#லிக்னைன் என்ற இயற்கை உரமும் கிடைக்கும்.

சுருக்கமாக சொன்னால்,

நகரதிடக்கழிவு->பயோமாஸ் எத்தனால் தயாரிப்பு->எரி பொருள் எத்தனால்-> லிக்னைன்-> தொழு உரம்-->கால்நடை தீவனம்-> சுற்று சூழல் பாதுகாப்பு->உள்நாட்டு வேலைவாய்ப்பு அதிகரிப்பு->அன்னிய செல்வாணி சேமிப்பு.

என ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கலாம்.

#இப்படி நகர திடக்கழிவில் இருந்து எத்தனால் தயாரிக்கும் முறை அமெரிக்காவில் பல மாகாணங்களில் செயல்பாட்டில் உள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உலகின் மிகப்பெரிய பயோமாஸ் எத்தனால் ஆலை உள்ளது.அமெரிக்கா முழுவதும் மொத்தமாக 12 மில்லியன் லிட்டர் செல்லுலோஸ் எத்தனால் தயாரிக்கப்படுகிறது.மேலும் 8 மில்லியன் லிட்டர் தயாரிக்க முயற்சிகள் நடைப்பெறுகிறது.

#எகிப்தின் கெய்ரோ நகர் கழிவுகளை எத்தனால் ஆக்க திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 60 மில்லியன் டாலர் முதலீட்டில் நாளொன்றுக்கு சுமார் 500 டன் திடக்கழிவினை எத்தனால் ஆக மாற்றும் ஆலை அமைக்க உள்ளார்கள்.

இந்தியாவிலும் சென்னை ,மும்பை, தில்லி, கொல்கட்டா, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் நாள் தோறும் பல ஆயிரம் டன்கள் திடக்கழிவு உற்பத்தியாகிறது, அவற்றை எல்லாம் எத்தனால் ஆக மாற்ற சிறிது முதலீடு செய்தாலே போதும், நம் நாட்டின் எரிபொருள் தேவையின் இறக்குமதி பெருமளவு குறையும், சுற்று சூழலும் பாதுகாக்கப்படும். அரசு எந்திரம் விழித்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.விழிக்கும் என நம்புவோம்!

------------------------------------------
பின் குறிப்பு:

மேற்கோள் தளங்கள்:

1)http://weekly.ahram.org.eg/2009/969/sc71.htm

2)http://www.jgc.co.jp/en/04tech/07bio/bme.html

3) http://www.chennaicorporation.gov.in/departments/solid-waste-management/index.htm

தகவல் மற்றும் படங்கள் உதவி ,விக்கி, கூகிள், தி இந்து இணைய தளங்கள் நன்றி!

*****

Monday, June 18, 2012

பயோடீசல்-2: புங்க எண்ணை(Pongamia pinnatta oil)


பயோ டீசல் என்ற தலைப்பில் முன்னர் தாவர எண்ணையை எப்படி பயோடீசலாக மாற்றுவது உள்ளிட்டவற்றை பார்த்தோம் ,இனி அடுத்து வரும் பதிவுகளில் மேலும் சிலமாற்று எரிப்பொருட்களின் மூலப்பொருட்களையும் அதன் பயன்களையும் பார்க்கலாம்.

இப்பதிவோடு தொடர்புடைய மாற்று எரிப்பொருள் முந்தைய பதிவைக்காண அழுத்தவும்



அந்த வரிசையில் இப்பதிவில் புங்கை மரத்தின் "எரிப்பொருள்" திறனையும், அதற்கு பிரகாசமான ஆற்றல் மரம்(energy tree or oil tree) ஆகும் தகுதி இருப்பதையும் காணலாம்.

வழக்கமாக பயோ டீசல் என்றால் அதற்கான மூலமாக ஜெட்ரோபாவையே நம் நாட்டில் பரிந்துரைப்பார்கள். சில இடங்களில் பயிரிடப்பட்டும் பரிசோதிக்கப்பட்டது. ஜெட்ரோபா எண்ணைக்கு பயோடீசல் ஆக மாற்றும் தகுதி இருந்தும் ,இந்தியாவில் பெரிய அளவில் வெற்றிப்பெறவில்லை எனலாம். காரணம் அதனை பயிரிடவும் அதிக முயற்சியும், ஆற்றலும்,நீரும் தேவைப்படுவதே.

உற்பத்தி இலக்கில்லாமல் மானாவாரி சாகுபடி செய்யும் போது பரவாயில்லை ,ஆனால் ஆண்டுக்கு இத்தனை டன் என உற்பத்தி இலக்குடன் பயிரிட்டால் மற்ற வணிக பயிர் அளவுக்கு உழைப்பை கொடுக்க வேண்டும், மேலும் நீர்ப்பாசனம் ,உரம் என செலவும் செய்ய வேண்டும்.

அதிக உழைப்பு, நீர் தேவை,உரம் , இல்லாமல் வறட்சியிலும் வளரக்கூடிய தாவர எண்ணை தரக்கூடிய ஒரு தாவரம் தான் புங்கை மரம் எனப்படும் புங்கேமியா பின்னேட்டா மரம் ஆகும்.

புங்கை மரம்:

பொது பெயர்: புங்க மரம், கரஞ்சி மரம்,derris indica

அறிவியல் பெயர்; Milletia pinnata, Pongamia pinnata

பட்டாணி ,உளுந்து, நிலக்கடலை வகையை சேர்ந்த லெகூம் (legume)குடும்பத்தினை சேர்ந்தது, எனவே காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலை செய்யும் வேர் முடிச்சுகளை (root nodules)கொண்ட வெகு சில மரங்களில் புங்கை மரமும் ஒன்று.

பரவலாக ஆசியா,ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள் பிரதேசங்களில் காணப்படும் மித மற்றும் வறண்ட(arid and semi arid) நில தாவரம் ஆகும்.

கோடையில் மிக சிறிதளவே இலையுதிரும் ,பசுமை மாறா மரம், 3-4 நான்கு ஆண்டுகளில் முதிர்ச்சி அடையக்கூடிய மிதமான கடின மரம்(semi hard wood) ஆகும்.


இதன் விதைகளில் 25-40% எண்ணை இருப்பதே இதனை முக்கியமான மாற்று எரிபொருள் மரமாக கருதக்காரணம். ஏற்கனவே இதன் எண்ணை சோப்பு, விளக்கெரிக்க, பெயிண்ட்கள், ஆயுர்வேத மருந்து,இயற்கை பூச்சிக்கொல்லி ஆகியனத் தயாரிக்க பயன்ப்படுத்தப்பட்டு வருகிறது. கசப்பு தன்மை கொண்ட எண்ணை என்பதால் சமையலுக்கு பயன்ப்படுத்துவதில்லை.

இம்மரம் இந்தியா முழுவதும் சாலையோரங்களிலும், பொது நிலங்களிலும்,வாய்க்கால்,வரப்பு என தானாகவே வளர்ந்து இருப்பதைக்காணலாம்.

நிழல் தரக்கூடிய, எளிதில் அதிக பராமரிப்பு இன்றி வளரக்கூடிய மரம் என்பதால் நெடுஞ்சாலைத்துறையினராலும் சாலை ஓரங்களில் நடப்பட்டுள்ளது.


மரம் வளர்க்க பெரிய அளவில் பராமரிப்பு தேவை இல்லை, இலைகள் கசப்பு தன்மை கொண்டவை என்பதால் கால்நடைகளும் அதிகம் மேயாது.

வறட்சி தாங்கவல்லவை எனவே குறைவான நீரை மரக்கன்று நடும் காலத்தில் வாரம் ஒரு முறை என சுமார் ஆறு மாதங்கள் பாய்ச்சினால் போதும் , வேர் நன்கு ஊன்றியதும் ,மரமே தனக்கான தண்ணீர் தேவையை பார்த்துக்கொள்ளும்.

வேர்கள் ஆழத்தில் மட்டும் அல்லாமல் பக்க வாட்டிலும் வலைப்போல பரவும் தன்மை கொண்டவை என்பதால் மண் அரிப்பு உள்ள இடங்களில் ,மண் பாதுகாப்பிற்காகவும் நடப்படும் ஒரு மரம்.

மேலும் வேர் முடிச்சுகள் வளி மண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைப்படுத்துவதால் ஊட்ட சத்து இல்லாத நிலமும் வளமடையும், எனவே மரங்களுக்கு இடையே ஊடு பயிர் செய்தால் நல்ல விளைச்சலும் லாபமும் கிடைக்கும்.

இதனால் இந்திய வேளாண் துறை மற்றும் பயனற்ற நில அபிவிருத்தி கழகம்(National Wasteland Development Board) ஆகியவை நில வளப்படுத்துதல் திட்டத்தின் கீழ் பல இடங்களில் புங்கை மரத்தினை நட்டும் வருகிறார்கள்.

நிலப்பரப்பு கையிருப்பு:

அரசின் புள்ளிவிவரப்படி இந்தியாவில் பயிரிட தகுதியற்ற ஊட்டச்சத்தில்லாத,வறண்ட ,தரிசு நிலத்தின் அளவு சுமார் 38.4 மில்லியன் ஹெக்டேர் முதல் 187 மில்லியன் ஹெக்டேர் வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு கணக்கு கூட துல்லியமாக எடுக்கமாட்டாங்க போல. வறுமைக்கோட்டுக்கு கீழ் எத்தனைப்பேர் இருக்காங்க கேட்டாலும் சரியான கணக்கு இல்லைனு சொல்லுறவங்க தானே :-))

National Wasteland Development Board இன் கணக்குப்படி 123 மில்லியன் ஹெக்டேர் நிலம் பயனற்றது. எனவே நம் நாட்டில் நிறைய இடம் காலியாக சும்மா கிடக்கிறது என்பது புலனாகிறது.

எனவே பயோ டீசலுக்கு மரம் வளர்க்க இடம் இல்லைனு சொல்ல முடியாது முயற்சி எடுத்து வளர்த்தால் ஏகப்பட்ட அன்னிய செலவாணி மிச்சம் செய்யலாம், மேலும் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

இவ்வளவு பயனற்ற/தரிசு நிலங்களும் இந்தியாவில் 19 மாநிலங்களில் 146 மாவட்டங்களில் பரவி கிடக்கிறது. அதிக பயனற்ற நிலப்பரப்பில் ஆந்திரா முதலிடத்திலும் பின்னர் வரிசையாக குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா,மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான் ,மற்றும் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் மொத்த தேசிய பயனற்ற நிலப்பரப்பில் 83% நிலம் இருக்கிறது.

தற்போதைய புங்க மர சாகுபடி நிலை:

மத்திய ,மாநில அரசுகள் ஒருங்கிணைந்த்து பயோ டீசலுக்காக புங்கை மரம் வளர்க்க திட்டமிடலாம், இது வரை சிறிய அளவிலே அரசு புங்க மரம் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறது,அதுவும் மண் அரிப்பை தடுக்கவும்,சாலையோர நிழல் மரம் அமைக்கவும் மட்டுமே.

பெருமளவில் முறையாக யாரும் புங்க விதைகளை சேகரித்து பயோ டீசல் தயாரிக்க முயலவில்லை. சில தன்னார்வ மற்றும் சுற்று சூழல் அமைப்புகள் மட்டும் சிறிய அளவில் விதைகளை சேகரித்து பயோ டீசல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்தியாவில் பயனற்ற இடங்கள் எல்லாம் அரசின் பொறுப்பில் உள்ளதால் அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளில் கூட நில குத்தகைக்கு எடுத்து புங்க மரம் பயிரிட முயற்சித்து வருகிறார்கள்.

Himalayan Institute of Yoga Science and Philosophy என்ற தன்னார்வ அமைப்பு இந்தியாவில் 20 மில்லியன் புங்க மரத்தினை 45,000 விவசாயிகள் மூலம் நட்டுள்ளது. மத்திய அரசின் உதவியாக வேலைக்கு உணவு என விவசாயிகளுக்கு 5,000 டன் அரிசி வழங்கியுள்ளது. ஆப்பிரிக்க நாடான உகாண்டா, கேமரூனிலும் குத்தகை அடிப்படையில் புங்க மரம் பயிரிட்டுள்ளார்கள்.

பயிரிடும் முறை:

வழக்கம் போல விதைகளினை நாற்றாங்காலில் நட்டு வரும் மரக்கன்றையும் பயன்ப்படுத்தலாம் அல்லது ஒட்டுக்கன்றையும் பயன் படுத்தலாம்.

ஒட்டுக்கன்று:(grafting)

இளம் மரக்கன்றினை எடுத்துக்கொண்டு அதன் மேல் புற தண்டில் பாதியை வெட்டி எடுத்துவிட்டு அதில் செங்குத்தாக பிளவினை ஆங்கில V வடிவில் உருவாக்கவும். இப்படி செய்யப்படும் அடிப்பாகத்திற்கு ரூட் ஸ்டாக் (root stock)என்று பெயர்.

பின்னர் ஏற்கனவே நன்கு முற்றிய ,விளைச்சல் தரும் புங்க மரத்தின் சிறு கிளையை எடுத்துக்கொண்டு அதன் அடிப்பாகத்தினை உளி/ஆப்பு போல சீவி விடவும்,இந்த மேல் பாகத்திற்கு சியான் (scion)என்று பெயர்.


பின்னர் மேல் பாகத்தினை V வடிவ பிளவில் செறுகி ,இதற்கென விற்கப்ப்படும் துணிப்பட்டை / பாலித்தீன் டேப் கொண்டு சுற்றிக்கட்டி விட வேண்டும்.(பழைய துணிகளையும் கிழித்துப்பயன்ப்படுத்தலாம்)

இப்படி செய்வதன் மூலம் இளமரக்கன்றுக்கு முதிர்ந்த மரக்கன்றின் முதிர்ச்சியும், காய்ப்பு திறனும் கிடைக்கும். எனவே விரைவில் காய்க்க துவங்கும்.

இப்படியான ஒட்டு முறைக்கு "grafting"என்று பெயர், இம்முறையில் தான் ஒட்டு மாங்காய், பலா மரக்கன்று என பல மரக்கன்றுகள் ,பூச்செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நடவு:(planting)

தொழு உரம் இட்டு உழுத நிலத்தினை 4 மீட்டர் இடைவெளியில் பாத்திகளாக பிரித்துக்கொள்ளவும் அல்லது சம தரையிலும் அமைக்கலாம்.

எப்படி இருப்பினும், நான்குக்கு நான்கு மீட்டர் என்ற இடைவெளியில் சுமார் இரண்டு அடி ஆழம்,அகலம்,நீளம் என்ற அளவில் பள்ளம் வெட்டிக்கொண்டு வழக்கமான முறையில் 1:3 என தொழு உரம் ,மண்,மணல் கலந்த கலவையினை நிரப்பி மரக்கன்றினை நட வேண்டும்.


spacing:

இடைவெளி: 4 மீ X4 மீ

குழி ஆழம்: 2 X2X2 அடி.

இப்படி அமைத்தால் ஒரு ஏக்கர் பரப்பில் சுமார் 250 மரக்கன்றுகள் நடலாம்.

இடைப்பட்ட பகுதிகளில் ஊடு பயிராக மண்ணின் வளத்திற்கும், நீரின் அளவுக்கும் ஏற்ப எந்த பயிரினையும் சாகுபடி செய்யலாம்.ஊடு பயிராக சீதா,நெல்லி,சப்போட்டா போன்ற பழ மரங்களும் நடலாம்.கிடைக்கும் நீராதாரம் பொறுத்தே.

மரக்கன்று நடும் போது தான் செலவு கொஞ்சம் ஆகும் பின்னர் அதிகம் பராமரிப்பு தேவை இல்லை.

செலவு:(cost of cultivation)

முதல் ஆண்டு:

நிலத்தயாரிப்பு மற்றும் மரக்கன்று நட=7246 ரூ

பராமரிப்பு, பாசனம்=2,400 ரூ

இரண்டாம் ஆண்டு= 1410 ரூ

மூன்றாம் ஆண்டு=1,383 ரூ

மொத்தம்= 12,439 ரூ

முதல் ஆண்டு மட்டுமே பராமரிப்பு ,நீர்ப்பாசனம் என கொஞ்சம் செலவு வைக்கும் பின்னர் வெகு சொற்பமே.

மூன்றாம் ஆண்டு முதல் காய்ப்பு துவங்கிவிடும்,5-6 ஆண்டுகளில் முழு திறனில் காய்க்க துவங்கிடும்.

உற்பத்தி மற்றும் வருமானம்:(economics of cultivation ,yield &income)

ஒரு மரம் ஆரம்பத்தில் குறைவாக காய்க்க துவங்கினாலும் முதிர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ப சராசரியாக 90 கி.கி அளவுக்கு விதைகள் கொடுக்கும்.

ஒரு ஏக்கருக்கு 250 மரம் எனில்

250X90=22,500 கிலோ விதைகள் கிடைக்கும்.

இது ஒரு சராசரி அளவு , நிலத்தின் தன்மை, பாசனம் பொறுத்து உற்பத்தி கூடவோ ,குறையவோ செய்யலாம்.எப்படிப்பார்த்தாலும் அதிக செலவில்லாமல் 10,000 கிலோவுக்கு குறையாமல் விதைகள் கிடைக்க வாய்ப்புண்டு.

25-40 % எண்ணை பிழி திறன் உள்ளது ,குறைந்த பட்சம் 25% என வைத்துக்கொண்டாலும் ஒரு கிலோ விதைக்கு கால் லிட்டர் எண்ணை கிடைக்கும்.

எனவே குறைந்த பட்சம் 10,000 கிலோ விதை எனக்கொண்டாலும் 2,500 லிட்டர் எண்ணை ஒரு ஏக்கரில் கிடைக்கும்.

ஒரு லிட்டர் எண்ணை 30 ரூ என வைத்தாலும்
2,500X30=75,000 ரூ

வறண்ட, வளம் இல்லாத நிலத்தில் 75,000 ரூ ஒரு ஏக்கருக்கு வருமானம் கிடைப்பது பெரிய காரியம் அல்லவா.மேலும் ஊடு பயிர் வருமானமும் உள்ளது.மேலும் எண்ணை பிரித்த பின் கிடைக்கும் பிண்ணாக்கு சிறந்த இயற்கை உரம் ஆகும்.

இதில் விதை சேகரிப்பு ஆட்கூலி, எண்ணை ஆட்டும் செலவு சேர்க்கப்படவில்லை. ஆனாலும் வேலை வாய்ப்பு அற்ற சூழலில் குறைவான முதலீட்டில் வருமானம் ஈட்ட நல்ல வழி புங்க மரம் வளர்ப்பு. இந்த விதைகளில் இருந்து எண்ணை எடுத்து பயன்ப்படுத்த அரசு முன்வந்தால் மட்டுமே இத்திட்டம் சாத்தியமடையும்.

வீடியோ:


ஆஸ்திரேலியாவில் நடைபெறும் புங்கமர வளர்ப்பு திட்டம்.


புங்க எண்ணை இயல்பு:(pongamia oil nature)

ஜெட்ரோபா எண்ணைப்போல டிஸ்டில்லேஷன் அல்லது டிரான்ஸ் எஸ்ட்ரிபிகேஷன் செய்யாமல் அப்படியே புங்க எண்ணையை டீசல் எந்திரங்களில் பயன்ப்படுத்த முடியும் ,சிறிது கரி படியும் என்பதால் 20% வரைக்கும் பெட்ரோலிய டீசலில் கலந்து பயன்ப்படுத்துகிறார்கள்

ஏன் எனில் இதன் இயல்பிற்கும் ,பெட்ரோலிய டீசல் இயல்பிற்கும் மிகச்சிறிய அளவிலே வித்தியாசம் உள்ளது.

புங்க எண்ணை இயல்பு:(அடைப்புக்குள் டீசலின் இயல்பு)

விஸ்காசிட்டி= 5.51(3.60)

அடர்த்தி =0.917(0.841)

பிளாஷ் பாயிண்ட் வெப்பம்= 110(80)

டிஸ்டில்லேஷன் வெப்பம்= 285-295(350)

கந்தக உமிழ்வு= 0.13-0.16(1.0)

சீட்டேன் மதிப்பு=51(47.8)

மேற்கண்ட ஒப்பீடுகளில் இருந்து அறிய பெறுவது என்னவெனில்

டீசலை விட விஸ்கோசிட்டி, அடர்த்தி, ஃப்ளாஷ் பாயிண்ட் சற்றே கூடுதலாக இருப்பது ஒரு பின்னடைவு எனவே தனியாக பயன்ப்படுத்துவதை விட டீசலுடன் கலந்து பயன்ப்படுத்துவது சிறப்பான பலனை தரும்.

எப்படி எனில் இதன் சீட்டேன் மதிப்பு(ஆக்டேன் மதிப்பு போன்றது)அதிகமாகவும், கந்த உமிழ்வு குறைவாகவும் உள்ளது .

கந்தகம் சூழலை மாசுப்படுத்தும் என்பதாலேயே தற்போது பிரிமியம் டீசலில் கந்தமில்லாத வகை விற்கிறார்கள்.

மேலும் சீட்டேன் (cetene)மதிப்பு என்பது எஞ்சின் சிலிண்டரில் கம்ப்ரெஷன் ரேஷியோ கணக்கின் படி எஞ்சினை வடிவமைக்க உதவுவது. கம்ப்ரஷன் ரேஷியோ அதிகம் இருந்தால் அதிக திறனுள்ள எஞ்சினை வடிவமைக்கலாம். அதிக கம்ப்ரஷன் ரேஷியோ உள்ள எஞ்சினில் அதிக ஆக்டேன் மதிப்புள்ள எரிப்பொருளை பயன்ப்படுத்த வேண்டும்.

டீசலை விட ,புங்க எண்ணையின் சீட்டேன் மதிப்பு கூடுதலாக இருப்பதால் கலந்து பயன்ப்படுத்தும் போது அதிக ஆற்றல் கிடைக்கும்.

சீட்டேன் மதிப்பு என்பதும் ஆக்டேன்(octane) மதிப்பு என்பதும் ஒன்று தான்.இந்தியாவில் தான் ஆக்டேன் மதிப்பை எல்லாம் எண்ணை நிறுவனங்கள் வெளியில் சொல்வதில்லை. வெளிநாட்டில் ஆக்டேன் மதிப்புக்கு ஏற்ப பெட்ரோல் பங்கில் கலர் கோட் வைத்திருப்பர்கள்,அதிக ஆக்டேன் மதிப்புள்ள எரிபொருள் அதிக விலை. அதிக வேகமும் ,திறனும் உள்ள வாகனத்திற்கு அதிக ஆக்டேன் எரிப்பொருளை தான் நிரப்ப வேண்டும், குறைவான ஆக்டேன் எரிபொருளை நிரப்பினால் எஞ்சின் சேதமடையும்.

இந்தியாவில் ஆக்டேன் எண்ணை வெளியில் சொல்லாமல் பிரிமியம், ஸ்பீட் என்ற பெயரில் கூடுதல் விலையில் விற்கிறார்கள் ஆனால் அவற்றின் ஆக்டேன் எண்ணும் மிக குறைவே.

புங்கை மரம் சாகுபடி பலன்கள்:

#தரிசு நிலப்பயன்ப்படு உயரும், நிலம் வளமடையும்.

#மண் அரிப்பு தடுக்கப்படும்.

#ஊரக வேலை வாய்ப்பு & பொருளாதாரம் பெருகும்.

#விதைகள் மட்டுமே சேகரித்துப் பயன்ப்படுத்தப்படுவதால் மரங்களின் அடர்த்தி அதிகமாகும் ,அதிக கரியமில வாயு(co2) கிரகிக்கப்பட்டு ,புவி வெப்பமாதல் குறையும்.

#பெரிய அளவில் புங்க மரம் பயிரிடும் போது அதனை வைத்து கார்பன் கிரெடிட் டிரேடிங்க் மூலமும் வருமானம் ஈட்டலாம்.

# சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத பசுமை எரிப்பொருள் கிடைக்கும்.

#அன்னிய செலவாணி சேமிப்பாகும்.


புங்க எண்ணையின் மகத்துவம் அறிந்து அமெரிக்க எரிசக்தி துறை புங்க விதைகளை இறக்குமதி செய்து ஆய்வு செய்துள்ளது, இப்போது அமெரிக்காவிலும் பயிரிட ஆலோசனைகள், முன்னோடி(pilot project) திட்டங்கள் போட்டுள்ளதாக செய்தி.

எனவே மெத்தனமாக செயல்படும் நமது அரசு எந்திரம் சோம்பல் களைந்து புங்க மரம் வளர்ப்பினை ஊக்குவித்தாலே பல தன்னார்வ அமைப்புகள், மகளீர் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் புங்க மர வளர்ப்பில் ஈடுபடுவார்கள். இதனால் கிராமப்புற வேலைவாய்ப்பு பெருகும், பொருளாதாரம் பெருகும். இப்பொழுதும் புங்க மரம் நடும் திட்டம் இருக்கு அது பெயரளவிலே எனவே இதற்கான முயற்சியை முழு வீச்சில் மத்திய ,மாநில அரசுகள் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம், செய்வார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி?

-----------------------------------------

பின் குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி:

விக்கி ,கூகிள், agbiotek., icrisat(hydrabad),யூடுயூப், இணைய தளங்கள்,நன்றி!

*****