Friday, November 09, 2012

சினிமா ரகசியம்-3:DIGITAL PROJECTION



(ஹி...ஹி டிஜிட்டல் சிற்பம் )

 முதன் முதலாக திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு , திரையிடப்பட்ட காலம் தொட்டு 16 மி.மீ படச்சுருளையும் , அதன் பின்னர்  35 மி.மீ படச்சுருளையும் புரஜக்டர்கள் மூலம் இயக்கியே படங்களை திரையிட்டு வந்தார்கள், இதில் படச்சுருளின் வழியே ஒளியை செலுத்தி ஒரு புரொஜெக்‌ஷன் லென்ஸ் மூலம் திரையில் வீழ்த்தி காட்சி உருவாக்கப்பட்டது. இது Analog projection எனப்பட்டது.

தற்போது தொழில் நுட்பம் வளர்ந்த கால கட்டத்தில் படச்சுருளுக்கு பதிலாக டிஜிட்டல் மீடியாவில் உள்ளதை திரையில் காட்சிகளாக வீழ்த்தி படமாக காட்டுகிறார்கள், இது Digital projection எனப்படும் ,அது எவ்வாறு செயல்படுகிறது எனவும் , படக்காட்சிகள் சலனப்படமாக உருவாகவும், அதனை காணவும் அடிப்படையாக விளங்கும் தொழில்நுட்பங்களையும் இப்பதிவில் காணலாம்.
---------

பார்வை கோணம்:

ஒருவர் ஓய்வான நிலையில், மனித கண்கள் பார்வை வீச்சில் தெரியும் காட்சியின் கோண அளவு கிடைமட்டத்தில் கிட்டத்தட்ட 180 டிகிரி எனலாம், ஆனால் தெளிவாக காட்சியில் பதியக்கூடிய கோண அளவு 120-130 டிகிரி ஆகும்,

அதே போல செங்குத்து அச்சில் காட்சியின் கோண அளவு 90டிகிரி வரையில் அமையும்.

ஆனால் ஒரு அரங்கில் அமர்ந்து காணும் பொழுது திரையின் உயரம் அகலம், இவற்றோடு ஒப்பிட்டு ,அரங்கின் அளவிற்கு நாம் காணும் கோண அளவு

கிடைமட்ட அச்சில் 45 டிகியும்,

செங்குத்த்து அச்சில் 30-37 டிகிரி

என்ற அளவில் இருக்க வேண்டும் என வரையறுத்துள்ளார்கள்.

இதன் அடிப்படையிலேயே திரையரங்குகளின் திரை மற்றும் அமரும் இருக்கைகள் அமைக்கபடுகின்றன.





human eye vs camera angles 


பார்வை உணர்திறன்(Visual_acuity)

திரையின் அளவிற்கும், திரையில் வீழ்த்தப்பட்ட காட்சியினை நம் காட்சி கோணத்தில் ஒரு பிம்பம் தெளிவாக தெரிய தேவைப்படும் குறைந்த பட்ச பிக்சல் அளவினை "திரெஷ் ஹோல்ட் லெவல்" என வரையறுத்துள்ளார்கள்.

இந்த திரெஷ் ஹோல்ட் அளவு முதல் இருக்கை திரைக்கு எவ்வளவு அருகில் இருக்கலாம் என்பதை தீர்மானிக்க உதவுகிறது.

ஒரு காட்சியின் பிக்சல் அளவு மற்றும் திரையரங்க அளவு, புரொஜெக்‌ஷன் ரெசொல்யுஷனை தீர்மானிக்க திரையின் அகலத்தினை விட உயரம் முக்கிய காரணியாகும்.காரணம் செங்குத்து அச்சில் பார்வை கோணம் குறைவாக இருப்பதாகும்.

கண் மருத்துவர் சோதனையின் போது பல அளவிலான எழுத்துகள், எண்களை காட்டி சோதனை செய்வதும் பார்வை உணர் திறனை அறியவே. நல்ல பார்வை திறன் உள்ளவருக்கு 20/20 பார்வை திறன் உள்ளது என்பார்கள். இதன் விளக்கம் பின்னால் வருகிறது.

இதனை ஒரு உதாரணத்தின் மூலம் காணலாம்,

...............................................................

மேலே தொடர்ச்சியாக வைப்பட்ட புள்ளிகளை ,தொடர் புள்ளிகளாக நீங்கள் காண்கிறீர்கள், இது வழக்கமாக கணினி திரையை நீங்கள் காணும் தூரத்தில் இவ்வாறு தெரியும் ,

இப்பொழுது கொஞ்சம் தூரம் தள்ளி நின்று பாருங்கள், இப்பொழுதும் புள்ளிகளாக தெரியலாம், இப்படியே சிறிது சிறிதாக தள்ளி நின்று பார்க்கையில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் புள்ளிகளாக தெரியாமல் ஒரு தொடர் கோடாக தெரிய ஆரம்பிக்கும், அப்படியே தூரம் அதிகரித்துக்கொண்டே போனால் ஒரு நிலையில் கோடும் தெரியாது , கணினி திரை மட்டும் தெரியும் , அப்படியே ஒரு 10 கிலோமீட்டர் தூரம் போனீர்கள் ஆனால் கணினி திரை மறைந்து , அதிஷ்டம் இருந்தால் வீடு மட்டும்  தெரியலாம் :-))

ஒரு தனி  புள்ளி என்பதை வேறுபடுத்திக்காட்டும் தூரமே உங்கள் பார்வை உணர் திறனின் எல்லை , புள்ளிகள் மறைந்து கோடாக தெரியும் தூரம் கண்களின் உணர் திறனின் திரெஷ் ஹோல்ட் அளவு எனலாம்.

இப்பொழுது கோட்டினை பாருங்கள்,

______________________________

உண்மையில் இக்கோடும் பல புள்ளிகளால் ஆனாது ஆனால் தனி தனி புள்ளிகளை உணரும் அளவுக்கு மனித கண்களுக்கு உணரும் தன்மையில்லை,ஆனால் இக்கோட்டினை பெரிதாக்கிக்கொண்டே சென்றால் அதில் பல புள்ளிகள் இருப்பதை காணலாம்.

20/20 பார்வை திறன்:

ஒரு ஆர்க் மினிட் இடைவெளியுள்ள எழுத்துக்களை 20 அடி தொலைவில் இருந்து படிக்க முடிவதே 20/20 பார்வை திறன் ஆகும். இதனை ஸ்னெல்லன்  (Herman Snellen)1862.)என்ற டச் கண் மருத்துவர் கி.பி  1862 இல் கண்டுப்பிடித்து வடிவமைத்தார்.



ஒரு ஆர்க் மினிட் கோணத்தின் அளவு 1.75 மில்லி மீட்டர் ஆகும். E என்ற எழுத்தில் இரண்டு நீட்சிகளுக்கு இடையே 1.75 மி.மீ இடைவெளி இருக்கும் ,எழுத்தின் உயரம் 5 ஆர்க் மினிட் ,8.87 மி.மீ இருக்கும் போது அதனை 20 அடி தூரத்தில் இருந்து அடையாளங்காண முடிந்தால் ஒருவரின் பார்வைத்திறன் நன்றாக உள்ளது என்பார்கள்.

ஸ்னெல்லன் சார்ட்டில் கடைசியில் இருக்கும் எழுத்துக்களின் அளவு 20/20 பார்வை திறன் உள்ளவர்களால் படிக்க கூடியது, மிக மேல் இருக்கும் எழுத்துக்கள் மிக குறைவான பார்வை திறன் உள்ளவர்களால் படிக்க கூடியது ,அதனை 20/200 என்பார்கள், எழுத்தின் உயரம் 88.7 மி.மி இருக்கும், இதனை நன்றாக பார்வை திறன் உள்ளவர்கள் 200 அடி தூரத்தில் இருந்து படிக்க முடியும். பார்வை திறன் 20/200 என இருப்பவர்கள் மருத்துவ ரீதியாக பார்வையற்றவர் என்றே கூறப்படும்.
----------------

டிஜிட்டல் புரொஜெக்‌ஷனில் என்ன செய்கிறார்கள் என்றால் பல புள்ளிகள்(பிக்செல்) அருகருகே அமைத்து உருவான காட்சியில் புள்ளிகளை உணராத தொலைவில் பார்ப்பவர்களை உட்கார வைத்துவிடுவார்கள்.



அதே சமயத்தில் ஃபில்ம் அடிப்படையிலான புரொஜெக்‌ஷனில் நேரடியாக கோட்டினை வரைவது போல காட்சி இருக்கும், வெகு அருகே பார்த்தாலும் புள்ளி தெரியாது, புள்ளிகள் தெரிய வழக்கமான அளவை விட உருப்பெருக்கி காண வேண்டும்.

ஃபில்ம் புரொஜெக்‌ஷனிலும் முன்னால் அமர்ந்து பார்க்கும் தொலைவினை தீர்மானிக்க பார்வை கோண வீச்சுப்படி ஒரு அளவுண்டு.

ஏன் எனில் செங்குத்தில் 37 டிகிரி, கிடைமட்டத்தில் 45 டிகிரி கோணத்தில் தெரியும் காட்சியினை மட்டுமே மனிதர்கள் அதிக சிரமம் இல்லாமல் காண முடியும் என வரையறுத்துள்ளார்கள்.

செங்குத்து அச்சில் 37 டிகிரிக்குள் தெரிவதை மட்டுமே அண்ணாந்து ,அல்லது குனிந்து பார்க்காமல் இயல்பாக காண முடியும்.

அதே போல தலையை அல்லது கண்களை இடமும் வலமும் அசைக்காமல் கிடைமட்டத்தில் காண காட்சி 45 டிகிரி பார்வைக்கோணத்திற்குள் இருக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் பரந்த கோணத்தில் இருக்கும் காட்சியை தொடர்நது பார்த்துக்கொண்டிருந்தால் ,கண்களுக்கு அயர்ச்சி உண்டாகும். இதனால்  தான் திரையரங்கில் முன் வரிசையில் அமர்ந்து பார்த்தால் தலைவலி வருகிறது.

அமெரிக்காவில் MPAA இதற்கான வரையறைகளை எல்லாம் வகுத்துள்ளது, எனவே முன்வரிசையும் பார்வையாளர்கள் இயல்பான பார்வை கோணத்தில் இருக்குமாறு இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

இந்தியாவில் பெரிய ஸ்கிரீன் போட்டுவிட்டு ,முன் வரிசையையும் மிக நெருக்கத்தில் அமைத்திருப்பார்கள், பார்க்கிறவனுக்கு தலை வலிச்சால் என்ன வலிக்காட்டி என்ன :-))

MPAA விதிப்படி முன் வரிசை இருக்கைகள் திரையின் உயரத்தினை போல 2.6 மடங்கு தூரத்தில் இருக்க வேண்டும் என வகுத்துள்ளார்கள்.அந்த தொலைவில் அமர்ந்து காணும் பொழுது திரையின் மொத்த நீள,அகலப்பரப்பும் பார்வையாளரின் இயல்பான பார்வை கோண வீச்சில் இருக்கும், கண்களையையோ, தலையையோ அசைக்காமல் இயல்பாக காணலாம் என கணக்கிட்டுள்ளார்கள்.

எந்த தொலைவில் அமர்ந்து பார்ப்பது என்பதே காட்சியின் ரெசொல்யுஷனையும் தீர்மானிக்க பயன்படுகிறது என்பதை புள்ளி மற்றும் கோடு உதாரணத்தின் மூலம் புரிந்திருக்கும்.


(
திரையின் உயரத்தின் அடிப்படையில் இருக்கை)



ஒரு டிகிரி பார்வை கோணத்தினை 60 பாகமாக பிரிப்பார்கள் ஒரு பாகத்தினை ஒரு ஆர்க் மினிட் என்பார்கள். இதுவே கோணத்தின் சிறிய அளவு, எனவே ஒரு மினிட் கோணத்திற்கு எத்தனை பிக்சல்கள் இருந்தால்MPAA வ்ரையறுக்கப்பட்ட தொலைவில்  தோற்றம் தெளிவாக இருக்கும் என்பதை கணக்கிட்டு உள்ளார்கள்,


நம் பார்வை திறனை விளக்க காரணம் டிஜிட்டல் படமாக்கல், திரையிடலுக்கு எந்தளவு ரெசொலுஷன் இருந்தால் ஓரளவு தெளிவாக பார்க்க முடியும் எனக்கணக்க்கிடவே, ஏன் என்னில் நமது மனித கண்கள் 576 மெக பிக்சல் அளவுக்கு துல்லியமாக ஒளி உணரக்கூடியது என கண்டறிந்துள்ளார்கள். ஆனால் அந்த அளவுக்கு டிஜிட்டலில் கொண்டு வர முடியாது எனவே பார்வை திறனின் குறைந்த பட்ச எல்லையில் தெளிவாக காணக்கூடிய காட்சியினை டிஜிட்டல் மூலம் உருவாக்கி நமக்கு வழங்குகிறார்கள்.

அதாவது 1.75 மி.மீ தொலைவுக்குள்ளாக  இரண்டு பிக்சல்கள் இருக்குமானால் நாம் இரு புள்ளிகளுக்கிடையே இடைவெளியை உணர முடியாது என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஆகும்.

நம் பார்வை திறனுக்கு மிக குறைந்த பட்ச பிக்சல் திறனாக ஒரு பார்வைக்கோணத்திற்கு 60 பிக்சல்கள் காட்சியில் இருக்க வேண்டும் என கணக்கிட்டுள்ளார்கள் ,இதனை வழக்கமான ஃபில்ம் புரொஜெக்ஜனில் மிக எளிதாக கொடுக்க முடியும் ஏன் எனில் ஃபில்ம் எமல்ஷன் அடிப்படையிலானது என்பதால் பிக்சல் எனப்படும் புள்ளிகளே இல்லை, எனவே எந்த தூரத்தில் இருந்து பார்த்தாலும் புள்ளிகளை உணர முடியாது.

டிஜிட்டல் புரொஜெக்‌ஷனில் இதற்கு முன்னர் 2கே விற்கும் குறைவாகவே இருந்தது , தற்போது தான் 4கே புரொஜெக்‌ஷன் பயன்ப்பாட்டிற்கு வர துவங்கியுள்ளது.

2கே புரொஜெக்‌ஷன் என்பது நமது பார்வை திறனுக்கு தேவையான ஒரு டிகிரிக்கு 60 பிக்சலை தருவதில்லை. எப்படி எனப்பார்ப்போம்.

ஒரு 2கே காட்சி என்பது

செங்குத்தில் -1080 பிக்செல்கள்.

கிடைமட்டத்தில்- 1998 பிக்செல்கள் கொண்டிருக்கும்.

செங்குத்து அச்சில் உள்ள பிக்சல்களே திரையரங்க இருக்கை அமைவிடத்தை தீர்மாணிக்கும் என்பதாலும், காட்சி துல்லியத்திற்கு அதுவே முக்கியம் ஆகும்.

ஒரு டிகிரிக்கு கிடைக்கும் பிக்சல்கள்=1080/37 டிகிரி=29.18 பிக்சல்கள்

இது வழக்கமான பில்ம் புரொஜெக்‌ஷனில் கிடைக்கும் குறைந்த பட்ச பிக்சலான 60 ஐ விட வெகு குறைவு.

4k  டிஜிட்டல் புரொஜெக்டர்.

செங்குத்து அச்சில் =2060
கிடை மட்டத்தில் -4096

ஒரு டிகிரிக்கு= 2060/37=55 பிக்செல்கள்

4கேயில் கிட்டத்தட்ட ஒரு டிகிரிக்கு 60 பிக்சல்கள் என்ற குறைந்த பட்ச அளவுக்கு அருகில் வருகிறது.

மேலும் 2கே புரொஜெக்டரில் ஒரு சதுர அங்குலத்திற்கு கிடைக்கும் பிக்சல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் , இதனை பிக்சல் டென்சிடி என்பார்கள்.

2கே= 1080*1998 =2.157840 மெகாபிக்சல்களே மொத்த படத்தின் பிக்சல் அளவு.

4கே=2060*4096=8.437760 மெகா பிக்சல்கள் மொத்த படத்தில் அளவு ஆகும்.








2k and 4k pixel density comparison

இதனால் 4கே புரொஜெக்டரில் பிக்சல் டென்சிட்டி அதிகம் இருக்கும். தற்போது 8 கே அளவிற்கான புரொஜெக்டர்கள் தயாரிக்க முன்னணி நிறுவனங்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அம்முறை வந்துவிட்டால் துல்லியமான திரைப்படங்களை காண முடியும்.


திரையின் உயரம் மற்றும் புரொஜெக்டர் மாடலை பொறுத்து ஒரு டிகிரி பார்வைக்கோணத்திற்கு கிடைக்கும் பிக்சல்களின் குறைந்த பட்ச அளவு மாறு படலாம். பொதுவான வரையறுக்கப்பட்ட குறைந்த பட்ச பார்வை கோணத்திற்கு கணக்கிட்டுள்ளேன்.

நமது வெற்று கண்கள் மிக நுட்பமானவை என முன்னரே கூறியுள்ளேன் , .35 ஆர்க் மினிட் கோணத்திற்கு ஒரு பிக்சல் என்ற விகிதத்தில் நம் கண்கள் உணரக்கூடியது இதனால் தான் 120 டிகிரி பார்வை கோணத்தில் 576 மெகா பிக்சல்களை உணருகின்றது.

அவ்வாறு உண்மையில் நம் கண்கள் காணும் காட்சியானது மிக பெரிதாக கொஞ்சம் டிஸ்டார்டட் ஆக இருக்கும் அதனை நமது மூளையே சரியாக நமக்கு உணர வைக்கிறது. நம் கண்கள் பல காட்சி ,வண்ணம் ,ஒளி என ஒரே வினாடியில் பல முறை ஒரு காட்சியை ஸ்கேன் செய்து மூளைக்கு அனுப்பும் ,அவற்றை ஒன்றாக இணைத்து சரியான காட்சியை உணர செய்வது மூளையின் வேலை ஆகும்.

120 டிகிரி அகன்ற கோணத்தில் மனிதன் காண்பதை படம் பிடித்தால் இப்படித்தான் இருக்கும் .

படம்:



ஃபிரேம் ரேட்:

காட்சியை துல்லியமாக காண தேவைப்படும் பிக்செல்களின் அளவினைப்பார்த்தோம். அதே ஒரு காட்சி அசைவாக தெரிய தேவைப்படும் குறைந்த பட்ச பிரேம்களை பற்றி காணலாம்.

ஒரு காட்சியை சலனமாக காண குறிப்பிட்ட காட்சியின் படங்களை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நகர்த்தினால் முடியும் என தாமஸ் ஆல்வா எடிசன் கண்டறிந்தார், அப்படிக்காட்ட குறைந்த பட்சம் வினாடிக்கு 46 ஃபிரெம்கள்  தேவ்வை என அறிந்தார் ஆனால் அப்போது அது சாத்தியமில்லை என்பதால் ஒலியில்லாத நிலையில் குறைந்த பட்சம் 16 காட்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக நகர்த்தினால் சலனப்படமாக ஒரு காட்சியை காட்ட முடியும் என கண்டுபிடித்தார் ,இதன் அடிப்படையிலேயே அப்போது சலன படங்கள் உருவாக்கப்பட்டு திரையிடப்பட்டன.

இவ்வாறு தனி தனி காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக நகர்வதை ஒரு தொடர் இயக்கமாக நாம் பார்ப்பதற்கு காரணம் கண்ணின் பார்வை நிலைப்பு திறன் ஆகும், ஒரு காட்சி மறைந்த பின்னும் விழித்திறையில் 1/15வினாடி நேரம் அக்காட்சி நிலைத்திருக்கும், எனவே அதன் தொடர்ச்சியாக ஒரு காட்சி வரும் போது நமது மூளை ஒன்றினைத்து ஒரு இயக்கமாக பார்க்கிறது( illusion of continuity )

இதன் அடிப்படையில் ஒலியில்லாத காலத்தில் இப்படி தொடர் காட்சிகள் உருவாக 16 ஃபிரேம்களை கொண்டே சமாளித்து சலனப்படத்தினை உருவாக்கினார்கள். ஆனால் ஒலியுடன் படம் பிடிக்கும் போது 16  ஃபிரேம்களில் இயக்கத்தினை காட்டினால் ஒலி அதனுடன் ஒத்து போகவில்லை, ஒலி எந்த வேகத்தில் பயணிக்கிறதோ அதே வேகத்தில் பதியப்பட்டு அதே வேகத்தில் பிளே செய்யப்பட்டால் தான் தெளிவான ஒலி கிடைக்கும் , மாறு பட்ட வேகத்தில் இயக்கினால் கீச் என்ற சத்தம் தான் வரும், எனவே ஒலியின் அதிர்வெண்ணுக்கு ஏற்றார் போல ,காட்சியை பதிவு செய்து இயக்கலாம் என கண்டறிந்தார்கள் , அதற்கு முதலில் 22  ஃபிரேம்களில் இயக்கி ஓரளவு சரியாக வருவதை பார்த்தார்கள், பின்னர் 24 பிரேம்கள் என இயக்கி சரியான வேகம் என முடிவுக்கு வந்தார்கள்.

24 பிரேம்களில் பதிவு செய்து ,24 ஃபிரேம் வேகத்தில் புரொஜெக்டர் இயங்கினாலும் நமக்கு சரியான அசைவினை தடையில்லாமல் காட்ட அதிக பிரேம்கள் வருவது போல செய்ய ,புரொஜெக்டருக்கு முன்னால் 3 துளைகள் உள்ள ஷட்டரை வினாடிக்கு 72 சுற்றுகள் என சுழவிடுவதன் மூலம் ஒவ்வொரு ஃபிரேமும் 3 முறை மறைந்து தனி பிரேம் போல வேகமாக திரையில் விழும் , இதனால் ஒரே வினாடியில் 72 பிரேம்களை திரையில் வீழ்த்த முடிந்தது, மேலும் இப்படி செய்யாவிட்டால் ஒவ்வொரு பிரேமுக்கும் நடுவில் இருக்கும் கோடு நம் கண்களுக்கு தெரியும். இதனை ரெபரஷ் ரேட் என சொல்வார்கள்.

தற்கால கணினி , எல்.சிடி மானிட்டர்களில் உள்ள ரெபரெஷ் ரேட் இதனை தான் செய்கின்றது. ஹெச்.டி மானிட்டர்கள், தொலைகாட்சிகள் வினாடிக்கு 120 ரெபரஷ் ரேட் உள்ளவை, அதாவது வினாடிக்கு 120 முறை ஒரு காட்சியினை திரையில் காட்டுகின்றன எனலாம். இப்படி எல்லாம் செய்தால் தான் நமது மூளையை ஏமாற்றி ஒரு காட்சி அசைவாக தெரிகிறது என நம்ப வைக்க முடியும்.

உலகில் இயல்பாக நடக்கும் அசைவுகளை கண்டு உணரவே நமது கண்கள் உருவாக்கப்படுள்ளது எனவே அதனை போல மீண்டும் படம் பிடித்து அசைவை உருவாக்குவது கடினம் என்பதால் ஓரளவுக்கு இயல்பான அசைவுகள் என நம்பதகுந்த வகையிலேயே திரைப்படக்காட்சிகளை நமக்கு காட்டப்படுகின்றன என்பதை புரிந்து கொண்டால் போதுமானது.

இது வரை ஒரு சலன படத்தினை இயல்பான அசைவுகளுடன் காண தேவைப்படும் குறைந்த பட்ச அம்சங்கள் என்னவென பார்த்தோம் , அடுத்து டிஜிட்டல் புரொஜெக்டர்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என காணலாம்.
----------------------------------

டிஜிட்டல் புரொஜெக்‌ஷன்:




பழங்காலத்தில் இருந்து திரையிடப்பயன்ப்படுத்தப்பட்டு வந்த 35 மி.மீ ஃபில்ம் புரொஜெக்டரை அனலாக் புரொஜெக்டர் என்பார்கள். அதில் காட்சி வீழ்த்த 35 மி.மீ ஃபில்ம் பயன்ப்படுத்தப்பட்டு வந்தது, அதற்கு பதிலாக மின்னனு சிப்களை கொண்டு காட்சியினை வீழ்த்துவது டிஜிட்டல் புரொஜெக்டர் ஆகும்.

ஆரம்பத்தில் பிம்பத்தினை உருவாக்க சிறிய சிஆர்டி மானிட்டரை ஃபிலிமிற்கு பதிலாக பயன்படுத்தினார்கள், பின்னர் எல்.சி.டி மானிட்டர் பயன்படுத்தினார்கள், இவை எல்லாம் சிறிய அரங்கில் புரொஜெக்‌ஷன் செய்ய மட்டுமே பயன்படும்.தற்போது சி.ஆர்.டி புரொஜெக்டர்கள் வழக்கொழிந்துவிட்டன, எல்.சிடி புரொஜெக்டர்களும் மெதுவாக வழக்கொழிய துவங்கியுள்ளது.


LCD projector schematic pic

இப்பொழுது பெருமளவு புழக்கத்தில் உள்ள டிஜிட்டல் புரொஜெக்டர்கள்  DLP வகை ஆகும். இதற்கு அடுத்து சோனி நிறுவனம் தனியாக உருவாக்கிய  liquid crystal on silicon, என்ற தொழில்நுட்பம் ஆகும் இதனை சோனி SXRD (Silicon X-tal Reflective Display) என டிரேட் மார்க் செய்துள்ளது.

DLP(Digital light processing) technlogy :

தற்போது மிகப்பெரிய திரையில் டிஜிட்டலில் புரொஜெக்‌ஷன் செய்ய DLP(Digital light processing) technlogy அடிப்படையிலான புரொஜெக்டர்கள் பயன்படுகின்றன.இதனை டெக்சாஸ் இண்ஸ்ட்ருமென்ட்ஸ் எனப்படும் அமெரிக்க நிறுவனத்தினை சேர்ந்த  Dr. Larry Hornbeck  என்பவர் 1977 ஆம் ஆண்டு ஒளியின் பிரதிபளிப்ப்பை பற்றி ஆய்வு செய்யும் போது கண்டுபிடித்தார்,பின்னர் கி.பி. 1987 இல் முதல்  DLP புரொஜெக்டரின் மாதிரி வடிவம் உருவாக்கப்பட்டது.


 DLP புரொஜெக்டரில் digital micromirror device (DMD) எனப்படும் பல நுண்ணிய கண்ணாடிகளால் ஆன ஒரு சிப் இருக்கும், இதில் ஒரு சதுர அங்குலத்தில் 10 மைக்ரான் அளவுள்ள பல மில்லியன் கண்ணாடிகள் சுழலும் வகையில் உள்ளது.


Digital micro mirrors on DLP chip

ஒரு படத்தின் மின்னணு உள்ளீடூக்கு ஏற்ப நுண்ணிய கண்ணாடிகள் அச்சில் சுழன்று ஒளியை பிரதிபளிக்கவோ அல்லது பிரதிபளிக்காமல் விடவோ செய்யும்.இது ஒளிக்கு ஏற்ப ஆன்/ஆஃப் ஆவது போன்றதாகும்.

 DLP க்கு படத்தினை மின்னணு அலையாக மாற்றி அனுப்ப என ஒரு பிராசசர் இருக்கும், அது அனுப்பும் படத்தின் தன்மைக்கு ஏற்ப கருப்பு வெள்ளையில் ஒரு கிரே ஸ்கேல் இமேஜ் மட்டுமே  DLP சிப் மூலம் உருவாக்கப்படும் ,பின்னரே அதற்கு வண்ணம் அளிக்க வேண்டும்.

பொதுவாக அனைத்து படங்களும் சிவப்பு, பச்சை, நீலம் எனப்படும் அடிப்படை நிறங்களின் கலவையால் உருவானது எனவே இம்மூன்று வண்ணங்களில் ஒரு படத்திற்கு தேவையான அளவு அளித்து ஒரு வண்ணப்படத்தினை உருவாக்கிடலாம்.

டிஜிட்டல் முறையில் சிவப்பு, பச்சை ,நீலம் என மூன்று வண்ணங்களிலும் ஒரே கட்சியின் பிம்பம் மீது அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டு அதனை நம் கண்கள் தனித்து உணராதவாறு செய்யப்படுகிறது.

old LCD projector with separate Red,Green,Blue projection.

இவ்வாறு செய்ய ஒரு வெள்ளை நிற ஒளி மூலத்தினை , சிவப்பு,பச்சை, நீலம் என வண்ணங்கள் கொண்ட சுழலும் சக்கரம் மூலம் செலுத்தினால் அடிப்படை நிறங்கள் மூன்றும் மாறி மாறி கிடைக்கும், இதனை  DLP சிப் இல் தோன்றும் கிரே ஸ்கேல் இமேஜ் மீது செலுத்தி கிடைக்கும் மூன்று வண்ண காட்சியை ஒன்றாக குவித்து ஒரு புரொஜெக்‌ஷன் லென்ஸ் வழியாக திரையில் வீழ்த்தினால் ஒரு வண்ணப்படம் திரையில் தோன்றும்.

ஆரம்பகாலத்தில் சுழலும் மூன்று வண்ணச்சக்கரம் ஒரு வினாடிக்கு 60 சுற்றுகள் சுழலுமாறு வடிவமைக்கப்பட்டது ,இதனால் ஒவ்வொரு கலரிலும் 20 ஃபிரேம்கள் ஒரு வினாடிக்கு உருவாகும் , இவை அனைத்தும் ஒன்றாக குவித்து திரையில் வண்னப்படம் உருவாக்கப்பட்டது , இம்முறையில் 16.7 மில்லியன் வண்ணங்களின் கலவை உருவாக்க முடியும். ஆனாலும் மனித கண்கள் மிக நுட்பமானவை என்பதால் ஒரு வினாடியில் மூன்று வண்ணங்களும் மாறி மாறி திரையில் உருவாவதை சில நேரங்களில் கவனிக்க வல்லவை அப்படி தொடர்ச்சியாக மாறும் வண்ணங்களை கவனிப்பதால் ஒரு வானவில் போன்ற வண்ண நிறமாலையை உணர்வார்கள்.

வழக்கமாக இதனை எல்.சிடி மானிட்டர்களில் ஓரமாக பார்த்தால் பல வண்ணம் ஒன்றன் மேல் ஒன்றாக ஒரு நிறமாலையாக தெரிவதை காணலாம். எல்.சிடி, மானிட்டர்களும் இப்படி அடிப்படை நிறத்தினை தொடர்ச்சியாக பிம்பத்திற்கு கொடுத்தே வண்ணங்களை உருவாக்குகிறது.

டிஜிட்டல் புரொஜக்‌ஷன் தியேட்டர்களிலும் பார்வை கோணத்தினை மாற்றி ,விளிம்புகளில் பார்த்தால் பல வண்ணங்களை தனியாக காணலாம், அல்லது கண்களை வேகமாக இமைத்து விட்டு திடீர் என பார்த்தால் திரையில் வண்ணம் மாறுவதை பார்க்க முடியும்.

பழைய எல்.சிடி புரொஜெக்டர்களில் மூன்று வண்ணங்களுக்கு என மூன்று லென்ஸ்கள் மூலம் காட்சி வீழ்த்தப்படுவதை நீங்கள் பார்த்திருக்க கூடும், தற்போது மூன்று வண்ணங்களும் புரொஜெக்டருக்குள்ளாக  ஒரு DLP சிப்பின் மீது வீழ்த்தப்பட்டு அதில் பிரதிபலிப்பதை குவித்து ஒரே புரொஜெக்‌ஷன் லென்ஸ் மூலம் திரையில் வீழ்த்தப்படுகிறது. இதனை சிங்கில்  DLP சிப் புரொஜெக்டர்கள் என்பார்கள். ஆரம்பத்தில் .75 மெகா பிக்சல் அளவிலும் ,பின்னர் 2கே பிக்சல் அளவிலும் உருவாக்கப்பட்டுள்ளன.தற்போது 4கே வரையில் கிடைக்கின்றன.


 single chip DLP projector

single chip DLP புரொஜெக்டர்களில் அவ்வப்போது உணரப்படும் வானவில் விளைவை நீக்க வண்ணங்களை அளிக்கும் சக்கரத்தின் வேகத்தினை இரு மடங்காக 120 சுழற்சிகள் என மாற்றிவிட்டார்கள், இது வண்ணங்களை ரெப்ரெஷ் செய்யும் வேகம் ஆகும்.

ஃப்ரேம் ரேட் வேறு ,ரெப்ரெஷ் ரேட் என்பது வேறு என்பதை நினைவில் கொள்ளவும், ஃபிரேம் ரேட்டில் ஒவ்வொரு பிரேமும் ஒரு காட்சி என 24 ஃபிரேமும் ஒரு தனித்துவமான காட்சி, ஆனால் ரெப்ரெஷ் ரேட்டில் ஒவ்வொரு தனித்துவமான காட்சியும் மூன்று முறை ,மூன்று கலரில் தோன்ற செய்து ஒரே வினாடியில் 120 முறை தோன்ற செய்வது.


3 DLP chip projector


மேலும் மிக அதிக துல்லியமான வண்ணக்கலவையை உருவாக்க ஒவ்வொரு வண்ணத்திற்கும் என தனி  DLP சிப் பயன்படுத்தி 3  DLP சிப் புரொஜெக்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் 35 டிரில்லியன் வண்ணங்களின் கலவையை உருவாக்க முடியும் என்பதால் இயல்பான படக்காட்சிகள் கிடைக்கிறது. தற்போது சந்தையில் கிடைக்கும் 4கே புரொஜெக்டர்கள் இத்தகைய மாடல்களே.

--------------
DLP technology மிக நுண்ணியது என்பதால் இதன் மூலம் மிக சிறிய புரொஜெக்டர்களும் தயாரிக்க முடியும்,  பாக்கெட் புரொஜெக்டர் எனப்படும் பிகோ புரொஜெக்டர்கள் டிஎல்பி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவையே. இப்பொழுது பல மொபைல் போன்களிலும் டிஎல்பி புரொஜெக்டர்கள் உள்ள மாடல்கள் கிடைக்கிறது.

ஸ்பைஸ், மைக்ரோ மேக்ஸில் 5000-6000 ரூபாய்க்கெல்லாம் புரொஜெக்டர் மொபைல் போன்கள் கிடைக்கிறது.


ஸ்பைஸ் பாப்கார்ன்-9000 புரொஜெக்டர் மொபைல்.
----------------------------------------

டிஜிட்டல் டிஸ்ட்ரிபியுஷன்:

வழக்கமான 35 மி.மீ படச்சுருளில் படம் எடுக்கப்பட்டு பின்னர் அதனை 35 மி.மீ படச்சுருளில் பிரிண்ட் போட்டு ,திரையரங்குகளுக்கு அனுப்பி அனலாக் புரொஜெக்டர் மூலம் காட்சி செய்வார்கள்.

ஒரு திரைப்படத்தினை  படச்சுருளில் பிரிண்ட் போட டிஜிட்டல் பிரிண்டினை விட அதிக செலவாகும், ஒரு பிரிண்ட் போட 1500 டாலர்கள் (75,000 ரூ) ஆகும், ஹாலிவுட்டில் பெரும்பாலும் ஒரே படத்திற்கு 4000-5000 பிரிண்ட்கள் எல்லாம் போடுவதுண்டு , எனவே பிரிண்ட் போடவே பல மில்லியன்கள் செலவாகும், ஹாலிவுட்டில் பிரிண்ட்  போட சராசரியாக பயன்ப்படுத்தப்பட்ட படச்சுருளின் நீளம் ஆண்டுக்கு 13 billion feet of film  (3,962,400 km) இது தோராயமாக நிலவுக்கும் பூமிக்கும் இருக்கும் தூரம் போல ஐந்து மடங்கு ஆகும். இவ்வளவு  படச்சுருளுக்கு ஆகும் செலவு எவ்வளவு பெரிய தொகையாக இருக்கும் என்பதை  புரிந்து கொள்ளலாம், இதனாலேயே ஹாலிவுட் பட நிறுவனங்கள் டிஜிட்டல் பிரிண்டினை  விரும்பி பயன்ப்படுத்துகின்றன.

மேலும் படச்சுருள் மூலம் திரையிடப்படும் போது முதல் காட்சியில் பார்த்தது போல 50 ஆவது நாளில் தெளிவாக இருக்காது எனவே அதிக நாட்கள் ஓடும் படத்திற்கு மீண்டும் ஒரு பிரிண்ட் போட வேண்டும்.

ஒரு 12 ரீல் படத்தின் எடை சுமார் 35 கிலோ இருக்கும், அவற்றை கையாள்வது, கொண்டு செல்வது, திரையரங்கில் தடையின்றி திரையிடுவது அனைத்திற்கும் அதிக உழைப்பு தேவை. மேலும் செலவும் அதிகம் ஆகும், இதனை எல்லாம் குறைக்கவே டிஜிட்டல் புரொஜெக்‌ஷனை ஹாலிவுட் பட நிறுவனங்கள்  விரும்பி பயன்ப்படுத்துகின்றன.

2013-14 க்கு பிறகு ஹாலிவுட்டில் எந்த படத்தையும் படச்சுருளில் வெளியிடுவதில்லை என  படத்தயாரிப்பு நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. இதற்காக Digital cinema Initiative(DCI)    என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளனர். அவர்களே டிஜிட்டல் சினிமா மற்றும் புரொஜெக்‌ஷனுக்கான தர நிர்ணய அமைப்பாக தற்போது விளங்குகிறார்கள். இவர்களின் முயற்சியால் அமெரிக்காவில் 80% சதவீத திரையரங்குகள் டிஜிட்டலாக மாறிவிட்டன, மீதம் உள்ளவையும் டிஜிட்டலாக மாறவில்லை எனில் அவ்வரங்குகளுக்கு பட விநியோகம் செய்ய மாட்டார்கள் என அறிவித்துள்ளார்கள்.

டிஜிட்டல் பிரிண்ட்:

35 மி.மீ படச்சுளில் படம் எடுக்கப்பட்டிருந்தால் அதனை டெவெலப் செய்து எடிட் செய்த பின் அதனை டெலிசினி அல்லது ஸ்கேனர் முறையில் டிஜிட்டல் வடிவமாக மாற்றுவார்கள் , இதனை டிஜிட்டல் இண்டர் மீடியேட் என்பார்கள்,எடிட் செய்த தில்  ஒளி,ஒலி அனைத்தும் ஒன்றாக இணைந்த டிஜிட்டல் பிரிண்டை  டிஜிட்டல் மாஸ்டர் காபி என்பார்கள்,வழக்கமான 35 மி.மீ படச்சுருள் எனில் டபுள் பாசிட்டிவ் என்பார்கள் அல்லது ஆங்கிலத்தில் "married film" என்பார்கள். இதனை 2கே அல்லது 4கே அளவுக்கு  செய்து விநியோகிக்க தக்கதாக ஹார்ட் டிஸ்கில் பதிவு செய்யப்பட்டதை Digital Cinema Package(DCP) என்பார்கள்.

இந்தியாவில் படச்சுருளில் எடுக்கப்பட்ட படமானாலும்  Red one,EPIC,Sony F65 போன்ற  4K  டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் இறுதியில் திரையிட 2கே அளவிலேயே டிஜிட்டலாக மாற்றுவது வழக்கம்,இது வரை இந்திய மொழி படம் எதுவும் 4கே  டிஜிட்டலில் வரவில்லை,எனவே 4கே புரொஜெக்டரில் பார்த்தாலும் பெரிய வித்தியாசம் இருக்காது, ஹாலிவுட் படங்களின் 4K DCP PRINT பார்க்கும் போது வேண்டுமானால் வித்தியாசம் உணரலாம்.

 இதில்  MXF (Material eXchange Format) files and playlist/index XML files வடிவில் படம் பதியப்பட்டிருக்கும். டிசிஐ தரத்தின் படி 2K resolution up to 60 fps, 4K resolution up to 30 fps, and 2K 3D at 48 fps. என ஜெபெக்2 வடிவில் வீடியோ காட்சிகள் பதியப்பட்டிருக்கும்.

ஒலியானது MXF files வடிவில் standard WAV ஃபார்மேட்டில்  24-bit sampling rate இல் 48 or 96KHz. இல் பதியப்படும். தற்போதுள்ள வடிவில்  12 separate audio channel களை டிசிபி யில் பதியலாம். மொத்த  டிஜிட்டல் பிரிண்ட்டின் அளவு  படத்ததின் நீளத்தை பொறுத்து 200-300 ஜிபி இருக்கும். இதனை ஹார்ட் டிஸ்க் வடிவில் திரையரங்களுக்கு அனுப்புவார்கள், அல்லது சேட்டலைட் இணையம் மூலமும் அனுப்புவார்கள் ,ஆனால் பெரும்பாலும் அப்படி செய்வதில்லை, சேட்டலைட் மூலம் அனுப்பும் பிரதி சரியாக வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது என பேக் அப்பிற்கு ஒரு ஹார்ட் டிஸ்க் அல்லது புளு ரே டிவிடியும் அனுப்ப வேண்டும் என்பது விதி ,எனவே இரட்டிப்பு செலவு என நேரடியாக ஹார்ட் டிஸ்க்கினை அனுப்புவது வழக்கம்.

QUBE,UFO,PXD என்றால் என்ன?

QUBE,UFO,PXD  என பல திரையரங்குகளிலும் போட்டிருப்பார்கள் , இவை எல்லாம் டிஜிட்டல் சினிமா டிஸ்ட்ரிபுஷன் நிறுவனத்தின் பெயர்கள், மற்றும் அவர்கள் பயன்படுத்தும் டிஜிட்டல் சினிமா செர்வர்களின் பெயர் ஆகும்.

டிஜிட்டல் புரொஜெக்டர் என்பது ஒரு "Digital Optical Instrument" அது படத்தினை மட்டுமே உருவாக்கும் ஒரு DCP மீடியா ஃபைலை இயக்காது , அதனை இயக்க ஒரு Integrated media Block(IMB) எனப்படும் மீடியா பிளேயர் தேவை, இவற்றை நெட் ஒர்க்கில் இணைத்து டிஜிட்டல் சினிமா செர்வராகவும் பயன்ப்படுத்தலாம், ஒரே IMB இல் 5 டிஜிட்டல் புரொஜெக்டர் வரைக்கும் இணைத்து இயக்கலாம்.மேலும் IMB யை சேட்டலைட் மூலம் இணைத்து வெளியில் உள்ள மீடியாவை டவுன் லோட் செய்தும் டிஜிட்டல் புரொஜெக்டர் மூலம் திரையிடலாம், எனவே தான் டிஜிட்டல் சினிமா செர்வர் அல்லது IMB எனப்படுகிறது. ஒரு IMB என்பது கணினி , டிஜிட்டல் புரொஜெக்டர் என்பது டிஸ்பிளே யூனிட்(மானிட்டர்) எனலாம்.

QUBE,UFO,PXD   என்பது IMB களின் பெயர் , இவற்றோடு புரொஜெக்டரை இணைத்து இயக்க வேண்டும். மேலும் இவர்களே புரொஜெக்டர், இன்னபிற டிஜிட்டல் திரையரங்க கருவிகளையும் வழங்குவதுண்டு.

QUBE,UFO,PXD   ஆகிய நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்க டிஜிட்டல் கருவிகளை தங்கள் செலவில் திரையரங்குகளுக்கு அமைத்து கொடுக்கிறார்கள், பின்னர் போட்ட முதலீட்டினை எடுக்க திரையரங்கில் ஒளிபரபப்படும் விளம்பர உரிமை மற்றும் Virtual Print Fee or pay per show என்ற அடிப்படையில் கட்டணம் வசூலித்துக்கொள்வார்கள்.

Virtual Print Fee  என்பது ஒரு முறை மட்டும் ஒரு தொகையை வசூலிப்பது , ஒரு டிஜிட்டல் பிரிண்டுக்கு ரூ 7000-10000 ஆகும்,

 pay per show  முறையில் ஒரு காட்சிக்கு திரையரங்கை பொறுத்து 300 ரூ முதல் வசூலிக்கிறார்கள், இம்முறையில் ஒரு படம் 100 நாள் ஓடினால் ஒரு லட்சத்திற்கு மேல் கட்டணம் கொடுக்க வேண்டியதாகிவிடும்,இது படச்சுருளை விட அதிக கட்டணம் ஆகும், ஆனால் இம்முறையில் படம் வெளியிடும் போது பணம் கொடுக்க தேவையில்லை என்பதால் சிறிய படத்தயாரிப்பாளர்கள் பயன்ப்படுத்திக்கொள்வார்கள்.

 மேலும் QUBE,UFO,PXD  ஆகியவை ஆளுக்கு ஒரு தனி கம்பிரஷன் ஃபார்மேட், என்கிரைப்ஷன் என பயன்ப்படுத்துகிறார்கள், எனவே QUBE டிஜிட்டல் பிரிண்ட் ,UFO, வில் இயங்காது  UFO, பிரிண்ட் PXD இல் இயங்காது .இப்படி இவர்கள் செய்ய காரணம் ஒவ்வொருவரும் பணம் முதலீடு செய்து தியேட்டர்களை டிஜிட்டல் செய்துள்ளார்கள், அவர்களிடமே டிஜிட்டல் பிரிண்ட் போட வர வேண்டும் என்றே இப்படி செய்கிறார்கள். ஆனால் உலக அளவில் டிசிஐ வகுத்தது டிசிபி ஃபார்மேட் மட்டுமே.

QUBE,UFO,PXD  ஆகியவை டிசிஐ தரத்தில் இல்லை என்பதாலே தனி ஃபார்மேட்கள் ,என்கிரைப்ஷன் என பயன்ப்படுத்துகிறார்கள். இவர்கள் பயன்ன்படுத்தும் தரத்தினை பொதுவாக E-Cinema , என்பார்கள்.  உலக அளவில் DCI  தரத்தில் DCP முறையில் வெளியிடும் சினிமாவை D Cinema என்பார்கள் ,அவ்வாறு வெளியிடும் திரையரங்குகள்  I- certified  அரங்குகள் எனப்படும்.

UFO  (UFO movies india ltd ,mumbai ).75 மெகா பிக்சலில் கம்பரஸ் செய்து ஈ.சினிமாவாக வெளியிடுகிறது.

QUBE,-(Real image India ,chennai,mumbai ) 1-1.2 5 மெகா பிக்சலில் கம்பிரஸ் செய்து ஈ.சினிமாவாக வெளியிடுகிறது.

UFO  வை இயக்குவது UFO movies india ltd ,mumbai ,QUBE, ஐ இயக்குவது -Real image India ,chennai,mumbai  ஆகிய நிறுவனங்கள் ஆகும், இந்த இரண்டு நிறுவனங்களின் பெருமளவு பங்குகளை ரிலையன்ஸ் ஆட்லேப்ஸ் வாங்கி விட்டது .

PXD (Prasad Xtreme Digital) என்பது சென்னையில் உள்ள பிரசாத் லேப்ஸின் நிறுவனம் ஆகும். - 1-1.25 மெகா பிக்சலில் கம்பிரஸ் செய்து  ஈ.சினிமாவாக வெளியிடுகிறது.

ஈ-சினிமா ஃபார்மேட்டில் படத்தின் பிரதியானது MPEG-4  வடிவில் இருக்கும் அதிக பட்ச பிக்சல் தரம் 1.25 கே மட்டுமே இருக்கும்., இது வழக்கமான DTH TV  ஒளிபரப்பும் பட தரத்திலானது , இதற்கு அதிக பட்சமாக  Band width 1.2 Mbps மட்டுமே போதும்  எனவே எளிதில் சேட்டலைட் இணையம் மூலம் அனுப்பலாம்.



தமிழகத்தில் உள்ள டிஜிட்டல் அரங்களின் எண்ணிக்கை சுமார் 700 இருக்கலாம் என்கிறார்கள், இதில் UFO 226 அரங்குகளும், QUBE சுமார் 300 அரங்குகளும் ,புதிதாக சந்தைக்கு வந்த பிரசாத் லேப்சின் PXD 100 அரங்குகளுக்குள்ளாக கைவசம் வைத்துள்ளன. படச்சுருள் பிரிண்ட் வியாபாரத்தின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை என்பதால் டிஜிட்டல் பிரிண்ட் தொழிலில் அனைவரும் போட்டியிடுகின்றனர்.

இந்நிறுவனங்கள் தாங்களே முன் வந்து பல தியேட்டர்களை சொந்த செலவில் டிஜிட்டல் செய்வதன் நோக்கம்  டிஜிட்டல் பிரிண்ட் போடும் வாய்ப்பு  மற்றும் பட விநியோக உரிமை யார் பெற்றிருந்தாலும் டிஜிட்டல் டிஸ்ட்ரிபியுஷன் வாய்ப்பு அதிக தியேட்டர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்கு வரும் என கணக்கிட்டே இவ்வாறு செய்கிறார்கள்.

எனவே திரையரங்குகளில் 2கே அல்லது 4கே புரோஜெக்டரை அவர்களே வாங்கி வைத்திருந்தாலும் மேற்கண்ட டிஜிட்டல் டிஸ்ட்ரிபுஷன் மூலம் வெளியிட்டால் 2கேவுக்கு குறைவான ரெசொலுஷனில் தான் படம் தெரியும்.

2கே அல்லது 4கே யில் தரமாக திரைப்படம் திரையிட வேண்டும் என விரும்பினால் 2கே ஹார்ட் டிஸ்க் பிரிண்டினை கேட்டு பெற்று திரையரங்குகள் வெளியிட வேண்டும், சில திரையரங்குகள் மட்டுமே அப்படி செய்வதாக தகவல்.

  MPEG-4 Format E-Cinema வடிவில் கம்பிரஸ் செய்யப்பட்ட பிரிண்ட்களை தான் தற்போதுள்ள  இணைய வேகத்திற்கு  அனுப்புவது எளிது , கம்பிரஸ் செய்யாமல் முழு 2கே டிசிபி ஃபைலையும் இணையத்தில் அனுப்ப வேண்டும் எனில் minimum 250 ,Mbps Internet speed தேவை தற்சமயம் அது சாத்தியமில்லை.

 இப்படி இணையம் மூலம் அனுப்பினாலும் ஒவ்வொரு காட்சிக்கும் ஸ்ட்ரீம் செய்வதில்லை ,ஒரு முறை டவுன் லோட் செய்து ஹார்ட் டிஸ்கில் பதிவு செய்து கொண்டு , பின்னர் அதை வைத்து தொடர்ந்து இயக்க வேண்டும், மீடியா பிளாக்கில் உள் நினைவகமாக சுமார் ஒரு டெரா பைட் அளவுக்கு ஹார்ட் டிஸ்க் உள்ளது, அதில் சேமித்து கொள்வார்கள் அல்லது ஒரு எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்கில் சேமிப்பார்கள். இப்படி சேமிக்கப்பட்ட டிஜிட்டல் பிரிண்டை இயக்க டிகிரப்ஷன் கீ தேவை  இதனை  ஒவ்வொரு காட்சிக்கும் முன்னர் என்கிரைப்ஷன் கீ மட்டும் சம்பந்தப்பட்ட டிஜிட்டல் டிஸ்ட்ரிபுஷன் செர்வரில் இருந்து டவுன் லோட் செய்ய வேண்டும், இதன் மூலம் எத்தனைக்காட்சிகள் இயக்கப்பட்டன என்பதையும், திருட்டு டிவிடி தயாரிப்பதும் தடுக்கப்படும்.

மீடியா பிளாக், டிஜிட்டல் புரொஜெக்டர், என்கிரப்ஷன் கீ என அனைத்து வேலைகளையும் ஒரு லேப் டாப், அல்லது கணினி கொண்டு எளிதில் Theatre Management System(TMS) மூலம் கட்டுப்படுத்தலாம், மேலும் மொபைல் போன் மூலம் கூட மீடியா பிளாக்கினை கட்டுப்படுத்தி திரைப்படம் காட்ட முடியும்.

மீடியா பிளாக் கண்ட்ரோல் பேனல்:


சர்வதேச டிசிஐ தரமான குறைந்த பட்ச டிஜிட்டல் ரெசல்யுஷன் 2கே வை விட குறைவாக இந்தியாவில் படங்கள் திரையிடப்படுவதை தடை செய்ய கோரி ஆந்திராவில் பொது நல வழக்கு போடப்பட்டு நிலுவையில் உள்ளது.

டெக்கான் குரோனிக்கல் செய்தி:

Cheated!

July 13, 2012 By B.V.S. Prakash DC
The International Standard Organisation says only resolutions of 2,000 megapixels are appropriate for the big screen and anything lesser is simply bad to the human eye. But in Andhra, with one of the largest film industries, there are only three digital projectors available — UF0, Qube and PXD, and their resolutions are… wait for it… 720 MP, 1080 MP and again, just 1080 MP!

DC has found that the quality of films being screened at theaters across the state is just DVD quality — the very same you get in your living rooms! And at a time when Tollywood’s film-makers are fighting piracy, moviegoers are being cheated with bad quality screenings.


http://www.deccanchronicle.com/tabloid/hyderabad/cheated-031
---------------------------------

Barco 4k projector


Sony ,BARCO ,Christie,NEC ஆகியவை 4கே புரொஜெக்டர்களை தயாரித்து வழங்குவதில்  முன்னணியில் உள்ளன. தமிழ் நாட்டில் சென்னை சத்யம் தியேட்டர்ஸ்,மதுரை குரு தியேட்டரில்  Sony CINIALTA-SRXD  4கே புரொஜெக்டர்களை நிறுவியுள்ளன. மேலும் மதுரை தங்க ரீகல் தியேட்டரில் பார்கோ 4கே புரொஜெக்டருடன் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 7.1 டால்பி ஒலி அமைப்பும் நிறுவியதாக செய்திகள் சொல்கின்றன.தமிழ் நாட்டில் வெகு சில 4 கே புரொஜெக்டர்கள் புழக்கத்தில் இருந்தாலும் டிஜிட்டல் டிஸ்ட்ரிபியுட்டர்கள் 2கே விற்கு குறைவாகவே படங்களை வெளியிடுவதால் பெரும்பாலும் குறைவான ரெசொல்யுஷனில் தான் நாம் படம் பார்க்க வேண்டியதாக இருக்கும். தியேட்டர் அதிபர்கள் தங்கள் புரொஜெக்டருக்கு ஏற்றவாறு 4கே அளவுக்கு பிரிண்ட் கேட்டாலும் கிடைக்காது அதிக பட்சம் 2 கே வில் தான் பிரிண்ட் போடும் வசதி இந்தியாவில் உள்ளது.

இந்தியாவில் மொத்தம் சுமார் 12,600 திரையரங்குகள் உள்ளதாகவும் அவற்றில் 7000 திரையரங்குகள் டிஜிட்டல் ஆக மாற்றப்பட்டுள்ளது என்றும் அவற்றில் சுமார் 400 அரங்குகளே 2கே அல்லது அதற்கு மேல் திரையிடும் வசதியுள்ளவை என டிசிஐ சான்றளிக்கப்பட்டுள்ளது.Scrabble என்ற நிறுவனமே 2கே அல்லது அதற்கு மேம்பட்ட டிஜிட்டல் பிரிண்ட் அளிக்கும் வசதியினை பெற்றுள்ளது என்கிறார்கள், இதனையும் ரிலையன்ஸ் ஆட் லேப்ஸ் வாங்கியுள்ளது.

ஹாலிவுட்டில் கூட நூற்று சொச்சம் படங்கள் அளவிலேயே 4கே பிரிண்ட் போடப்பட்டுள்ளது. தற்போது வந்த ஜேம்ஸ் பாண்ட் படம் skyfall 4k வில் பிரிண்ட் போடப்பட்ட படம் ஆகும்.

ஹாலிவுட்டில்  இதுவரை 4கேவில் வெளியான படங்களின் பட்டியலை சோனியின் இணைய தளத்தில் காணலாம்.

http://pro.sony.com/bbsc/ssr/mkt-digitalcinema/resource.latest.bbsccms-assets-mkt-digicinema-latest-Sony4KDigitalCinemaTitles.shtml#2012

------------------------------

பின் குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி:

http://www.dlp.com/cinema/

http://pro.sony.com/bbsc/ssr/mkt-digitalcinema/mkt-digitalcinemaprojectionsystems/#

http://www.barco.com/en/products-solutions/projectors/digital-cinema-projectors?gclid=CM_BmKGVsLMCFY4a6wodqSUANw

http://pxdnet.com/

http://www.extremetech.com/extreme/128963-how-digital-technology-is-reinventing-cinema

http://en.wikipedia.org/wiki/Visual_acuity

மேலும் விக்கி, கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
-----------------------