Sunday, October 14, 2012

மின்சாரக்(கொடுங்)கனவுகள்.


தமிழ்நாட்டில் மின் வெட்டு என்று சொல்வது மிக தவறான ஒரு குற்றச்சாட்டாகும் ,தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லை என சொல்வதே சரியான சொல்லாடலாக இருக்கக்கூடும்.

மின்வெட்டு என்று சொன்னால் மின்சாரம் வந்து கொண்டிருக்கும் போது சிறிது நேரம் தடை ஏற்படுவதாகும், முழுக்க மின்சாரம் இல்லாத நிலையில் சிறிது நேரம் மட்டுமே மின்சாரம் வருவதனை  மின்வெட்டு என சொல்வது எப்படி சரியாகும், ஏம்பா நான் சரியாத்தான் பேசுறனா?

சரி எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதிய எதுக்கு வார்த்தை விளையாட்டுல சொல்லிக்கிட்டு, இப்போதைய மின்சார தட்டுப்பாடான நிலைக்கு அடிப்படையான சில காரண ,காரியங்களை பார்க்கலாம்.

முதல் காரணம் கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 500 மெகா வாட் அளவுக்கே மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதே காலகட்டத்தில் சுமார் 4000 மெகாவாட் மின் நுகர்வு அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு மின்நுகர்வு-தட்டுப்பாடு பட்டியல்.

in MW
Month     Jun - 10  July -10  Aug -10  Sep -10  Oct -10 Nov -10
Avg.
Demand  10850    10860     10500    10650 10990     9850
Avg.
Availability  9160    9130       9040     8500   7940      7250
Deficit -      1690   -1730     -1460    -2150 -3050      -2600

in MW

Month     Dec -10 Jan -11 Feb -11 Mar -11 Apr -11 May - 11
Avg.
Demand  10770  11080    11160    11580   11760     11840
Avg.
Availability 8150   7650     9150      9050     9400       10270
Deficit       -2620 -3430    -2010    -2530    -2360      -1570


The deficit varies from 1400MW to 3400MW
The availability Vs demand and the deficit during Day time
(6.00 to 18.00 Hrs)
in MW

Month       Jun - 10 July -10 Aug -10 Sep -10 Oct -10 Nov -10
Avg.
Demand   10300          10300   9980      10130     9890        8880
Avg.
Availability   8580       8400       8290      7780      6780        6400
Deficit        -1720      -1900      -1690 -    2350    -3110       -2480

in MW
Month        Dec -10 Jan -11 Feb -11 Mar -11 Apr -11 May - 11
Avg.
Demand     9150       11080      11160      11580      11160     11840
Avg.
Availability   7290       7450        8940         8740       9200      10160
Deficit -       -1860       -3630      -2220         -2840    -1960      -1680

-----------------

மின் தட்டுப்பாடு இவ்வளவு உக்கிரமாக இருக்கும் போது மின்வாரியம் ஏன் விரைந்து செயல்படவில்லை என பார்த்தால் அதனுள் ஏகப்பட்ட அரசியல் அதுவும் நிர்வாக அரசியல் என விரவிக்கிடக்கிறது, ஆள்வோருக்கு சரியான நேரத்தில் உண்மையான நிலவரத்தினை சொல்ல தவறிவிடுகிறார்கள், பொய்யான காகித கணக்குகளை காட்டி விரைவில் சரியாகிவிடும் என்பதே அதிகாரிகளின் பதில் ,அதனையே தலைமையும் நம்புகின்றது,ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது என அவர்கள் அறிவதே இல்லை, ஊடகங்களில் வரும் செய்தியினைக்கூட அரசியல் காழ்ப்புணர்வு செய்தி எனப்பார்க்கிறார்கள் என நினைக்கிறேன்.

தமிழ்நாடு மின்வாரியம் ஆமை வேகத்தில் வழக்கமாக செயல்ப்பட்டுக்கொண்டிருந்தது ,அதனை மேலும் சிக்கலாக்கி இன்னும் நத்தை வேகத்தில் செயல்படுமாறு சில மாற்றங்களை செய்த பெருமை நம் ஆட்சியாளர்களையே சேரும் எனலாம்.

முதன் முதலில் தமிழ்நாடு மின்வாரியம் 1957 இல் மாநில மின்விநியோக சட்டம் 1948 இன் கீழ் உருவாக்கப்பட்டது , இதன் பணி மின் உற்பத்தி, மின் பகிர்வு,மின் விநியோகம் ஆகும்.

1993 வரையில் மின்சார வாரியம் பொதுப்பணித்துறையின் ஒரு அங்கமாக செயல்ப்பட்டு வந்தது, பின்னர் மின்சக்தி துறை என தனியாகப்பிரிக்கப்பட்டு தனி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

பின்னர் மீண்டும் 2003 இல் மின்சார துறையை நிர்வாக ரீதியாக மேம்படுத்துவதாக சொல்லிக்கொண்டு , மின் உற்பத்தி, கடத்துதல்,விநியோகம்,கட்டுமானம், நிதி என தனித்தனியாக பிரிக்கப்போவதாக ஒரு சட்ட திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் 2003 இல் தனி துறைகளாக பிரிக்க வேலைகள் காகித அளவில்  துவங்கினாலும் பிரிக்கப்படவில்லை அல்லது வேலை மெதுவாக நடந்து வந்தது எனலாம், இந்த இரண்டு வேலைகளையும் துவங்கியது அம்மையார் ஆட்சிகாலத்தில் என்றாலும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

பின்னர் 2010 இல் முத்தமிழ் வித்தவரான மஞ்சத்துண்டு அய்யா ஒரே வீச்சில் பல துறைகளாகவும், அவற்றை அரசு வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாகவும் மாற்றியமைத்துவிட்டார்.

இப்படி தனித்தனியாக பிரிப்பது நல்ல விளைவினை ஏற்படுத்தும் திட்டம் போல தோன்றினாலும் , மின்வாரியம் செயல்ப்படும் வேகத்தினை குறைக்கவே செய்யும் என்பது அரசு நிர்வாகம் செயல்படும் விதம் தெரிந்தவர்களுக்கு நன்கு புரியும்.

மேலும் இது துறை ரீதியாக பிரிக்கப்பட்டது என சொன்னாலும் அனைத்து பிரிவினையும் தனி லிமிட்டட் கம்பெனிகள் என்றே உருவாக்கியிருப்பதையும் கவனிக்க வேண்டும்,அரசு துறை வேறு ,அரசு நிறுவனம் என்பது வேறு, நிறுவனமாக பிரிக்கப்பட்டால் எப்போது வேண்டுமானலும் தனியார் முதலீட்டினை அனுமதித்து தனியார் மயமாக்கலாம், பங்குகளை விற்கலாம், மேலும் லாப,நட்டம் என பார்த்து செயல்படும் ஒரு அமைப்பாக மாறிவிடும், சேவை என்பதற்கு இடம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

தற்போது எண்ணை நிறுவனங்கள் அரசு நிறுவனங்களாக இருந்த போதிலும் , சர்வதேச சந்தை விலைக்கு எண்ணை விலையை நிர்ணயிக்க உரிமை கொடுத்துவிட்டு, விலை ஏற்றினால் அதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என்பதாக பேட்டிக்கொடுக்கிறார்கலே ,அது போல வருங்காலத்தில் மின் நிறுவனங்களும் செயல்படலாம்.

தனி நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட தமிழ் நாடு மின்வாரியத்தின் பிரிவுகள்.

I. Erstwhile TNEB which has been reorganized as,

i. TNEB Limited.

ii. Tamil Nadu Generation and
Distribution Corporation Limited
(TANGEDCO),

மின் உற்பத்தி நிலையம் அமைத்தல், நுகர்வோருக்கு மின்சாரம் அளித்தல்.

iii. Tamil Nadu Transmission Corporation
Limited (TANTRANSCO) and

மாநிலத்தின் உள் பகிர்வு வலை(கிரிட்) மற்றும் வெளியில் இருந்து வாங்கும், விற்கும் மின்சாரத்தினை மின் பகிர்வு வலை மூலம் செயல்படுத்துதல்.

II. Tamil Nadu Energy Development Agency
(TEDA)

உற்பத்தி, தேவை, எதிர்கால திட்டம் என வடிவமைத்தல்.

III. Chief Electrical Inspector to Government
(CEIG)

மின் திட்டங்கள், மின் பகிர்வு,விநியோகம் என கண்காணித்தல்.

IV. Tamil Nadu Power Finance and Infrastructure
Development Corporation Limited.

மின் திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை உருவாக்குதல், திரட்டுதல்.

இப்படித்தனியாக  பிரிக்கப்பட்ட அமைப்புகளை ஒருங்கிணைத்து வேலை வாங்குவதே மிகப்ப்பெரிய வேலையாக இருக்கும்.

முன்னர் மின்வாரிய தலைவர் என ஒருவர் இருப்பார் அவர் முடிவு செய்து மற்றவர்களை செயல்ப்படுத்த சொன்னால் போதும், இப்போது அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரு மேலாண் இயக்குனர், அனைவரும் சம அதிகாரம் கொண்ட உயர் அதிகாரிகள், 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க வேண்டும் என கொள்கை முடிவு எடுக்க அனைவரும் ஒற்றுக்கொண்டு செயல்ப்படுத்த வேண்டும், இவர்களை எல்லாம் கூப்பிட்டு வைத்து வட்டம்,வட்டமாக மீட்டிங் போடுவதற்கே மின்சாரத்துறை அமைச்சருக்கு நேரம் சரியாக போய்விடும்.

கடைசியில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் ,மெது பகோடா ,காப்பி சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டுக்கொண்டே மீட்டிங் கலைந்துவிடும்.

இப்படி தனி நிறுவனங்களாக பிரிக்கப்பட்டு இருப்பதால் , ஒவ்வொன்றாக தனியார் முதலீட்டுக்குள் நுழைக்கலாம், ஒரு நிறுவனத்தின் கட்டமைப்பினை தனியாருக்கு குத்தகைக்கு விடலாம் என எளிதாக காரியத்தினை முடிக்க முடியும்.

உதாரணமாக மின்பகிர்வு நிறுவனம் தனது கம்பிவட கட்டமைப்பினை ஒரு தனியார் மின் உற்பத்தியாளருக்கு குத்தகைக்கு விடலாம், அதனை மின் உற்பத்தி நிறுவனம் எதிர்க்க முடியாது. எல்லாம் அரசு நிறுவனம் தானே அமைச்சர் , முதலமைச்சர் இருக்காங்களே கேட்க மாட்டாங்களா என்றால், அவர்களுக்கு தெரிந்து தானே நடக்கிறது , அப்படியே  யாரேனும் கேள்வி கேட்டாலும் அந்நிறுவனங்கள் லாபகரமாக நடக்க என்ன செய்யவேண்டுமென முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது,அதில் அரசு தலையிடாது என டிப்ளமேட்டிக்காக சொல்வார்கள்,ஆனால் அந்த அதிகாரத்தினை கொடுத்ததே அமைச்சரவை என்பதை மறைத்துவிடுவார்கள்.

------------------------

தமிழ்நாடு மின்வாரியத்தின் மின் பகிர்வு கட்டமைப்பு விவரம்,

• EHT & HT Substations:-

400 KV SS-துணை மின்நிலையம் : 13

230 KV SS  துணை மின் நிலையம்: 77

மேற்கண்ட வகை துணை மின்நிலையங்கள் கிரிட் மின்பகிர்வில் பயன்ப்படுபவை.

110 KV SS துணை மின்நிலையம்: 707

66 KV SS துணை மின்நிலையம் : 33

33 KV SS துனை மின்நிலையம்: 513
                                                    Total : 1343

மேற்கண்டவை முறையே மாநகர, தொழிற்சாலை, நகரம், சிற்றூர்களுக்கு மின் விநியோகம் செய்யப்பயன்படுபவை.

     
• EHT/HT Lines : 1.77 lakhs Ckt. Km

கூடுதல் உயர் அழுத்த.உயர் அழுத்த கம்பிவட அமைப்பு ,உற்பத்தி நிலையங்களில் இருந்து துணை மின் நிலையங்களுக்கு மின்பகிர்வுக்காக மின்சாரம் கொன்டு செல்ல பயன்படுகின்றன.

• LT Lines : 5.58 lakhs Km
குறைவழுத்த மின் கம்பி வட அமைப்பு வீடுகள்,வணிக நிறுவனங்களுக்கு மின்விநியோகம் செய்ய.

• ஊர்களின் பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்ய 2.05 lakhs Distribution Transformers பயன்படுகின்றன.
-------------

தமிழ்நாட்டில் அரசு சார்பில் இயக்க்ப்படும் அனல், புனல்,காற்றாலை, எரிவாயு மின்னுற்பத்தி நிலையங்கள்.




கவனிக்கவும்:-

* மேட்டூர் ,போன்ற நீர் மின் நிலையங்களில் நீர் இருக்கும் அளவைப்பொறுத்தே மின் உற்பத்தி என்பதால் ,காவிரியில் நீர் வராத நிலையில் இப்பொழுது மின் உற்பத்தி 50%க்கும் கீழே போய்விட்டது.

*எண்ணூர் அனல் மின்நிலையம் 50% மின் உற்பத்தி திறனில் செயல்ப்படும் நிலையில் இருப்பதால் பாதி மின் உற்பத்தி தான் செய்கிறது.

*அனல் மின் நிலையங்களுக்கு என ஆண்டுக்கு மொத்தம் 15 .5 மில்லியன் டன் நிலக்கரி ஒதுக்கப்படுகிறது, அதில் 13.5 மில்லியன் டன் மத்திய அரசின் கோல் இந்தியா அளிக்கும் மீதி 2 மில்லியன் டன் வெளியில் வாங்கப்படுகிறது,எனவே நிலக்கரி கையிருப்புக்கு ஏற்ப மின் உற்பத்தியின் அளவு ,குறைக்கப்படுவது வழக்கம், எனவே பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் 80-90% மட்டுமே மின் உற்பத்தி செய்யும்.

*குத்தாலம், வழுதூர் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படா நிலையில் உள்ளது.

*பேசின் பிரிட்ஜ் எரிவாயு மின் உற்பத்தி நிலையம் நாப்தா மூலம் இயக்கப்படுவதால் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே இயங்கும்.

மேற்கண்டப்பட்டியல் மூலம் அறிய வருவது என்னவெனில்,அரசு மின்னுற்பத்தி வெறும் 5,677 மெகாவாட்டுகள் மட்டுமே. மொத்த மின் தேவையோ 14,000 மெகாவாட்டுக்கு அருகில், சராசரியாக 11,000 மெகாவாட் மின்சாரம் எப்பொழுதும் தேவைப்படுகிறது.

ஆனால் அரசு மின் உற்பத்தில் முதலீடு செய்யாமல் தனியார் உற்பத்திக்கு முன் உரிமை அளித்து வருகிறது,இப்படியே போனால் வெகுவிரைவில் மின் உற்பத்தியில் தனியாரின் கை ஓங்கி, மின்சாரத்தின் விலை வெகுவாக உயரும், அரசின் பெரும்பணம் மின்சாரம் வாங்கவே செலவாகும் அல்லது சிக்கன நடவடிக்கை என மேற்கொண்டால் தற்போதுள்ளது போன்று கடும் மின்வெட்டு ஏற்படும்.

• Gross energy consumption during

2010-11 was 74990 MU.

• Total energy generated from State
owned stations during 2010-11 was
25784 MU.

• Energy purchased from Central
Generating Stations, Wind, Open
Market, Exchange etc., during 2010-11
was 49206 MU.

தமிழ் நாட்டில் பயன்படுத்தப்பட்ட மொத்த மின்சாரத்தில் மூன்றில் ஒரு பகுதியே அரசின் மின் உற்பத்தி நிலையங்கள் செய்துள்ளன. மூன்றில் இரண்டு பகுதி மின்சாரம் வெளியில் இருந்து கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டு ,விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஒரு யூனிட் மின்சாரத்தின் சராசரி விநியோக விலை ரூ3.81 ,

ஆனால் அரசின் கொள்முதல் விலை யூனிட்டிற்கு ரூ 5.31

எனவே சராசரியாக ஒரு யூனிட் மின்சாரம் விற்பதனால் மின்வாரியத்திற்கு 1.50 ரூ நட்டம்.

இதன் மூலம் ஆண்டுக்கு ஏற்படும் நிகர நட்டம் ரூ 38,000 கோடி ஆகும்.

மேலும் கடந்த காலங்களில் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட கடன் 45,000 கோடிகள்.

இந்த லாப-நட்ட கணக்குகளின் காலம் 2011 ஆகும், பின்னர் ஆட்சிக்கு  வந்த அம்மையார் நட்டமில்லாமல் மின் நிறுவனங்கள் செயல்பட என்ன செய்வது என "உயர் அதிகாரிகளை" ஆலொசனை கேட்க கட்டணம் உயர்த்த வேண்டும் என்று சொல்ல ,கட்டணமும் உயர்த்தப்பட்டது,அப்படியும் நட்டமே வர , கூடுதலாக பணம் செலவழிக்க அரசால் முடியாது, எனவே முடிந்த வரை நட்டமில்லாமல் இயங்க சொல்ல , "உயர் அதிகாரிகளும்" கூடுதல் விலைகொடுத்து  மின்சாரம் வாங்கி, குறைவான விலையில் விநியோகித்தால் தானே நட்டம் வரும் என அதி அற்புதமாக கண்டுப்பிடித்து மின்சாரம் வாங்குவதை குறைத்து விட்டார்கள், அதன் விளைவே மின்வெட்டு.

மூன்றில் இரண்டு பங்கு மின்சாரம் வெளியில் வாங்கப்படுகிறது ,அதனை முழுவதுமாக நிறுத்தி இருந்தால் 8 மணி நேரம் மட்டுமே மக்களுக்கு மின்சாரம் கிடைக்கும், அப்படி எல்லாம் மக்களை வதைக்க கூடாது என கருணை உள்ளத்துடன் மேலும் கொஞ்சம் நேரம் மின்சாரம் கொடுப்போம் என குறைந்த அளவுக்கு மின்சாரம் வாங்கி சுமார் 12 மணி நேரம் மின்விநியோகம் செய்கிறார்கள்.

நடுநிலையானவர்கள் நட்டத்தில் எப்படி மின்சாரம் கொடுக்க முடியும், மக்கள் தொகை அதிகம்ம் ஆகிடுச்சு ,நிறைய மின் இணைப்பு கொடுத்தாச்சு, அதற்கேற்ற மின் உற்பத்தி பெருகவில்லை, அரசும் என்ன தான் செய்யும் என அப்பாவியாக நினைக்கலாம்.

உண்மையில் மக்கள் அனுபவிக்கும் மின்சாரம் என்பது மொத்த மின்விநியோகத்தில் குறைவான அளவே,

வகை வாரியாக மின்நுகர்வு அளவு.



மேல் கண்ட அட்டவனையில் இருந்து அறியப்படுவது என்னவெனில்,

தமிழ்நாட்டில் மொத்த மின் இணைப்புகளின் எண்ணிக்கை 223.44 லட்சம்.

அவற்றின் மூலம் நுகரப்படும் மின் சாரத்தின் அளவு=60,357  மில்லியன் யூனிட்கள்.

ஆனால் இதில் வீட்டு மின் இணைப்பு 148.77 லட்சம், அவற்றின் மூலம் நுகரப்படும் மின்சாரத்தின் அளவு 16,387 மில்லியன் யூனிட்கள் மட்டுமே.

இந்தளவானது அரசின் மின் உற்பத்தி அளவான 25,734 மில்லியன் யூனிட் மின்சாரம் என்ற அளவை விட குறைவு.

மேலும் விவசாய மின் இணைப்புகளின் எண்ணிக்கை 19.73 லட்சம்.
நுகரப்படும் மின்சாரத்தின் அளவு= 12,632 மில்லியன் யூனிட்கள்.

பொது மக்கள் +விவசாயிகள் மின்நுகர்வு=      29,019 மில்லியன்ன் யூனிட்கள்.

அரசு தயாரிக்கும் மின்சாரத்திற்கும் ,மக்கள்,மற்றும் விவசாயிகள் பயன்ப்படுத்தும் மின்சாரத்திற்கும் உள்ள இடைவெளி=4,715 மில்லியன் யூனிட்கள் மட்டுமே.

அரசு ஒரு யூனிட் கொள்முதல் விலை சராசரியாக 5.31 ரூ எனவும் ,அதனை சராசரியாக 3.81 ரூவிற்கு விற்பதால் நட்டம் வருகிறது என சொல்கிறதே ,ஆனால் நிகர நட்டம் 38,000 கோடி என்கிறார்கள் அப்படியானால் மக்களுக்காக வாங்கும் மின்சாரம் வெறும் 4,715 மில்லியன் யூனிட்கள் தானே அவற்றின் விலையா 38,000 கோடி என ஒரு கேள்வி பாமரனுக்கும் வரனுமே ?

வெளிமார்க்கெட்டில் வாங்கும் மின்சாரம் 49,203 மில்லியன் யூனிட்டில் 4,715 மி.யூ போக மீதம் 44,500 மி.யூனிட்களுக்கு செலவாகும் பணமும் மக்கள் பெயரில் கணக்கு வைக்கப்படுகிறது.

இந்த மின்சாரம் தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் ,இதரவற்றிற்கு.

தொழிற்சாலை இணைப்புகளின் எண்ணிக்கை 5.37 லட்சம் மட்டுமே ஆனால்  21,075 மில்லியன் யூனிட்கள் என மொத்த மின்நுகர்வில் 34.92 சதவீதம் மின்நுகர்வினை அனுபவிக்கின்றன.

இத்தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை பன்னாட்டு பெரு நிறுவனங்கள்,மென் பொருள் நிறுவனங்கள்.சிறு குறு தொழிற்சாலைகள் மின் வெட்டினை அனுபவிக்கவே செய்கின்றன.

வெளியில் வாங்கும் மின்சாரம் சுமார் 8 ரூ -முதல் 17.50 ரூ வரையில் ஒரு யூனிட்டுக்கு ஆகிறது,

அரசு தயாரிக்கும் மின்சாரம் யூனிட்டுக்கு 2.50 ரூ மட்டுமே ஆகும், இதை எல்லாம் கூட்டி சராசரியாக 5.31 ரூ என யூனிட்டுக்கு கணக்கு சொல்லி ,அதன் மூலம் வரும் நட்டத்தினை அனைவருக்கும் பரவலாக்கிவிடுகிறார்கள்.

அதாவது 5.37 லட்சம் தொழிற்சாலை இணைப்புகள் பெருமளவு மின்சாரம் பயன்படுத்திக்கொண்டு, பெருமளவு பொதுமக்கள் 143 லட்சம் இணைப்புகள் மூலம் குறைவான மின்சாரம் பயன்ப்படுத்தினாலும் அனைவருக்கும் சராசரியாக ஒரே விகிதத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உண்மையில் வெளிமார்க்கெட்டில் வாங்கும் மின்சாரத்தின் பெரும் பங்கினை அனுபவிப்பது தொழில்,வணிக துறைகளே, அவர்களையே நேரிடையாக வெளிமார்க்கெட்டில் மின்சாரம்ம் வாங்கிக்கொள்ளுங்கள் என சொன்னால் அரசுக்கு கூடுதலாக செலவாவது குறையும்.

அப்படியும் அரசு வெளிமார்க்கெட்டில் மின்சாரம் வாங்கி,மின்வாரிய மின்பகிர்வு கிரிட் மூலம் கொண்டு வந்துக்கொள்ளலாம் என அனுமதிக்கொடுத்தும் யாரும் அப்படி செய்யவில்லை ,காரணம் அவர்களே வாங்கினால் ஒரு யூனிட் மின்சாரம் சுமார்12 ரூக்கு குறைவாக வாங்க முடியாது. அரசு கூடுதல் விலைக்கு வாங்கினாலும் ரூ 5.31க்கு மேல் விற்காது என்பதால் , அரசின் மின்வாரியமே வாங்கிக்கொடுக்கட்டும் என இருக்கிறார்கள்.

ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 17.50 ரூ என்றெல்லாம் அநியாய விலை நிர்ணயம் செய்து வாங்கியதில் மஞ்சத்துண்டின் கைங்கர்யமும் உண்டு.

மேலும் மின் உற்பத்தியில் 18.5% மின்கடத்தி இழப்பாக போய்விடுகிறது, இது அல்லாமல் மின் திருட்டு  என கணிசமான அளவு இழப்பு ஏற்படுகிறது.

மேலும் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கும் போது மின்சாரத்தின் விலை மட்டும் அல்லாமல் அவற்றை கிரிட் வழியாக கொண்டு வரவும் கட்டணம் உண்டு, இதனை வீலிங் சார்ஜ் என்பார்கள்.

மாநிலங்களுக்கு இடையே கிரிட்டில் மின்சாரம் கொண்டு வரும் போது எத்தனை சப் ஸ்டேஷன்களை கடக்கிறதோ அவ்வளவு மின் இழப்பு ஏற்படும்.

ஒரு சப்-ஸ்டேஷன் கடக்கும் போது 5% மின் இழப்பு என தேசிய மின்வாரியம் சொல்கிறது.

உதாரணமாக குஜராத்தில் இருந்து 800 மெ.வாட் மின்சாரம் தமிழ்நாடு வாங்கியது ,ஆனால் தமிழக எல்லையில் 450 மெ.வாட் தான் கிடைத்தது ,350 மெ.வாட் கடத்தி இழப்பு,வீலிங் இழப்பாக போய்விட்டது.

தொலை தூரத்திலிருந்து மின்சாரம் வாங்கினால் இப்படி இழப்பு அதிகம் ஆகும்.

ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சி ,சுமூகமான உறவு இல்லை எனவே மின்சாரம் தரமாட்டார்கள். கர்நாடகாவில் தண்ணீரே தருவதில்லை, மின்சாரம் தரப்போவதில்லை.

மத்திய மின் தொகுப்பில் வழக்கமாக கொடுக்கும் மின்சாரம் வருவதிலேயே பிரச்சினை எனவே கூடுதலாக விலைக்கு கேட்டால் தர வாய்ப்பில்லை அல்லது தர விருப்பம் இல்லை எனலாம்.

இந்நிலையில் தனியாரிடம் வாங்கி சமாளிக்கலாம் என்றால் விலை மிக அதிகம், இதற்கெல்லாம் ஒரே தீர்வு, மாநில மின்வாரியம் உற்பத்தி திறனை பெருக்க வேண்டும்.ஆனால் அவர்களுக்கோ அதில் ஆர்வமில்லை, தனியாரை தயாரிக்கவிட்டு , விலைக்கு வாங்கி அரசின் கஜானாவை காலி செய்யலாம் இல்லை எனில் மின்கட்டணத்தினை உயர்த்தி கொள்ளலாம் ,அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மின்வெட்டு தான் என மக்கள் விரோத சிந்தனைகளில் ஆட்சியாளரும்,அதிகாரிகளும் சிந்திக்கும் ஒரு மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

மின் வாரியத்தின் லாப நட்ட கணக்கு மற்றும் கடன் ,கடந்த ஐந்தாண்டுகளில்.



2006 இல் 9,000 கோடியாக இருந்த மின்வாரிய கடன் 2011 இல் 45,000 கோடியாக உயரக்காரணம் ,தனியாரிடம்ம் மின்கொள்முதல் செய்ய அதிக விலை நிர்ணயம் செய்ததும் ஒரு காரணம். பல தனியார் மின் உற்பத்தியாளர்களும், காற்றாலை அதிபர்களும் அரசியல் பினாமிகள் என்பதால் ,யாரு வீட்டு பணம் எடுத்துக்கோ என கண்ணை மூடிக்கொண்டு விலை நிர்ணயம் செய்து மின்வாரியத்தினை கடனுக்குள் தள்ளி , அதன் வளர்ச்சியினை முடக்கியதில் மஞ்சத்துண்டுக்கு பெரும்பங்கு உண்டு.

இப்பொழுதும் கூடுதல் பணம் செலவழித்தால் மின்சாரம் வாங்கி ,மின் தடையை நீக்கலாம், ஆனால் நிர்வாக மேம்பாடு என சொல்லி  நிதி ஒதுக்கீட்டினை குறைத்துவிட்டு மின்வெட்டினை அதிகரித்துவிட்டார்கள்.

மக்களுக்கு குறைவான விலையில் மின்சாரம் கொடுப்பதால் ஆகும் வருவாய் இழப்பு



மேற்கண்ட அட்டவணையிலிருந்து , பொதுமக்கள், விவசாயிகள், குடிசைகளுக்கு இலவச மின்சாரம் என அனைத்திற்கும் சேர்த்து அரசு அளிக்கும் மின்மானியம் சுமார் 2071 கோடிகள் மட்டுமே என்பது புலனாகிறது.

ஆகவே ஆண்டுக்கு 38,000 கோடி வருவாய் இழப்பு மின்வாரியத்திற்கு ஏற்படக்காரணம் மக்கள் அல்ல என்பது தெளிவாகிறது.

ஆனால் மின்வாரியத்திற்கு நட்டம், எனவே மின்சாரம் வாங்க இயலவில்லை என மின்வெட்டு மட்டும் மக்களுக்கு?

ஆட்சிக்கு வந்தால் உடனே மின் வெட்டு தீரும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதே எப்படி எனப்பார்த்தால்,

வட சென்னை, எண்ணூர், மேட்டூர், தூத்துக்குடி அனல் மின்நிலையம், ஆகியவற்றில் கூடுதல் மின் நிலையம் அமைத்தல் ,திருவள்ளூர் அருகே வள்ளூர் மின் திட்டம் அனைத்தும் 2011 இறுதியில் செயல் பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் அப்படி நடைபெறாமல் காலை வாரிவிட்டது.

எதிர்பார்க்கப்பட்ட மின் திட்டங்களின் பட்டியல்.



அனைத்து திட்டங்களும் இறுதிக்கட்டத்தில் இருந்தும் வேலை முடியாமல் இழுத்துக்கொண்டுள்ளது ,அதனை விரைந்து முடிக்க வைக்க அதிகாரிகள் அக்கரைக்காட்டியிருந்தாலே இப்போதைய மின்வெட்டினை சமாளித்து இருக்கலாம். அதனை செய்ய தவறிவிட்டார்கள். எதற்கெடுத்தாலும் சாட்டையை வீசும் அம்மையார் இதற்கு ஏன் சாட்டையை சொடுக்க மறந்தார்கள் என தெரியவில்லை.

இதில் மத்திய அரசின் கை இருக்குமோ எனவும் ஒரு சந்தேகம் இருக்கிறது, இத்திட்டங்களுக்கான பாய்லர், இன்ன பிற உபகரணங்களை வழங்க வேண்டியது பாரத மிகு மின் நிறுவனம் ஆகும், காலத்தே வழங்கி இருந்தால் இந்நேரம் மினுற்பத்தி நடந்து இருக்கும்.

கூடங்குளம் அணு மின்நிலையம் துவங்க மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும், எனவே மின் தட்டுப்பாடு இருந்தால் மட்டுமே ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என ,  ,மத்திய அரசு அழுத்தம் கொடுத்து பாரத மிகு மின் நிறுவனத்தினை தாமதப்படுத்துவதாக செய்திகளில் அடிபடுகிறது.

எது எப்படி இருந்த போதும் மாநில அரசு மக்களின் நலன் கருதி இதனை சரி செய்திட போராடி இருக்க வேண்டாமா? மத்திய அரசை எதிர்த்து கேள்விக்கேட்காதவரா அம்மையார், ஒரு வேளை பெங்களூர் வழக்கெல்லாம் இருக்கும் நிலையில் ரொம்ப முறுக்கிக்கொள்ளக்கூடாது என நினைக்கிறாரோ என்னமோ?

-------------------
பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள்,தமிழ்நாடு மின்வாரிய இணைய தளம்.நன்றி!
********