Sunday, December 16, 2012

சினிமா ரகசியம்-5:வியாபார தந்திரம்.


 (அய்யோடா...புள்ளிவிவரத்தோட கிளம்பிடான்யா..கிளம்பிட்டான்)


DTH இல் முதன் முறையாக ரிலீஸ்,Barco Auro-3D Sound,3000 பிரிண்டுகள் என்றெல்லாம் பிரமாண்டமாக கதைக்கிறார்கள், அதை எல்லாம் கேட்கும் போது தமிழ் சினிமா எங்கேயோ போய்விட்டது என சாமானிய ரசிகர்கள் வாய் பிளக்கிறார்கள், உண்மையில் தமிழ் சினிமாவின் வியாபார வீச்சு எந்த அளவுக்கு உள்ளது, சொல்வது போல செயலில் காட்டுவது சாத்தியமா என அலசுவதே இப்பதிவின் நோக்கம்.

முதலில் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளின் நிலவரத்தினைப்பார்ப்போம்.

தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளின் மொத்த எண்ணிக்கை நிலவரம்.As per tn govt revenue department stats.

ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகளைக்கொண்ட பன்னரங்குகளின் எண்ணிக்கையும் இதில் அடக்கம் என நினைக்கிறேன்.

CINEMA THEATRES IN TAMIL NADU:

2010-11

Permanent -1085

Open Air Theatres-5

 Semi Permanent-75

Touring Theatres-32

Total=1,197

http://www.tn.gov.in/deptst/Tnataglance.htm#CINEMA THEATRES

இதில் பெருநகரம்,நகரம், சிற்றூர் வாரியாக திரையரங்குகளின் பரவலை காணலாம்.

மெட்ரோ-1 :சென்னை

மாநகராட்சி-9

திருச்சி,மதுரை,கோவை,சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, ஈரோடு,திருநெல்வேலி.

சென்னை மாநகர எல்லைக்குள் மட்டும் சுமார் 40 அரங்குகள் தேறினாலே அதிகம், எனவே 40 எனக்கொள்வோம்.

மற்ற ஒன்பது மாநகர எல்லைக்குள் தலா 20 எனக்கொண்டால், மொத்தம் 180 அரங்குகள்.

எனவே மாநகரப்பகுதிகளில் உள்ள அரங்குகள் மொத்தம் -220

நகராட்சி -150

செங்கல்பட்டு,காஞ்சிபுரம் ,கடலூர் போன்ற ஊர்கள் ஆகும்.

மறைமலைநகர் போன்ற நகராட்சிகளில் தியேட்டர்களே கிடையாது.

நகராட்சி வகை ஊர்களில் ஒரு ஊருக்கு சுமார் 4- 5 அரங்குகள் இருக்கலாம், தோராயமாக 4 என வைத்துக்கொண்டால் ,

4*150= 600 அரங்குகள்.

டவுன் பஞ்சாயத்து-559

கூடுவாஞ்சேரி, வளசரவாக்கம் போன்றவை எல்லாம் டவுன் பஞ்சாயத்துகள் ஆகும், பெரும்பாலான இடங்களில் தியேட்டர்கள் இருக்காது, அப்படி இருக்கும் பல திரையரங்குகளில் புதியப்படம் வெளியாவதில்லை.

செமி பெர்மனண்ட் தியேட்டர் 75 இருப்பதாக பார்த்தோமே அவை இங்கு இருக்கலாம்.

இன்னும் சில டவுன் பஞ்சாயத்துகளில் ஓரளவு நல்ல தியேட்டர்கள் இருக்கலாம், ஆனால் புது படம் வெளியாவது வெகு அறிதே, அப்படியும் புதுப்படங்கள் வெளியாகும் வகையில் சுமார் 150 அரங்குகள் இருக்கலாம் என வைப்போம்.

கிராம பஞ்சாயத்து-12,524

இங்கு டூரீங்க் கொட்டகை போன்றவையே இருக்கும், அதும் அழிந்து தற்சமயம் 32 மட்டுமே இருக்கிறது.

(the show over-end of the entertainment)

டிஜிட்டல் மயமான திரையரங்குகளின் எண்ணிக்கை:

qube theatres-510

http://www.qcn.in/theatres/Tamil-Nadu

UFO theatres -242

http://www.ufomoviez.com/UFO_Presence.aspx?mode=state

தமிழகத்தில் உள்ள 1,197 அரங்குகளில் மொத்த டிஜிட்டல் அரங்குகள்எண்ணிக்கை=510+263=773.

இவற்றில் புதிய படங்கள் வெளியிட வாய்ப்புள்ள திரையரங்குகள்:

மாநகரம்=220

நகரம்=600

டவுன் பஞ்சாயத்து= 150

மொத்தம்= 970

ஆனால் அனைத்து தியேட்டரிலும் ஒரே படத்தினை வெளியிட இயலாது, ஒரு நகரில் 4 அரங்குகள்  இருந்தால் ஒன்றில் தான் வெளியிடுவார்கள், முதல் சில நாட்கள் மட்டும் ஒரே நகரில் இரண்டு அரங்குகளில் ஷேரிங்கில் வெளியிடும் வழக்கம் உண்டு, அது ஓப்பனிங் வாரத்திற்கு மட்டுமே இருக்கும் எனலாம்.

எனவே ஒரே ஒரு புதிய படம் அதிகப்பட்சம் எத்தனை அரங்கில் தமிழ்நாட்டில் வெளியாக வாய்ப்புள்ளது எனப்பார்ப்போம்.

மாநகராட்சியில் 220 அரங்கு எனில் அதில் சுமார் 100 அரங்குகள் என கொள்ளலாம்.

நகரப்பகுதியில் நகருக்கு ஒன்று என கொண்டால் -150

இரண்டு அரங்கு எனில் 300

டவுன் பஞ்சாயத்து 150 இலும் வெளியாகிறது என வைத்துக்கொண்டாலும் ,

மொத்தமாக 100+300+150= 550 அரங்குகள் மட்டுமே.

இந்த எண்ணிக்கையில் வெளியாகும் படங்களுக்கு மட்டுமே நல்ல பார்வையாளர் கூட்டம் வருவதற்கு வாய்ப்புண்டு, மற்றபடி அதிக அரங்குகள் என வெளியிடுவதால் வருமானம் பெரிதாக உயராது.

ஏன் எனில் அருகிலேயே இன்னொரு அரங்கு இருந்தால் பார்வையாளர்கள் பிரிந்து ,அரங்க வருமானம் தான் பகிரப்படும், எனவே வருவாய் அதிகம்  உயராது.

அப்படியே மிக அதிக எண்ணிக்கையில் எல்லா ஊரிலும் ,எல்லா தியேட்டரிலும் வெளியிட்டாலும் 1090 தியேட்டர்களில்  மட்டுமே வெளியிட முடியும்.அப்படி செய்வது சாத்தியமேயில்லை என்று வைத்துக்கொண்டாலும் 1090 தியேட்டர்கள் என வைத்துக்கொண்டால் , 3000 பிரிண்ட்கள் என வெளியிடுவதாக சொல்லுபவர்கள் மற்றவற்றை எங்கு திரையிடுவார்கள்?

தமிழ்நாட்டுக்கு வெளியில் தான் திரையிட வேண்டும், தமிழ்நாட்டுக்கு வெளியில் எல்லாம் தமிழ் படங்களின் வியாபாரம் தியேட்டர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இல்லை, மொத்தமாக தெலுங்கு, மலையாளம் ,இந்தி என விலைப்பேசுவார்கள், பின்னர் அயல்நாடு.

எனவே 2000 பிரிண்ட் என சொல்லி எல்லாம் விற்க இயலாத போது 2000 பிரிண்ட் போட ஆகும் செலவே அதிகம் ஆகும் என்பதால், ஒரு குறிப்பிட்ட வருவாய் தரும் அவுட் சைட் தமிழ்நாடுக்கு எல்லாம் யாரும் 2000 பிரிண்ட் போட வாய்ப்பேயில்லை.

இது வரையில் வெளியான தமிழ்ப்படங்களிலேயே மிக அதிக எண்ணிக்கையில் பிரிண்ட் போடப்பட்டு வெளியான தமிழ்ப்படம் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் மட்டுமே, சுமார் 2500 பிரிண்ட்கள் என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சுமார் 900 பிரிண்ட்கள் வெளியாகி இருக்கக்கூடும், சரியான எண்ணிக்கை உறுதியாக எந்த தளத்திலும் இல்லை, ஆனால் வெளிநாட்டு பிரதிகளின் எண்ணிக்கை 300 என தெளிவாக சொல்லியுள்ளார்கள், இன்றைய தேதி வரையில் உலக அளவில் 300 பிரிண்ட்கள் வெளியான ஒரே தமிழ்ப்படம் எந்திரன் மட்டுமே.

//Tamil Superstar Rajinikanth's fans camped outside cinema halls and queued up at ticket counters since early morning today to buy tickets to his latest venture 'Enthiran (Robot).

Being shown across 300 screens outside India, 'Enthiran' is the largest worldwide release after Hollywood film 'Spiderman'. The movie is being screened in Singapore, Malaysia, UK, China and the US.//

http://www.indianexpress.com/news/rajinikanths-enthiran-magic-grips-malaysia/691605/0

எனவே எந்திரன் தமிழ் நாடு 900 +வெளிநாடு 300 =1200 பிரிண்ட்கள், மற்ற 1300 பிரிண்ட்கள் இந்தியாவின் மற்ற மொழிகளில் வெளியாகி இருக்கும் எனலாம், இதுவே தமிழ் சினிமாவின் மிக அதிகப்பட்ச வியாபார எல்லையாகும், இதனை தாண்டிய எண்ணிக்கையில் வெளியிடுவது , வியாபார ரீதியாக லாபகரமானதாக எந்த தமிழ்ப்படத்திற்கும் இருக்க வாய்ப்பில்லை.

அப்போ 3000 பிரிண்ட் போட்டு உலக அளவில் வெளியிடப்போவதாக சொல்வதெல்லாம் வாயிலேயே வடைசுடும் தொழில்நுட்பமே :-))



சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், விஷ்வரூபம் 2000 தியேட்டர்களில் வெளியாகும் என தெரியவருகின்றனது.

லோகநாயகர் ,இந்து பிசினெஸ்லைனுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

மொத்தம் 2000 பிரதிகள் வெளியாகும் என்றும் ,அவற்றில் 400 தமிழிலும்,அகில இந்திய அளவில் 1200 பிரதிகளும் என்கிறார், அப்படியானால் அயல்நாட்டில் 400 பிரதிகள் என கணிக்கலாம்.

செய்தி:

http://www.thehindubusinessline.com/industry-and-economy/marketing/we-have-to-embrace-technology-and-sail-with-that-kamal-haasan/article4188449.ece

//Have you signed up with all the six DTH players?

No. So far, we have signed up with Airtel, Dish, Videocon and Reliance. They came as a consortium.

How many DTH homes do you expect to watch the movie at this price point?

The DTH players we have tied up with so far, collectively reach around 15 lakh homes. I expect at least 40-50 per cent would watch.

Have you already sold the satellite rights of the film?

Yes, to Jaya TV.

How much do you think Viswaroopam would gross?

I do not want to predict. But I can safely say the movie would gross at least Rs 150 crore.

How many screens are you planning?

Globally 2,000 screens. Of this, 400 in Tamil Nadu, 1,200 in other parts of the country.

Would you be able to rope in so many with this kind of protest?

In politics and business, there is no permanent enemy. The same people who are on my side now were on the other side of the fence when I said we cannot fight satellite channels 20 years ago. This is the way going forward, and we have to embrace technology and sail with that.//

அகில இந்திய அளவில் டிடிஎச் மார்கெட் அளவினை காட்டும் படம்.


இதில் மொத்தம் 48 மில்லியன் டிடிஎச் பயணாளர்கள் என்றாலும் ஆக்டிவ் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை 29 மில்லியன்கள் என்பதை கவனிக்கவும், ஏன் எனில் அவர்கள் தான் உண்மையான  வாடிக்கையாளர்கள், மற்றவை எல்லாம் பயன்ப்பாட்டில் இல்லாத செட் டாப் பாக்ஸ்களின் எண்ணிக்கை எனலாம்.

மேலும் தற்போது டாடா ஸ்கை பின்வாங்கியதாக தெரிகிறது, டிஷ், வீடியோகான், ரிலையன்ஸ் பிக் டீவீ,ஏர் டெல் ஆகிய நான்கிலும் தமிழில் மட்டுமே டிடிஎச் இல் வெளியாகும் என்கிறார்.

தமிழ்நாட்டின் டிடிஎச் வாடிக்கையாளர்களில் முதலிடம் வகிக்கும் சன் டிடிஎச் 75-80% வைத்துள்ளது, அப்படி இருக்கும் போது மற்ற நான்கு சேவைகளிலும் 15 லட்சம் பேர் என சொல்வது மிகையான எண்ணிக்கையாகும்.

ஏன் எனில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த டிடிஎச்  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையே சுமார் 21 லட்சம் தான். அதில் சுமார் 80% சன் டிடிஎச் வசம் என்னில் எஞ்சியவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என ஒரு கணக்கீடு,

//Sun Direct, with 17.5 lakh connections, controls 80% to 85 % of the DTH subscriber base in Tamil Nadu. The balance is shared by other operators like Airtel, Videocon, Tata Sky and Dish TV.//

http://articles.timesofindia.indiatimes.com/2011-09-16/chennai/30164367_1_dth-arasu-cable-tv-entertainment-tax

தமிழ் நாட்டில் 80-85% டிடிஎச் இணைப்புகளை சன் டிவி வைத்துள்ளதாகவும் அதன் எண்ணிக்கை 17.5 லட்சங்கள் என்கிறார்கள்.

80% என்றே எடுத்துக்கொள்வோம், = 17.5 லட்சம் என்றால் 100%?

17.5*100/80=21.875 லட்சங்கள்.

சன் டிவி யின் புள்ளிவிவரங்கள் சரியாக இருக்குமானால் தமிழ்நாட்டில் செப்டம்பர் ,2011 வரையில் 21.875 லட்சங்கள் தான் மொத்த டிடிஎச் இணைப்புகள் மட்டுமே.

சன் டிடிஎச் இன் 17.5 லட்சம் போக மீதம், 4.375 லட்சங்கள்.

அதனை டாடா, டிஷ், ஏர்டெல், பிக் டீவி, விடியோகான் ஆகியோர் சமமாக பிரித்துகொள்வதாக கொண்டால்.

ரிலையன்ஸ், டிஷ், விடியோகான், ஏர்டெல் ஆகியோருக்கு சுமார் நான்கு லட்சம் இணைப்புகளுக்கு கீழ் தான் வரும், இதில் ஆக்டிவ் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை என பார்த்தால் இன்னும் குறையும், அவற்றில் கட்டாயாம் 1000 ரூ செலுத்தி லோகநாயகரின் படத்தை எத்தனைப்பேர் பார்ப்பார்கள்? அதுவும் ஒரே ஒரு முறைக்கு!!!

தியேட்டர் கட்டண உயர்வுக்கு யார் காரணம்?


தியேட்டரில் கட்டணம் உயர்ந்துவிட்டதால் தான் மக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை ,அப்படி வராதவர்களை வர வைக்கவே டிடிஎச்சில் வெளியிடுவதாக லோகநாயகர் சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போல எப்படி என்றுப்பார்ப்போம்.

ஆதிகாலத்தில் எல்லாம் திரைப்பட விநியோகம் சதவீத அடிப்படையில் திரையிடப்படும், விநியோகஸ்தரும், திரையரங்கங்களும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினை  வசூலில் எடுத்துக்கொள்வார்கள், அதாவது சுமார் 40% ,மீதி 60% தயாரிப்பாளருக்கு, இம்முறையில் விநியோகஸ்தர்கள், திரையரங்கங்கள் முதலில் பணம் முதலீடு செய்ய தேவையில்லை.

பின்னர் படம் கிடைக்க போட்டி உருவாகவே ஒரு குறிப்பிட்ட நடிகரின் படம் எடுத்து திரையிட்டால் நல்ல வசூலாகும் என்ற நம்பிக்கையில் விநியோகஸ்தர்கள் முன்னதே தயாரிப்பாளருக்கு பணம் கொடுத்து ஏரியா வாங்க ஆரம்பித்தனர் ,இப்படியாக எம்.ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி பணம் செலுத்தும் முறை உருவாகியது.

(MGR- The Real Box Office King)

எம்ஜிக்கு பிள்ளையார் சுழி போட்டது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்றால் மிகையல்ல, அவரது படங்கள் நிச்சயம் விநியோகஸ்தரை காலை வாரிவிடாது என்ற நம்பிக்கையில் ,படம் துவங்கிய அன்றே ஏரியா விற்பனை ஆகி தயாரிப்பாளர் கையில் பணம் கிடைத்துவிடும், அதை வைத்தே தயாரிப்பாளர்கள் படத்தினை எடுத்து முடிப்பார்கள்.

இதனால் எம்.ஜி.ஆர் என்பதையே மினிமம் கியாரன்டி .ராமசந்திரன் என சொல்வார்களாம்.

விநியோகஸ்தரிடம் நியாயமான அளவுக்கு எம்ஜி வாங்கி தயாரித்தவரையில் இம்முறையில் யாருக்கும் நட்டம் வரவில்லை. பின்னர் நடிகர்கள் சம்பளம் கோடிகளில் போய் தயாரிப்பு செலவு அதிகம் ஆனது ,எனவே போட்டக்காசினை எடுக்க தயாரிப்பாளர் அதிக எம்.ஜி கேட்க , விநியோகஸ்தர்களும், திரையரங்குகளிடம் அதிக எம்ஜி தொகை கேட்கலாயினர்.

எம்ஜி தொகைக்கு ஏற்ப வசூலானால் பரவாயில்லை நூற்றுக்கு 90 படங்கள் ஒரு வாரம் கூட ஹவுஸ்ஃபுல் ஆக ஓடுவதில்லை பின் எப்படி திரையரங்குகள் கட்டிய எம்ஜி ஐ எடுக்க முடியும் , எனவே ஓடும் ஒரு வாரத்திற்குள் போட்ட காசை எடுக்க அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூலிக்க திரையரங்குகள் முற்பட்டன. இப்படியாகத்தான் திரையரங்குகளில் கட்டணம் உயர்ந்தது.

மலிவாக படம் பார்க்க நினைக்கும் ரசிகர்கள் திருட்டு டிவிடி பக்கம் போனார்கள், தாய்குலங்கள் தொலைக்காட்சி சீரியல்களில் மூழ்கினார்கள் ,இதனால் பல திரையரங்குகளும் காற்றாடின, 2000 ஆண்டு வாக்கில் தமிழ் நாட்டில் சுமார் 2000 அரங்குகள் இருந்தன இன்று அவை 1,197 என்ற எண்ணிக்கையில் சுருங்கிவிட்டன, இன்னும் சில ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் கீழ் போய்விடும் எனலாம்.

சிறிய படங்களை போட்டாலும் கட்டணம் குறைவாக வைப்பதில்லை என்கிறார்கள், உண்மை தான் ஆனால் எந்த சிறிய படத்தயாரிப்பாளரும் குறைவான கட்டணம் வைத்து பொறுமையாக வசூலீக்க நினைப்பதில்லையே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போட்ட முதலை எடுக்க நினைக்கிறார்கள்.

ஏன் எனில் திரையரங்க வருமானம் என்பது ஒரு நாள் அரங்க வாடகை என நிர்ணயித்த கட்டணம் மட்டுமே, டிக்கெட் விலை கூட இருந்தாலும், குறைவாக இருந்தாலும் அத்தொகை மட்டுமே அரங்க உரிமையாளருக்கு, மற்றவை எல்லாம் விநியோகம் செய்தவர் மூலம் தயாரிப்பாளருக்கு போய்விடும்.

தினசரி வசுலின் அடிப்படையில் பணத்தினை பெறுவது ரிஸ்க் என எம்ஜியில் விற்கிறார்கள், எம்.ஜி எடுக்க முதல் மூன்று நாள் ஓப்பனிங்க் கலெக்‌ஷன் தான் வழி எனவே திரையரங்குகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன.

எனவே திரையரங்கில் கட்டணம் குறைய வேண்டுமானால் தயாரிப்பாளர் தான் முதல் முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வளவு பேசும் லோகநாயகர் , திரையரங்குகள் அரசு நிர்ணய கட்டணம் மட்டும் வாங்கிக்கொண்டு எனது படத்தினை திரையிடுங்கள், எத்தனை நாள் ஓடுதோ அதற்கேற்ப எனக்கு வசூலாகட்டும் என சொல்ல வேண்டியது தானே?

மேலும் தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி இல்லை என சட்டம் இருக்கிறது, கண்டப்படி பெயரை வைத்துவிட்டு தமிழ் என சொல்லி கேளிக்கை வரிப்பெரும் தயாரிப்பாளர்கள், கேளிக்கை வரி தள்ளுபடிக்கு இணையான அளவுக்கு கட்டணம் குறைக்க சொல்ல வேண்டியது தானே, ஆனால் அப்பணத்தினை எடுத்து செல்வதும் தயாரிப்பாளர்களே அல்லவா?

லோகநாயகர் , விஷ்வரூப் என இந்தியில் பெயர் வைத்துள்ளார், அதனை தமிழில் "விஸ்வரூபம்" என எழுதிவிட்டால் தமிழ்ப்பெயர் என ஏதாவது சொல்லி கேளிக்கை வரி வாங்கிவிடுவார் ,அதற்காக தான் பம்மிக்கொண்டு மம்மியைப்பார்த்ததும், சேட்டலைட் உரிமையை ஜெயா டீவிக்கு கொடுத்ததும் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.

லோகநாயகர் , கேளிக்கை வரிக்கு ஏற்ப கட்டணம் குறைப்பேன் என சொல்லி திரையிட்டால் திரையரங்குகள் எதிர்க்க போவதில்லை, ஏன் எனில் எம்ஜியில் வெளியிடாமல் பெர்செண்டேஜில் வெளியிடுகிறேன், திரையரங்குகளுக்கு நஷ்டம் வராது என சொல்கிறார் அல்லவா , செய்ய வேண்டியது தானே?

DTH EFFECT:


# டிடிஎச் இல் வெளியிடுவது புரட்சி , அது திரையரங்குகளுக்கு வர இயலாதவர்களுக்கு வரப்பிரசாதம் என்கிறார்கள், ஆனால் அது வருங்கால சாபமாக முடியும் எனலாம்,

இன்று வரையில் தமிழ்நாட்டில் திரையரங்க நுழைவு கட்டணம் ,சினிமாட்டோ கிராபி ஆக்ட் 1939 படியே அரசு நிர்ணயம் செய்கிறது, இதனால் மல்டிபிளெக்சில் 120 ரூ அளவிலும் நகரப்பகுதியில் 50 ரூ எனவும் அரசு நிர்ணய கட்டணம் உள்ளது.

மும்பை,பெங்களூரில் எல்லாம் மல்டிபிளெக்சில் 250 ரூ அளவிலும்,சாதாரண அரங்கில் 100 ரு போல இருக்கிறது.

ஆந்திராவில் நம்மை விட கட்டணம் குறைவு.

தியேட்டரில் கட்டணம் கூடுதல் என்பதால்  மக்கள் வரவில்லை என்றால், டிடிஎச் இல் ஆயிரம் ரூ 1000 கட்டணம் வைத்தால் மட்டும் அதிலும் பார்த்துவிட்டு பின்னர்  தியேட்டருக்கும் எப்படி மக்கள் வருவார்கள், ஏற்கனவே சுளையாக ஆயிரம் ரூபாய் செலவாகிவிட்டது ,பின்னர் தியேட்டருக்கு செல்ல மீண்டும் ஆயிரம் ரூபாய் செலவிட யாரால் முடியும், மன்னு மோகன் சொன்னது போல பணம் என்ன மரத்திலா காய்க்கிறது, ஒரே வாரத்தில் ஒரே படத்துக்கு இரு முறை ரூபாய் இரண்டாயிரம் செலவு செய்ய ?

டிடிஎச் இல் படம் ரிலீசுக்கு முன்னர் பார்ப்பவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும், படம் நன்றாக இருந்தால் பக்கத்து வீட்டுக்காரனிடம் கூட நல்லா இருக்குனு சொல்ல மாட்டான்,ஆனால் படம் மோசமா இருந்துச்சுன்னா, முகநூல்,துவித்தர், எஸ்.எம்.எஸ் ,பிலாக்னு எல்லா இடத்திலும் காரித்துப்பி முதல் நாளே நெகட்டிவ் விமர்சனம் செய்து , கல்லாப்பெட்டிக்கு குண்டு வைத்துவிடுவான் :-))

ஆனால் பொது மக்கள் என்ன செய்வார்கள் எனில், தியேட்டர் போனால் செலவாகும், டிடிஎச் இல் பார்த்தால் இன்னும் செலவாகும்,எனவே  டிடிஎச் மூலம்  HD video தரத்தில் உருவாக்கப்பட்டு  கிடைக்கும் திருட்டு டிவிடி பார்ப்போம் என வீட்டில் இருந்து தரமான திருட்டு டிவிடி பார்ப்பார்கள் :-))

ஆனால் எது எப்படியோ திரையரங்க கட்டண நிர்ணயம் என்பது அரசின் கையில் இருப்பதால் ,நினைத்தப்படி கட்டணத்தினை அதிகாரப்பூர்வமாக மற்றவர்களால் உயர்த்த முடியாத கடிவாளம் உள்ளது.

ஆனால் டிடிஎச் இல் என்ன கட்டணம் நிர்ணயம் செய்வது என்ற கட்டுப்பாடு அரசிடம் இல்லை. டிடிஎச் மற்றும் படத்தயாரிப்பாளர் சேர்ந்து நிர்ணயிக்கலாம், அதனால் தான் லோகநாயகரின் படத்துக்கு ஒரே முறை பார்க்க 1000 ரூ என்றெல்லாம் அநியாயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாளை சூப்பர் ஸ்டார் படம் டிடிஎச் இல் வெளியானால் என்ன செய்வார்கள், 1,500 ரூ என்பார்கள், பின்னர் விஜய் ,அஜித், சூர்யா எல்லாம் நாங்க மட்டும் இளைத்தவர்களா எனப்போட்டி போட்டு விலை வைக்கக்கூடும்.

அதாவது அரசிடம் இருக்கும் கட்டண நிர்ணய அதிகாரத்தினை எடுத்து டிடிஎச் ஆபரேட்டர்கள் எனப்படும் பெரு முதலாளீகள் கையில் கொடுக்கிறார் லோகநாயகர், இது வருங்காலத்தில் வெற்றியடைந்தால் பணக்காரர்கள் மட்டுமே திரைப்படம் பார்க்கும் சூழலையும் உருவாக்கலாம்.

வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் வந்தால் ஆரம்பத்தில் விலையை குறைத்து போட்டியாளர்களை அழித்துவிட்டு , பின்னர் விலை உயர்த்திவிடுவார்கள் என பூச்சாண்டிக்காட்டுவோர்களும், ஆரம்பத்திலேயே விலையை அதிகமாக வைக்கும் டிடிஎச் பின்னாளில் போட்டியாளர்களான திரையரங்குகள் இல்லாத நிலையில் இன்னும் விலை ஏற்றி நுகர்வோர்களை கட்டுப்படுத்தும் என்பதை உணராமல் ஆஹா  நல்ல முயற்சி என்கிறார்களே, நேரத்துக்கு ஏற்ப கொள்கை போல :-))

# திரைப்பட வியாபார வருவாய் என்பது இது நாள் வரையில் , தியேட்டர்கள், அதன் ஊழியர்கள், போஸ்டர் ஒட்டுபவர்கள்,விநியோகஸ்தர்கள்,அதனோடு தொடர்புடைய ஊழியர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் பகிரப்பட்டு ,அனைவருக்கும் வாழ்வாதாரமாக விளங்கியது.

டிடிஎச் முறை முழுக்க தலையெடுத்தால் இம்முறையில் வருவாய் டிடிஎச் ஆபரேட்டர்கள் எனும் பெரு நிறுவனத்திற்கும், தயாரிப்பாளருக்கும் இடையில் மட்டுமே பகிரப்படும் நிலை  உருவாகும்.

# வெளிநாட்டிலும் தமிழ்ப்படங்கள் டிடிஎச் இல் வெளியிடலாம் ,எனவே தமிழ்ப்படங்களுக்கு நல்ல வருவாய் பெருகும் என மனக்கோட்டை கட்டுகிறார்கள், ஆனால் வெளிநாட்டில் டிடிஎச் இல் வீடியோ ஆன் டிமாண்ட் முறையில் உள்ள சட்டம் என்ன சொல்கிறது என்றால், குறிப்பிட்ட மொழியில் டிடிஎச் சேவை ஒளிப்பரப்ப உரிமை வாங்கியவர்கள், அம்மொழியில் உள்ள மீடியாவைத்தான் வீடியோ ஆன் டிமாண்ட் முறையில் ஒளிபரப்பலாம் என்கிறது.

ஆங்கில டிடிஎச் சேவையில் ஆங்கிலப்படங்களும் ,பிரெஞ்ச் டிடிஎச் எனில் பிரெஞ்ச் படங்களுமே ஒளிபரப்பலாம், தமிழில் ஒளிபரப்பினால் டிடிஎச் லைசென்ஸ் ரத்து ஆகிவிடும்.

# சேட்டிலைட் உரிமம் என ஒரு தொலைக்காட்சிக்கு வழங்கும் போது ,அதன் டிடிஎச் உரிமம் அதில் அடங்கிவிடுவது போல தான் தற்போதுள்ளது, எனவே ஜெயா டீவிக்கு சேட்டிலைட் உரிமம் வழங்கப்பட்டிருப்பதால் அவர்கள் எதிர்த்தால் டிடிஎச் இல் ஒளிபரப்ப இயலாது. ஒரு வேளை தனியே பிரித்து உரிமம் வழங்கினாரா என தெரியவில்லை.

பிரச்சினை உருவாக்குவது என்றால் , டிடிஎச் உம் சேட்டிலைட் ஒளிபரப்பு எனவே , எங்களுக்கு விற்ற பின் டிடிஎச் இல் ஒளிபரப்ப கூடாது என ஜெய டீவி சொன்னால் , டிடிஎச் திட்டமே எடுபடாது.

இதே போல தொலைக்காட்சி உரிமம் பெறுபவர்கள் சேட்டிலைட் உரிமம் , டிடிஎச் உட்பட அனைத்தும் என்றால் , பெரிதாக வியாபாரம் டிடிஎச் இல் இருக்கு என சொல்வதும் அடிப்பட்டு விடும்.

---------------

ஒலி நுட்பம்:

(Rajni -the Mass)

சிவாஜி -3டி இல் இம்மாதம் மீண்டும் வெளியானதை அனைவரும் அறிவீர்கள், அதோடு அல்லாமல் டால்பி அட்மோஸ் -64 சேனல் 3டி ஆடியோவில் வெளியாகியுள்ளது, இந்தியாவில் சென்னை சத்யம் -செரின் அரங்கிலும், மும்பையில் ஒரு அரங்கிலும் மட்டுமே டால்பி அட்மோஸ் நிறுவப்பட்டுள்ளது. இது ஆரோ 11.1 3டி விட பல சேனல்களில் 3டி ஆடியோவை அளிக்க வல்லது, இதனை 3டி இம்மெர்சிவ் சவுண்ட் என்கிறார்கள்,அப்படி இருந்தும் பெரிதாக இவ்வொலி அமைப்பில்  உருவான முதல் தமிழ் படம் என விளம்பரப்படுத்திக்கொள்ளவில்லை, மேலும் லைப் ஆஃப் பை என்ற படமும் டால்பி அட்மோசில் தான் வெளியானது அவர்களும் நாங்கள் தான் சிறப்பான ஒலியுடன் படம் காட்டுகிறோம் என சொல்லிக்கொள்ளவில்லை.

சிவாஜி பழைய படம் ஆயிற்றே அதற்கு எப்படி டால்பி அட்மோசில் மீண்டும் ஒலிச்சேற்கை செய்திருப்பார்கள், புதிதாக ரீ-ரிக்கார்டிங் ஏ.ஆர் .ரஹ்மான் செய்திருப்பாரா என்றெல்லாம் யாருக்கும் கேள்வியே எழவில்லையா?

உண்மையில் புதிய ரீ -ரிக்கார்டிங் எல்லாம் செய்வதில்லை, எல்லாம் பழைய கள் புதிய மொந்தை டெக்னிக் தான் ,5.1 ஆடியோ டிராக்கினை மீண்டும் அடோப் பிரிமியர் புரோ டூல்ஸ்,MAC pro tool போன்ற ஒலி சேர்க்கை மென்பொருளில் கொடுத்தால் மீண்டும் 5.1 டிராக் ஆக தனியாக பிரித்து கொடுக்கும்(ஆனால் பழைய PCM track போல இருக்காது)  , அதனை அட்மோசின் 64 டிராக்கிற்கு ஏற்ப மறு ஒலிச்சேர்க்கை ,செய்து ,அட்மோஸ் கோடக்கில் கொடுத்தால் 64 டிராக் ரீ-ரிக்கார்டிங் தயார்.

உண்மையில் 64 டிராக் என்பதெல்லாம் கணினி மென்பொருள், கோடிங், மற்றும் மெட்டா டேட்டா வைத்து உருவாக்குவதே , இவ்வாறு பழைய ஆடியோ டிராக்கினை எடிட்டிங்கில் மாற்றுவது அப்ஸ்கேலிங் என்பார்கள்,ஆனாலும் புதிதாக ரீ-ரிகார்டிங் செய்த அளவுக்கு இருக்காது,முழுதாக பின்னர்  இன்னொரு பதிவில் காணலாம்.

இதை விட இன்னொரு எளிய வழி இருக்கிறது, எந்த பழைய ஒலிச்சேர்க்கை கோப்பையும் டால்பி அட்மோஸ்,ஆரோ போன்ற ஒலிச்சேர்க்கை கருவியில் கொடுத்தாலும் தானாகவே பல சேனல் ஆடியோ ஆக மாற்றிவிடும், இதனை அப்மிக்ஸிங் என்பார்கள்.

எனவே தற்போது இந்தியாவில் ஆரோ,அட்மோஸ் ஆகிய ஒலிச்சேர்க்கையில் அனுபவம் கொண்ட ஆடியோ ரெக்கார்டிங் சென்டர்களே இல்லாத சூழலில் அனைவரும் அப்மிக்ஸிங் செய்திருக்கவே வாய்ப்புள்ளது, எனவே தான் சிவாஜி 3டி அட்மோஸ் படம் அமைதியாக வெளியாகியுள்ளது எனலாம், ஆனால் லோகநாயகர் ,படத்தினை விளம்பரப்படுத்த கொஞ்சம் அதிகமாகவே ஆரோ 11.1 3டி என சவுண்டு கொடுக்கிறார் :-))

அடுத்தப்பதில் ஆரோ 3டி, டால்பி அட்மோஸ் போன்ற மல்டி சேனல் ஆடியோ முறைகளை ஒப்பிட்டு அவை எல்லாம் வெறும் எண்ணிக்கை விளையாட்டே, உண்மையான ஒலிதரத்தின் அளவில் பெரிதாக ஏற்பட்ட முன்னேற்றம் என்ன என்பதை காணலாம்.
----------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து பிசினெஸ் லைன்,இந்தியன் எக்ஸ்பிரஸ்,dreamdth.com, தமிழக வருவாய் துறை, விக்கி, கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
-------------------------------------------------