Thursday, July 05, 2012

ஒலிம்பிக் கனவுகள்!-1

(abebe bikila on bare foot at rome olympics)

ஆப்பிரிக்காவை இருண்ட கண்டம் என்றே வரலாற்றுப்பாடப்புத்தகங்களில் பல காலமாய் படித்து வந்திருக்கிறோம், இன்று வரையில் பல ஆப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டுக்கலவரம்,ராணுவ ஆட்சி, வறுமை என்ற சூழலே நிலவுகிறது ,ஆனால் அவர்களின் ஒலிம்பிக் சாதனைகளைப்பார்த்தால் ,"ஒளிரும்" இந்தியா போன்ற நாடுகள் முக்காடுப்போட்டுக்கொள்ள வேண்டும் :-))

எத்தியோப்பியா கிழக்கு ஆப்பிரிக்க பகுதியில் இருக்கும் , வளம் இருந்தும் வறுமையில் வாடும் நாடு ,ஆனால் அப்படிப்பட்ட நாட்டில் ராணுவ ஆட்சிக்காலத்திலேயே பிறந்த ஒருவர் 24 வயது வரையில் தடகள பயிற்சி எடுத்திராமல் , திடீர் என தடகள வீரர் ஆக ஆசைப்பட்டு முயற்சி செய்து , தொடர்ந்து இரண்டு முறை ஒலிம்பிக் மராத்தான் தங்கப்பதக்கம் வென்று சாதனைப்படைத்து இருக்கிறார் என்றால் ,இந்தியா போன்ற நாட்டில் பிறந்தவர்கள் ஏன் இன்னும் சாதிக்க முடியவில்லை என்ற கேள்வி எழாமல் இருக்க முடியாது. எல்லாவற்றிருக்கும் காரணம் , தன்னம்பிக்கை,கடின உழைப்பு தானே ஒழிய ,பணமோ,நவீன வசதிகளோ அல்ல என்பது புரியும்.

எவ்வித வசதியும், இல்லாத சூழலில் பிறந்து சாதித்த ஒரு ஆப்ரிக்க தடகள சிங்கத்தினை இப்பதிவில் காணலாம்.

அபிபி பிக்கிலா(abebe Bikila) 1932 ஆம் ஆண்டு எத்தியோப்பியாவில் ,தலை நகர் அடிஸ் அபாபா நகருக்கு அருகே ஜாதோ என்ற சிற்றூரில் Widnesh Menberu and Ato Bikila Demssie தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். அவரது தந்தை ஆடு மேய்க்கும் தொழில் செய்ததால் , இளவயதிலேயே ஆடு மேய்த்துள்ளார், 12 வயது வரையில் எதியோப்பிய பாரம்பரிய கல்வியை மட்டும் படித்துள்ளார்.

இராணுவ ஆட்சி என்பதால் அவரது 12 ஆம் வயதிலேயே ராணுவத்தில் அரசருக்கு பாதுகாவலராக வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளார்.குடும்ப பாரத்தை குறைக்கவே 12 வயதில் வேலைக்கு மறுப்பேதும் சொல்லாமல் செல்ல நேரிட்டது.அங்கு தான் வழக்கமான உடற் பயிற்சிகள் ,விளையாட்டு பயிற்சி எல்லாம் கிடைத்துள்ளது, எத்தியோப்பிய பாரம்பரிய விளையாட்டான கெனாவிலும் தேர்ச்சிப்பெற்றுள்ளார். கெனா என்பது ஹாக்கி மட்டை போன்ற வளைந்த குச்சிகளை வைத்துக்கொண்டு ,மரப்பந்தை அடித்து விளையாடும் ஹாக்கிப்போன்ற விளையாட்டு ஆகும்.

1956 இல் ,அவரது 24 வது வயதில் சிலர் பல வண்ண விளையாட்டு ஆடைகளை அணிந்து வரிசையாக செல்வதைப்பார்த்து , யார் அவர்கள் ,எங்கே செல்கிறார்கள் என விசாரித்துள்ளார், அவர்கள் எல்லாம் ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ள செல்லும் தடகள வீரர்கள் என்பதையே அப்போது தான் அறிந்துள்ளார், ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் குறித்தே 24 ஆவது வயதில் தான் அறிந்துள்ளார், அவருக்கும் அதில் கலந்துக்கொள்ள ஆசை வந்ததுக்கு காரணம், அப்போது தான் வண்ணமயமான டிராக் சூட், மரியாதை எல்லாம் கிடைக்கும் என்பதாலே.

அதன் பிறகே பயிற்சிகளை ஆரம்பித்து , ராணுவ வீரர்களுக்கான வருடாந்திர தடகளப்போட்டியில் முதன் முறையாக கலந்துக்கொள்ள முடிவு செய்து அதில் எடுத்ததும் மராத்தான் போட்டியில் கலந்துக்கொண்டார், அப்போட்டியில் அப்போதைய தேசிய நீண்ட தூர ஓட்ட சாம்பியன் வாமி பிராட்டு(Wami bratu)வும் கலந்துக்கொண்டதால் ,அனைவரும் வாமி பிராட்டு வெற்றிப்பெறுவார் என எதிர்ப்பார்த்திருக்க, இறுதியில் வாமி பிராட்டுவை பின் தள்ளி அவரது சாதனையையும் உடைத்து பிகிலா வெற்றிப்பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தவே, தேசிய தடகள அணியின் பயிற்சியாளர் ஒரு எதிர்கால சேம்பியன் கிடைத்துவிட்டார் என தேசிய அணியில் இடம் வாங்கி கொடுத்து பயிற்சியும் கொடுத்தார்.

1960 ரோம் ஒலிம்பிக்கிற்கு அணி அறிவிக்கப்பட்ட போது இவர் தேர்வாகவில்லை, சீனியர் என்பதால் வாமி பிராட்டுவே தேர்வாகி இருந்தார், ஆனால் கடைசியில் பிகிலாவிற்கே அதிஷ்டம் கைக்கொடுத்தது, ரோம் ஒலிம்பிக்ஸ் கிளம்புவதற்கு முன்னர் ஒரு கால்பந்து போட்டியில் ஆடுவோம் என பிராட்டு ஆடியதில் கால் முறிந்துப்போனது. அவருக்கு பதிலாக யாரை அனுப்புவது என பலத்த யோசனை , விமானம் கிளம்பும் நேரம் வரைக்கும் நடந்து கடைசியில் பிக்கிலா வை தேர்வு செய்து அனுப்பி இருக்கிறார்கள்.

ரோமுக்கு போனப்பிறகும் சோதனை தொடர்ந்துள்ளது, இவர்கள் அணிக்கு ஷீ ஸ்பான்சர் செய்ய ஒத்துக்கொண்ட அடிடாஸ் நிறுவனம் ,ஏழை நாடு தானே என்ற எண்ணத்திலோ என்னமோ பிகிலா கால்களுக்கு பொருந்தாத ஷீ வைக்கொடுத்து இது தான் இருக்கு , அட்ஜெஸ்ட் செய்து போட்டுக்கொண்டு ஓடுங்க என சொல்லியுள்ளது.பொறுந்தாத ஷீ வைப்போட்டுக்கொண்டு ஓடுவதற்கு நான் வெறும் காலுடன் ஓடுவேன் என ஷீ இல்லாமலே களத்தில் குதித்துவிட்டார், சகல வசதிகள் கொண்ட மற்ற நாட்டு வீரர்கள் அனைவரையும் பின் தள்ளிவிட்டு வெற்றுக்கால்களுடன் முழு மராத்தானும் ஓடி வெற்றிப்பெற்றார், அது அவருக்கான தனிப்பட்ட வெற்றி மற்றுமல்ல அதுவரையில் ஒலிம்பிக்கில் எத்தியோப்பியா வீரர் யாரும் தங்கம் வென்றதே இல்லை ஏன் எந்த ஆப்பிரிக்க கறுப்பின வீரரும் வென்றதே இல்லை. வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் 2 மணி ,16நிமிடம்.20 விநாடிகளில் ஓடிமுடித்து புதிய உலக சாதனையும் படைத்துள்ளார்.

ஏன் வெற்றுக்கால்களுடன் ஓடினீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "உலகத்திற்கு எத்தியோப்பியர்களின் உறுதியையும், வீரத்தினையும் காட்ட" என தைரியமாக சொன்னார்.

அடுத்த ஒலிம்பிக்ஸ் 1964 இல் டோக்கியாவில் நடந்தது அதிலும் கலந்துக்கொள்ள தேர்வானார்,ஆனால் போட்டிக்கு 6 வாரங்களுக்கு முன்னால் குடல்வால் நோயால் பாதிக்கப்பட்டு ஆபரேஷன் செய்ய வேண்டி இருந்தது, எனவே அவரால் போட்டியில் கலந்துக்கொண்டு ஓட முடியாது என அனைவரும் முடிக்கட்டிய நிலையில், அவரோ ஆபரேஷன் செய்த நிலையிலும் , மருத்துவமனையில் அவரது அறையிலே ஜாக்கிங் செய்ய ஆரம்பித்து விட்டாரம்.மாற்று வீரர் அனுப்பலாம் என நினைத்த பயிற்சியாளரையும் வற்புறுத்தி அவரே டோக்கியோ சென்றார், விமானத்தில் இருந்து இறங்கவே சிரமப்படுவதை பார்த்து , அவரால் ஓட முடியாது என அனைவரும் நினைத்த நிலையில், தன்னம்பிக்கையுடன் ஓடி மராத்தானில் தங்கம் வென்றதோடு மீண்டும் ஒரு புதிய உலக சாதனையாக 2 மணி 12.11 இல் ஓடி முடித்தார். அதோடு மட்டும்மில்லாமல் முதன் முறையாக மரத்தானில் அடுத்தடுத்து தங்கம் வென்ற வீரர் என்ற சாதனையும் படைத்தார். இன்று வரை அச்சாதனை இருக்கிறது.

மூன்றாவது முறையாக 1968 இல் மெக்சிகோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள பயிற்சியில் ஈடுப்பட்டிருக்கும் போது அவரது கால் விரல் எலும்பு முறிந்துவிட்டது.ஆனாலும் விடாமல் எலும்பு முறிவோடு போட்டியில் கலந்துகொண்டு 15 கி.மீ வரையில் முன்னணியில் இருந்து பின்னர் , வலி அதிகரிக்கவே , முழுவதும் முடிக்காமல் ஒதுங்கிவிட்டார், அப்போட்டியில் சக எத்தியோப்பிய வீரர் ஆன மாமோ வோல்டெ(Mamo wolde) தங்கம் வென்றார். அபிபி பிகிலா ஓடி இருந்தால் என்னால் தங்கம் வென்று இருக்க முடியாது என மாமோவே சொன்னது , அவரது திறமைக்கு சான்றாகும். ஏனெனில் இந்த ஒரு போட்டி தவிர பிகிலா அதுவரையில் கலந்துக்கொண்ட எந்த போட்டியிலும் தோற்றதே இல்லை.

பின்னர் நான்காவது ஒலிம்பிக்கிலும் கலந்துக்கொள்ள ஆர்வமாக இருந்துள்ளார், ஆனால் இம்முறை விதி விளையாடிவிட்டது, இவர் இராணுவத்தில் இருந்ததால் , சர்வாதிகார அரசருக்கு எதிராக போராடியவர்கள் இவர் சென்ற காரை தாக்கியதில் ,கட்டுப்பாடு இழந்து கார் விபத்துக்குள்ளானாதால் ,பிகிலாவின் இடுப்புக்கு கீழே செயலிழந்து விட்டது, வீல் சேரில் இருக்கும் போதும் , வீல் சேரோடு மராத்தானில் கலந்துக்கொண்டு ஓடுவேன் என நகைச்சுவையாகவே சொல்லியிருக்கிறார், ஆனால் கடைசி வரை குணமாகாமல் ,மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு தனது 41 ஆம் வயதில் தூங்கும் போதே உயிர்ப்பிரிந்தார்.

அபிபி பிகிலாவின் எழுச்சிக்கு பிறகே எத்தியோப்பிய வீரர்களுக்கு மராத்தானிலும்,நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களிலும் உலக அளவில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை வந்தது. எத்தியோப்பியாவை பின்ப்பற்றி மற்ற ஆப்பிரிக்க நாடுகளும் நீண்ட தூர ஓட்டப்போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வீரர்களை தயார்ப்படுத்த ஆரம்பித்து சாதிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்றளவும் நீண்ட தூர ஓட்டப்போட்டிகளில் எத்தியோப்பியா ,கென்யா,மொராக்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகளே முன்னிலை வகிக்கின்றன, அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளே அவர்கள் முன் காணாமல் போய்விடுகின்றார்கள்.

இத்தனைக்கும் அவர்கள் நாட்டிலோ அடிப்படை வசதி கூட எதுவுமில்லை. தேசிய அளவில் சாதித்தால் ராணுவத்தில் ஒரு வேலைக்கொடுப்பார்கள், அங்கிருந்து பயிற்சி செய்து தான் அனைவரும் சாதிக்கிறார்கள், பெரும்பாலோர் சாலையில் ஓடியே பயிற்சி எடுக்கிறார்கள்.நவீன ஜிம்கள் பார்க்க வேண்டும் என்றால் தலை நகர் அடிஸ் அபாபாக்கு தான் வர வேண்டும், அதே போன்று தான் விளையாட்டு அரங்குகளும். தலை நகருக்கு வெளியே எவ்வசதியும் இருக்காது.

3 வேளை சாப்பிட உணவுக்கிடைப்பதே கடினம், அங்குள்ள முக்கியமான வேலை வாய்ப்பே ராணுவப்பணி தான், அடுத்து வேலை என்றால் ஓட்டப்பந்தய வீரர் ஆவது மட்டுமே, மற்றபடி நல்ல வருமானம் கிடைக்க வழியே இல்லாத நாடு. எத்தியோப்பிய வீரர்களிடம் ஏன் தடகள போட்டியில் ஓடுகிறீர்கள் எனக்கேட்டால் சொல்வது என்னவெனில் " முதலில் நாட்டுக்காக ஓடுகிறேன், பின்னர் எனது வாழ்க்கைக்காக" என்பார்கள்.

எத்தியோப்பிய நிலையை ஒப்பிட்டால் இந்தியா சொர்க்க புரி என்பது புரியும், இந்த வசதிகளை கொண்டு நாம் எத்தனை தங்கம் வாங்கியிருக்க வேண்டும், ஆனால் நாம் ஒரே ஒரு தனி நபர் தங்கம் வாங்கவே 2008 வரையில் அபினவ் பிந்த்ரா வரவுக்காக காத்திருந்தோம். ஆனால் எத்தியோப்பியா 1960 முதல் ஒலிம்பிக்கில் தனி நபர் தங்கம் வென்று வருகிறது.இதில் வேடிக்கை என்னவெனில் இன்றும் நாம் பாடப்புத்தகத்தில் ஆப்பிரிக்க ஒரு இருண்ட கண்டம் என படித்துக்கொண்டிருக்கிறோம் :-))

ங்கொய்யாலே இப்படி குருட்டு தனமாக பாடப்புத்தகம் எழுதறவங்களை பிடிச்சு சிங்கத்துக்கு இரையாக்கணும் :-))

அடுத்த பதிவில் முதல் ஒலிம்பிக் தங்கம் வென்ற ஆப்பிரிக்க பெண் சிங்கத்தை பார்க்கலாம்.

தொடரும்...
-------------

பின்குறிப்பு;

நம்ம நாட்டினை குற்றம் சொல்ல அல்ல இப்பதிவு, எப்போது பார்த்தாலும் அமெரிக்காவை பார், ஆஸ்திரேலியாவை பார், என முன்னேறிய நாட்டை சொல்லி அப்படி நாம் எப்போ வல்லரசு ஆவது, ஒலிம்பிக்கில் சாதிப்பது என்றே மீடியாவும், மக்களும் பேசுகின்றார்கள், ஆனால் வறுமையிலும், உள்நாட்டுக்கலவரத்திலும் சிக்கித்தவிக்கும் நாட்டு மக்கள் தங்கள் விடா முயாற்சியாலே சாதிக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவே இப்பதிவு.

வசதி ,வாய்ப்புள்ளவன் சாதிப்பதை பார்த்து பெருமூச்சு விடுவதை விட ஆப்பிரிக்க நாடுகள் சாதிப்பதை பார்த்து நாம் கற்றுக்கொள்ள ஒரு பாடம் இருக்கிறது.
----

தகவல், மற்றும் படங்கள் உதவி,

விக்கி,எத்தியோப்பியன்ஸ்.காம் ,இணைய தளங்கள்,நன்றி!

*****