Friday, February 17, 2012

என்ன கொடுமை சார் இது!-2




என்ன கொடுமை சார் இது!-2

ஆரம்பக்காலத்தில் நான் பிளிறிய  சிலக்கொடுமைகளை இங்கே அழுத்திக்காணுங்கள்என்ன கொடுமை சார் இது!

மீண்டும் பிளிறல்  தொடர்கிறது....

ஒத்த சிந்தனை!

நம்ம தமிழ் சினிமா ஆளுங்க செம கில்லாடிங்க , உலக மகா சிந்தனையாளர்கள் ,புதுசு ..புதுசா  கற்பனை ஊற்றெடுக்கும் ஆனால் என்ன கொடுமைனா  இவங்க கஷ்டப்பட்டு கற்பனை செய்து உருவாக்கியதை உலகத்துல மத்தவங்க முன்னாடியே செய்து விடுகிறார்கள்!  தாமதமாக கற்பனை செய்தால் அதை எப்படி காப்பி அடிச்சாங்க என்று சொல்ல முடியும்... சொல்லக்கூடாது!ஒத்தசிந்தனை கொஞ்சம் லேட்டா  வந்திருக்குனு சொல்லுங்க! :-))





-----------------

பைசா செலவில்லாமல் விளம்பரம் செய்தல்:


ஒரு அஞ்சுப்பேருக்கு விருது கொடுத்தா அதுக்கு பேரு விருதா?
ஆமாம் விருது தான்!

அந்த அஞ்சுப்பேரு அஞ்சஞ்சு  பேருக்கு விருத கொடுத்தா அது?

அதுக்கூட விருதுனு சொல்லலாம்...

அந்த அஞ்சஞ்சு பேரு ஆளுக்கு அஞ்சு விருதுனு கொடுத்தா?

ம்ம்...ம்ம் விருது மாதிரி தெரியுது....

அஞ்சஞ்சு பேரா அஞ்சஞ்சு பேருக்கு என்று 5 லட்சத்து 55 ஆயிரத்து 5  நூற்று 55 பேருக்கு விருது கொடுத்தா?

ஹி..ஹி நான் இல்லை ரொம்ப பாவம் காலைல டிபன் கூட சாப்பிடல்லை ...எருமைக்கூட்டம் எங்கே இருக்கு சார்?  நானே போய் விழுந்துடுறேன்:-))

உங்கள் தளத்தை பைசா செலவில்லாமல் பிரபலம் ஆக்கணுமா , உடனே ஒரு விருது அறிவிச்சு பதிவர்களுக்கு பந்திப்போடுங்கள் போதும் :-))

விருதுக்கொடுத்தற்கு நன்றி என்று பதிவுப்போட்டே பிரபலம் ஆக்கிடுவாங்க உங்க தளத்தை!

-----------

மின்வெட்டைக்கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்!

திமுக முன்னால் அமைச்சர்.வீராபாண்டி ஆறுமுகம் தலைமையில் , மொபைல் போன் விற்பனையாளர்கள்??!! ஒன்றுக்கூடி சேலத்தில் மின்வெட்டைக்கண்டித்து போராட்டம் நடத்தி இருக்காங்க. என்னா கோராமையிது, கடந்த ஐந்து ஆண்டுகளாக வாமணன் போல அளக்காமலே நிலம் அபகரிப்பில் பிசியாக இருந்தவர்கள், ஒரே ஒரு மின் திட்டத்தை கூட செயல்ப்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.

இதற்கே தி.மு.க தேர்தலில் தோற்றால் அதற்கு மின்வெட்டுக்காரணமாக இருக்கும்னு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தது சாட்சாத் மின்வெட்டு துறை அமைச்சராக இருந்த ஆற்காட்டாரே. 

கதை அப்படி இருக்க ,இவங்க இப்படி போராட்டம் நடத்துவாங்களாம் :-))

அதுவும் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கம், தொழிலார்கள், விசைத்தறியாளர்கள் என்று கூப்பிடாமல்(கூப்பிட்டாலும் வர மாட்டாங்க) மொபைல் போன் விற்பனையாளர்களை வைத்து நடத்துறாங்க, ஏன் மின்சாரம் இல்லாம மொபைல் போன் சார்ஜ் செய்து பேச முடியலையாமா? நாட்டுக்கு ரொம்ப முக்கியம் பாருங்க :-))

அனேகமாக அடுத்த சட்ட சபைத்தேர்தலிலும் தற்போதைய மின்வெட்டே வெற்றியாளரை தீர்மானிக்கும் என நம்பலாம்.அட...டா திராவிட கட்சிகளுக்கு ஒத்த கொள்கை இருக்குனு சொல்றது இந்த மின்வெட்டுக்கொள்கைய தானா? :-))

என்ன கொடுமை ...சார் இது!
--------------

நேற்று உடுமலைப்பேட்டையில் ஒரு தனியார்ப்பள்ளியின் மாணவர் விடுதியில் +1 படிக்கும் /படித்த மாணவர் ஒருவர் ஆசிரியரின் அடக்கு முறை,தண்டனையால் மனம் உடைந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.வருத்தத்திற்கும் ,கண்டனத்திற்கும் உரிய சம்பவம்.

கடந்த வாரம் கண்டித்த ஆசிரியையை மாணவர் ஒருவர் குத்திக்கொன்றார். இப்போது மாணவர் ஒருவர் தற்கொலை. இரண்டுமே இந்தியக்கல்விக்கொள்கை, மற்றும் சூழலின் சீரழிவையேக்காட்டுகிறது.

கல்வி என்பது அறிவுக்கு என்பதை தாண்டி பிழைப்புக்கு என்று மாறி மதிப்பென் வேட்டையில் மாணவர்கள் இறங்க வேண்டியதாகிவிட்டது. சிலர் வேட்டையில் வெற்றியும் பலர் வேட்டையின் தீவிரத்துக்கும் பலியாகிறார்களோ என தோன்றுகிறது.

கல்வி வியாபாரமாக ஆனதோடு மாணவர்களை கிளாடியேட்டர்களாக  மாற்றி போராட வைக்கிறது. எனவே மாணவர்களும் மூர்க்கத்தனமாக கல்வியுடன் போரிடுகிறார்கள். அப்படியே வென்றாலும் வெற்றியின் இனிமையை சுவைக்கும் மனநிலை போய்விடுகிறது. தோல்வியை விட தோற்றுவிடுவோமோ என்ற பயம் உயிரெடுக்கிறது.


கல்வியாளர்களோ, அரசோ விழித்துக்கொள்கிறதோ இல்லையோ பெற்றோர்கள் விழிப்படைந்து இது போன்ற அழுத்தங்களை பிள்ளைகளுக்கு தராமல் இருக்கலாம். ஆனால் அவர்களோ வாழ்வில் உயர வசதியாக வாழ கல்வி ,வேலை என்ற இரண்டே அக்‌ஷய பாத்திரம் என்ற முடிவில்  தனக்கு கிடைக்காத ஒன்று பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று அவர்களையும் வருத்திக்கொண்டு பிள்ளைகளையும் வருத்திக்கொண்டு ,அவ்வப்போது இது போன்ற துர்பாக்கியமான செய்தியாகிவிடுகிறார்கள்.

----------------