Thursday, June 14, 2012

பசுமை மாடி- வீட்டுத்தோட்டம்!


பதிவர் கவுசல்யா "மொட்டை மாடியில் வீட்டு தோட்டம் அமைப்பது எப்படி" என அவசியமான ஒரு பதிவிட்டிருக்கிறார், அதில் மாடியில் தோட்டம் அமைக்க பல பிளாஸ்டிக்/நைலான் வகை சாக்குகளை பரப்பி மண் இட்டு வளர்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.

இது எளிமையான ஒரு வழிமுறை என்றாலும் நீண்டகால அடிப்படையில் மேல் தளத்தினை பாதிக்கும் ,எனவே பாதுகாப்பான முறையினையும் இன்னும் கொஞ்சம் செயல்முறைகளையும் சொல்லலாம் என இப்பதிவு .

இந்த வாரம் பதிவர்களின் பதிவுக்கு துணைப்பதிவு போடும் வா...ரம் போல :-))

ஆமாம் இவரு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் எல்லாத்துக்கும் கரெக்‌ஷன் சொல்லுறார்னு சில பாசமுள்ள பங்காளிகள் நினைக்கலாம், அப்படியல்ல ஒரு நல்ல கருத்தாக்கம் கொண்ட பதிவில் சில தேவையான கருத்துகள் விடுபடும் போது , எனக்கென்ன என கடந்து போக முடிவதில்லை, பெரும்பாலும் பின்னூட்டத்தில் சொல்லிவிடுவேன், பெரிதாக போகும் என நினைக்கையிலே தனிப்பதிவு. விடுபட்ட தகவல்களையும் அளித்து முழுமையாக்குவதால், அவ்வழிமுறைகளை பின்ப்பற்றுவோருக்கு கூடுதல் பலன் தானே கிடைக்கப்போகிறது.

சரி சொல்ல வந்த கதைக்கு போவோம் இல்லை எனில் சொல்ல மறந்த கதையாகிவிடும் :-))

நீர்க்கசிவினால் மேல் தளம் பாதித்தல்:

துண்டு துண்டாக சாக்குகளை பரப்பி மண் இடும் போது என்ன நிகழும் எனில் செடிகளுக்கு தெளிக்கும் நீர் மண்ணில் இறங்கி பின் சாக்குகளின் இடை வெளி வழியே தளத்தினை அடையும் , பின்னர் கொஞ்சம் ,கொஞ்சமாக கசிந்து தளத்தில் இறங்கும், குறைவான நீர் தானே தெளிக்கிறோம் என்றாலும் நாளடைவில் தளத்தில் இறங்கும், மேலும் மழைக்காலங்களில் அதிக நீர் மண்ணில் தேங்கி மேல் தளத்தில் இறங்க வழி வகுக்கும்.

நீர்க்கசிவினால் இரும்பு கம்பி துருப்பிடித்தல்.


இதனால் என்ன ஆகும் எனில் கான்கிரிட்டில் உள்ளே உள்ள இரும்புகம்பிகள் துருப்பிடிக்க துவங்கும், அப்படி துருப்பிடிப்பிடிக்கும் போது கம்பிகளின் தடிமன் அதிகரிக்கும் இது கன்கிரிட்டில் விரிசலை உருவாக்கும் , வீட்டின் உள்புறம் கூறையில் இருக்கும் சிமெண்ட் பூச்சுகள் படலமாக பெயர்ந்து விழவும் வழி செய்யும். இதற்கு spalling என்று பெயர். இவ்வாறு தளம் பெயர்வது உடனே நிகழாது ,சிலகாலம் ஆகும் என்பதால் நாம் உடனே உணர்வதில்லை.இது போன்று கூறையின் பூச்சுகள் பெயர்ந்து விழுவதை பழைய கட்டிடங்களில் நிறைய பார்க்கலாம்.

(படம் வடுவூர் குமார் வலைப்பதிவு,நன்றி!)


தளம் பெயர்ந்து விழுந்த வீட்டினை சரி செய்தவரின் அனுபவத்தினை இங்கு காணலாம்.


இவ்வாறு தளத்தின் வழி நீர் இறங்காமல் இருக்கவே மேல் தளத்தில் தட்டு ஓடு, வாட்டர் புரூஃப் பூச்சு எல்லாம் செய்கிறார்கள். இம்முறையெல்லாம் தண்ணீர் மேலே நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் போது கைக்கொடுக்கும், மண்ணை பரப்பி நீர் பிடிக்க செய்யும் தோட்டம் இருக்கும் போது நாளைடைவில் நீர் உள்புக செய்து விடும்.

அப்படியானால் மொட்டை மாடியில் தோட்டம் அமைக்க கூடாதா? அமைக்கலாம் அதற்கு ஒரே ஷீட்டாக ஹை டென்சிட்டி பாலித்தீன் ஷீட்டினை(HDPE sheet)பயன்ப்படுத்த வேண்டும். இது கடைகளில் கிடைக்கிறது.

தேவையான அளவில் வாங்கிக்கொண்டு ,பின்னர் மேல் மாடியில் நான்கு புறமும் சுவர் போல செங்கற்களை அடுக்கி விட்டு அதன் மீது ,பிளாஸ்டிக் ஷீட்டினை பரப்பி நான்கு புறமும் வெளிப்புறமாக கொஞ்சம் மடக்கி விட்டு விட வேண்டும். இப்போது தண்ணீர் கசியாத சதுர பிளாஸ்டிக் குளம் போல ஒரு அமைப்பு கிடைத்திடும்.

இந்த அமைப்பில் நீர் ஊற்றி சேகரித்தால் கூட கசியாது. இப்போது சுமார் ஒரு அடிக்கும் குறையாத அளவில் மண்ணை இதில் பரப்பி விட்டுக்கொள்ள வேண்டும்.

மண்கலவை:

நேரடியாக செம்மண்ணோ, தோட்ட மண்ணோ மட்டும் பயன்படுத்தினால் தாவரங்களின் வேர் நன்கு பரவாது எனவே,

ஒரு பங்கு மணல்

ஒரு பங்கு தொழு உரம்

தொழு உரம் கிடைக்காதவர்கள் கடைகளில் விற்கும் காயர் பித் கம்போஸ்ட்(coir pith compost) சர்க்கரை ஆலைகள் தயாரித்து விற்கும் பகசி கம்போஸ்ட் (bagasse compost)என ஒரு வாங்கிக்கொள்ளலாம், 10 கி.கி அளவிலான பைகளில் உரக்கடைகள், நர்சரிகளில் கிடைக்க வாய்ப்புண்டு.

ஆரம்பத்தில் வாங்கிக்கொள்ளலாம் ,பின்னர் வீட்டிலேயே சமையல் கழிவில் தொழு உரம் தயாரிக்க வழி சொல்கிறேன்.

அடுத்து 3 பங்கு செம்மண் அல்லது தோட்ட மண்

எடுத்துக்கொண்டு நன்றாக கலந்து கொண்டு நாம் உருவாக்கிய தொட்டிப்போன்ற அமைப்பில் பரப்பிக்கொள்ளவும்.

பின்னர் அதில் ஒரு அடி வரப்பு ஒரு அடி வாய்க்கால் போல ரிட்ஜஸ் அன்ட் பர்ரோவ்ஸ் (ridges and furrows)என உருவாக்கி கொள்ள வேண்டும்.இதுக்கு பேரு தான் தோட்டத்தில பாத்திக்கட்டுறது, சிலப்பேரு சோத்துலவே பாத்திக்கட்டுவாங்க :-))

மேல் மாடியில் உருவாக்கும் சின்ன தோட்டத்திற்கு இது தேவை இல்லை " raised bed "சம பரப்பில் செடிகளை நடலாம் தான் ஆனால் இப்படி பாத்திக்கட்டி அதில் நடுவதன் மூலம் சில நன்மைகள் கிடைக்கும் அவை என்னவெனில்,

பெரும்பாலான தாவரங்களின் வேர்களும் ,தண்டுகளிம் தண்ணீரில் மூழ்கி இருந்தால் அழுகிவிடும். ஏன் எனில் வேர்கள், மற்றும் தண்டுகள் மூலமும் தாவரங்கள் சுவாசிக்கும்.எனவே இது மழைக்காலங்களில் உதவும்.

மேலும் ஒரு வாரம் ,10 நாள் என ஊருக்கு செல்ல நேரிட்டால் யார் தண்ணீர் ஊற்றுவார்கள், நாம் ஆள் வைத்து விட்டு சென்றால் தான் உண்டு, இல்லை எனில் செடிகள் வாடிவிடுமே, அப்படிப்பட்ட சூழலில் இவ்வமைப்பு ஓரளவு கைக்கொடுக்கும், எப்படி எனில்,

வாய்க்கால் போன்ற அமைப்பு நிறைய மண்ணின் நீர்ப்பிடிக்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றிவிட வேண்டும் ,பின்னர் அவற்றின் மீது மட்டும் ஏதேனும் பிளாஸ்டிக் ஷீட், அல்லது சாக்கு கொண்டு மூடிவிட வேண்டும் , இது ஆவியாதல் இழப்பை தடுக்கவே. வழக்கமாக வைக்கோல் கொண்டு இப்படி செய்வார்கள், நகரத்தில் வைக்கோலுக்கு எங்கு போக. இம்முறைக்கு மல்ச்சிங் (mulching)என்று பெயர்.

சாதாரணமாக ஒரு முறை நீர் பாய்ச்சினால் ஒரு வாரத்திற்கு செடிகள் தாக்குப்பிடிக்கும். ஆனால் வழக்கமாக ஓரிரு நாளிலேயே வாடியது போல தெரிகிறதே எனலாம் அது முழு செழிப்பான நிலைக்கு, இது போன்ற தண்ணீர் தட்டுப்பாடு வரும் போது தாவரங்கள் கிடைக்கும் நீரை வைத்து முடிந்த வரை சமாளிக்கவே செய்யும்.நாம் ஊருக்கு போகும் போது செய்வது லைஃப் இரிகேஷன்.

மேலும் மல்ச்சிங்க் செய்த இடத்தில் ஈரப்பதம் நன்கு நிற்கும் ,எனவே அதுவும் கைக்கொடுக்கும் ஆகையால் ஒரு வாரம் 10 நாள் ஆனாலும் உயிர்ப்பிழைத்து விடும்.

அப்படியும் மனசு நிம்மதியடைவில்லை இன்னும் எதேனும் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களா, அதற்கும் வழி இருக்கு.

பழைய அல்லது புதிய பானை எடுத்துக்கொள்ளவும் அடியில் மிக சிறிதாக ஒரு துளையிட்டு கொண்டு அதனை வாய்க்கால் போன்ற பகுதியில் , துளையிட்ட பகுதி அழுந்தி இருக்கும்படி பதித்து வைக்கவும். பின்னர் பானை நிறைய நீர் ஊற்றி மறக்காமல் பானையின் வாயை ஒரு தட்டு போட்டு மூடிவிடவும். ஊர் வாயைத்தான் மூட முடியாது பானை வாயையா மூட முடியாது :-))

ஏற்கனவே மண்ணில் ஈரப்பதம் முழு அளவில் இருப்பதாலும், பானையின் துளை சிறியதாக இருப்பதாலும் அவ்வளவாக நீர் வெளியேறாது.

மண்ணில் உள்ள நீர் ,தாவரங்களுக்கு பரப்பு இழுவிசை மற்றும் நுண் புழை (surface tension and capillary motion)ஏற்றம் மூலமே செல்லும், மண்ணும் அப்படித்தான் நீரை கிரகிக்கும் எனவே மண்ணின் ஈரப்பதம் குறைய குறைய பானை நீர் மெல்ல மண்ணில் கிரகித்து செடிகளுக்கும் போய் சேரும். எனவே எல்லா செடிக்கும் தனி தனி பானை வைக்க தேவை இல்லை. வீட்டு தோட்டத்தின் பரப்பு மற்றும் செடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு பானையே போதும்.

இம்முறைகளை பின்ப்பற்றினால் தாராளமாக 15-20 நாட்களுக்கு நீர்ப்பாய்ச்சாமலே தாவரங்கள் பிழைத்துக்கொள்ளும்.

ஒரு கூடுதல் தகவல் , தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் சொட்டு நீர் (drip irrigation)பாசனம் செய்ய பண வசதி இல்லாத நிலையில் தென்னம் தோப்புகளில் கூட மரத்துக்கு ஒரு பானை என புதைத்து வைத்து நீர் பாய்ச்சுகிறார்கள். ஒரு பானை நீர் தென்னை மரத்துக்கே ஒரு வாரம் தாங்குகிறது.

நம்முடை நீர்ப்பாசனம் மண்ணுக்கு நீர்ப்பாய்ச்சுவதில் கவனம் செலுத்துகிறது ஆனால் வேருக்கு நீர்ப்பாய்ச்சினால் போதும் என்பது தற்கால நீர் மேலாண்மை. ஏன் எனில் நாம் பாய்ச்சும் நீரில் 90% சதம் ஆவியாதல் மூலமே விரயமாகிவிடுகிறதாம்.

இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் நெல்லுக்கே நீர் சிக்கனமாக பயன்ப்படுத்த மடகாஸ்கர் முறையில் "thin film water irrigtion" பயன்ப்படுத்த சொல்லியிருக்கிறார்.நெல் வயலில் நீர் எப்போதும் நிற்க தேவை இல்லை இம்முறையில்.வயல் ஈரப்பதமாக இருந்தாலே போதும்.

வீட்டில் பயன்ப்பாட்டிற்கு பின்னர் வெளியேறும் நீரை சுத்திகரித்து மீண்டும் நம் வீட்டு தோட்டத்திற்கு பாசனம் செய்யப் பயன்ப்படுத்தலாம் அதற்கு எளிய வழி இருக்கிறது.

வீட்டுக்கழிவு நீர் சுத்திகரிப்பு:

ஒரு பிளாஸ்டிக் கேன் அல்லது ஏதேனும் டிரம் போன்ற ஒன்று எடுத்துக்கொண்டு, அதன் அடியில் நீர் வெளியேற ஒட்டை இட்டுக்கொள்ளவும் ,பின் அதில் முறையே சம அளவில் மணல், கருங்கல் ஜல்லி, செங்கல் ஜல்லி என நிரப்பி நிரப்பிக்கொள்ளவும் பின் அதனனுடன் விறகு எரித்த மரக்கரி துண்டுகளையும் சுமார் ஒரு கிலோ அளவுக்கு சேர்த்துக்கொள்ளவும்.

இந்த கலவை அனைத்தும் முக்கால் அல்லது பாதியளவே நிரப்ப வேண்டும்,அப்போது தான் நீரீனை பிடித்து வடிக்கட்ட டிரம்முக்கு நேரம் கிடைக்கும் :-))

இதில் ஏன் மரக்கரி சேர்க்கப்படுகிறது என்றால் அது ஆக்டிவேட்டட் கார்பன் (activated carbon)போன்று இயல்பாகவே செயல்படும். நாம் குடிக்க பயன்ப்படுத்தும் நீர் சுத்திகரிப்பு எந்திரங்களிலும் ஒரு ஆக்டிவேட்டட் கார்பன் பில்டர் இருக்கும்.

இது நீரில் உள்ள வேதிப்பொருள்களை கிரகித்துக்கொள்ளும் தன்மை உடையது.நாம் ஆக்டிவேட்டட் கார்பன் என்றெல்லாம் செலவழிக்காமல் நேரடியாக இயற்கையாக கிடைக்கும் மூலப்பொருளான மரக்கரியைப்பயன்ப்படுத்திக்கொள்கிறோம் அவ்வளவு தான்.

வீட்டு உபயோக கழிவு நீரில் வழக்கமாக இருக்கும் சோப், ஷாம்பு, பாத்திரம் துலக்கும் சோப்பு, எண்ணை ,உணவு துணுக்கு என அனைத்தும் இந்த சுத்திகரிப்பு முறையில் 90% நீக்கப்பட்டு ஓரளவு இயல்பான நீர்க்கிடைக்கும்.

வீட்டில் தொழு உரம் தயாரிக்கும் முறை:

வீட்டை சுற்றி கொஞ்சம் இடம் இருந்தால் அதில் குறைந்தது ஒன்றுக்கு ஒன்று என்ற அளவிலாவது குழி வெட்டி ,தாவர, உணவு கழிவுகளை சேமித்து உரமாக்கலாம்.

மண் தரை தான் தொழு உரம் தயாரிக்க ஏற்றது ஏன் எனில் மண்ணில் உள்ள நுண்ணியிரிகள் மட்க வைக்க உதவும், மேலும் துர்நாற்றம் , உணவுகள் ,தாவரக்கழிவுகள் அழுகுவதால் வரும் நீரினையும் உரிஞ்சிவிடும்.

அப்படி இல்லாத நிலையில் ஏதேனும் பிளாஸ்டிக் டிரம்மில் சேகரித்து தொழு உரமாக்கலாம். முன் சொன்னது போல கழிவுகள் அழுகுவதால் வரும் நீரினால் துர்நாற்றம் வரும் இதனைக்குறைக்க அவ்வப்போது கொஞ்சம் மணல் அல்லது மண் கொண்டு மேலே மூடிக்கொண்டே வரவேண்டும், நீரினையும் கிரகித்துவிடும், துர்நாற்றமும் குறையும்.மேலும் எளிதில் மட்கவும் செய்யும்.முழுதும் மட்கி மண் போல ஆக குறைந்தது ஆறு மாதம் ஆகலாம். பின்னர் எடுத்து தோட்டத்துக்கு உரமாக இடலாம்.

ஏன் இப்படி மட்க செய்யவேண்டும் நேரடியாக தோட்டத்தில் தாவரத்திற்கு போட்டு விடலாமே என நினைக்கலாம். அதனால் பயனேதும் இல்லை.

தாவரங்கள் தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளான நைட்ரஜன், பொட்டாசியம் ,பாஸ்பரஸ் ஆகியவற்றை நீரில் கரைந்துள்ள(water solluble nutrients) நிலையிலேயே கிரகிக்க முடியும்.மட்காத கழிவில் ஊட்டச்சத்துகள் இருந்தாலும் நீரில் கரையாத தன்மை கொண்டவை எனவே தாவரங்களால் பயன்ப்படுத்திக்கொள்ள முடியாது.

மட்கிய நிலையில் நீரில் கரையும் தன்மை வந்துவிடும். மாட்டு சாணத்துக்கும் இது பொருந்தும் ,ஈரமாகாவோ, காய்ந்தோ அப்படியே இட்டால் பலன் இருக்காது.மட்க வைத்தே இட வேண்டும்.மட்கிய நிலையில் கரிமப்பொருட்களில் இருப்பவை அனைத்தும் எளிய மூலகங்களாக உடைப்பட்டு எளிதில் கறையும் தன்மை அடையும்.

தொழு உரம் என்பது மெதுவாக ஊட்டச்சத்தினை வெளியிடும் (slow releasing fertilizr)தன்மை கொண்டது , இந்த பருவத்தில் இட்ட உரத்தின் பலன் அடுத்த பருவத்திலேயே தெரியும்.எனவே தொழு உரம் எல்லாம் இட்டும் வீட்டு தோட்டம் பச்சை பசேல் என செழிப்பாக வளரவில்லை என முதன் முதலில் தோட்டம் போட்டதும் எதிர்ப்பார்க்காதீர்கள். சுமாரான வளர்ச்சி தான் முதல் பருவத்தில் இருக்கும். அடுத்த பருவத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

உரம் போட்டதும் பயிரில் பசுமையை காட்டுவது இரசாயன உரங்களே அதனால் விவசாயிகள் அதனைப்பார்த்து நல்ல பலன் என செயற்கை உரங்களுக்கு போய்விட்டார்கள். நீண்ட கால நோக்கில் பின் விளைவுகள் எதிர்மறையாகப்போகும். எனவே வீட்டு தோட்டத்தில் உடனடி பலன் எதிர்ப்பார்த்து இரசாயன உரம் போட வேண்டாம்.இரசாயன உரங்கள் ,பூச்சிக்கொல்லிகளை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான இயற்கை உணவுகள் நமக்கு குறைந்த செலவிலும், உழைப்பிலும் வீட்டுத்தோட்டங்கள் மூலம் கிடைக்கும்.

வீட்டுத்தோட்டத்தில் கவனிக்க வேண்டியவை:

# மொட்டை மாடியில் அமைக்கும் போது நீர் போகும் வழிகளை அடைக்காமல் அமைக்கவும்.

#கைப்பிடி சுவரோடு ஒட்டி அமைத்து விடாமல் நான்கு புறமும் சென்று வர வழியோடு அமைக்கவும்.

#குறைந்த இடத்தில் அமைக்கிறோம் ,நிறைய பயிரிட வேண்டும் என அதிகம் செடிகளை நடாமல் போதுமான இடைவெளி விடவும்.அடர்த்தி அதிகம் ஆனால் செடிகளிடையே ஊட்டச்சத்துக்கு போட்டி ஏற்பட்டு எதுவுமே சரியாக வளராது.

#நீர் தேங்காமலும், பானைகள் நீருடன் திறந்து கிடக்காமலும் பார்த்துக்கொள்ளவும் ,இல்லை எனில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறி டெங்கு முதல் அனைத்தும் வரும்.

#மேலும் சில பூச்சிகள்,வண்டுகள் உங்கள் வீட்டுக்கு அழையா விருந்தாளியாகவும் வரலாம் :-))

கட்டுப்படுத்த வேப்பம் எண்ணையை நீரில் கலந்து(10%) கை தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

#வீட்டு தோட்டத்தில் எறும்புகள் அதிகம் படை எடுக்கும் அதுவும் விதைப்பின் போது ,அதைப்பார்த்துவிட்டு துகளாக கிடைக்கும் எறும்பு மருந்தினை வாங்கி தூவக்கூடாது .ஏன் எனில் lindane 2-4-D என்ற ரசாயனமே எறும்பு மருந்து என விற்கப்படுகிறது. இது தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

எறும்பினை கட்டுப்படுத்த கொஞ்சம் மேசை உப்பினை சுற்றிலும் கோடுபோல தூவிட்டாலே போதும்.லச்சுமணன் ரேகை போல எறும்பு கோடு தாண்டாது :-))

# தோட்டத்தில் பல்லி, சிலந்தி இருந்தால் அப்புற படுத்த வேண்டாம் அவை பயிர்களின் நண்பனே இயற்கையாக பூச்சிகளை கட்டுப்படுத்துபவை.

மேலும் மற்ற விவரங்கள் எல்லாம் கவுசல்யா அவர்களின் பதிவிலே நன்றாக விளக்கியுள்ளார்கள், அங்கு பார்க்கவும்.விடுபட்டவைகளை மட்டுமே நான் கூறியுள்ளேன் , இன்னும் ஏதேனும் விடுபட்டிருந்தாலோ சந்தேகம் என்றாலோ பின்னூட்டத்தில் சொல்லலாம்.

--------------

பின் குறிப்பு:

தகவல், படங்கள் உதவி,

கூகிள் தளம்,நன்றி!

*****